கார்த்திகா கணேசன் பரத நாட்டிய அரங்கேற்றம்
ஆகஸ்ட் 12, 2007 அன்று கார்த்திகா செல்வ கணேசனின் பரதநாட்டிய அரங்கேற்றம் கபர்லி அரங்கத்தில் நடந்தேறியது. குரு விஷால் ரமணி அவர்களின் ஆசிகளுடன் கார்த்திகாவின் அரங்கேற்றம் செவ்வனே நடைபெற்றது.

பாரம்பரிய புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் 'கணேசா' (கௌளை) பதத்துக்கும் கானடா ராகத்தில் ஜதிஸ் வரத்துக்கும் அற்புதமாக ஆடினார். ஜதிஸ்வரம் விறுவிறுப்பாக அமைந்திருந்தது.

நிகழ்ச்சிக்கு மகுடம் போல் அமைந்தது கார்த்திகா ஆடிய ராகமாலிகை வர்ணம் தண்டாயுதபாணி பிள்ளை அவர்கள் இயற்றியது. குரு விஷால் ரமணியின் நடன அமைப்பின் திறமை அதில் முழுவதுமாக வெளிப்பட்டது. கார்த்திகாவின் கால்களில் நல்ல தீர்மானமும், முகத்தில் பாவமும் அபிநயமும் எல்லாம் சேர்ந்து பார்ப்போரின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டது.

இடைவேளைக்குப் பின் 'சக்தி' (கௌளை) பாடலுக்கு கார்த்திகா துர்க்கையாகவே உருமாறி அமைதியையும் கோபத்தையும் மாறிமாறி வெளிப்படுத்தினார். 'தீராத விளையாட்டுப் பிள்ளை' (ராகமாலிகை) பதத்துக்கு கண்ணனின் குறும்புகளையும், அவனுக்காகக் காத்திருக்கும் கோபிகைகளின் விரகத்தையும், பக்தியையும், லீலைகளையும் அற்புதமாகச் சித்திரித்தார். பிருந்தாவன சாரங்கா ராகத் தில்லானா வெகு அழகு. 'கண்ணன் வருகின்ற நேரம்' (செஞ்சுருட்டி) பதத்துக்கு இயற்கையே கண்ணனது வருகைக்காகக் காத்திருப்பது போல் கார்த்திகா நடனம் ஆடியது அவர் ஸ்ரீக்ருபா நடன அகாடமியின் நேர்த்தியான தயாரிப்பு என்பதைப் பறைசாற்றியது.

இந்தியாவில் இருந்து வந்திருந்த மதுரை R.முரளிதரன் (நட்டுவாங்கம்), M. தனம்ஜயன் (மிருதங்கம்), முரளி பார்த்தசாரதி (வாய்ப்பாட்டு), N. வீரமணி (வயலின்) ஆகிய கலைஞர்கள் நிகழ்ச்சியை மிளிரச் செய்தனர்.

நவீன் நாதன்

© TamilOnline.com