மிலன் நடத்திய கொடை நடை
செப்டம்பர் 27, 2007 அன்று கனெக்டிகட் மாநிலத்து வறிய குழந்தைகளுக்காக, 'மிலன்' என்ற இந்திய அமைப்பு 'Walkthon' மூலம் நிதி திரட்டும் விழா ஒன்றை நடத்தியது. காலை 9:30 மணிக்கு ஹார்ட்·போர்டு நகரத்தின் பிரதான சாலையில் கனெக்டிகட் ஆற்றின் அருகில் வண்ண வண்ண உடைகளில் பெரியோரும் குழந்தைகளும் திரண்டனர். எல்லோரும் இரண்டு மைல் தூரம் நடந்தார்கள். இதன் மூலம் திரட்டிய நிதி, கனெக்டிகட் மாநிலத்து வறுமைக் கோட்டின் கீழ் உள்ள சிறுவர்களின் பசி ஆற்றப் பயன்படுத்தப் படுகிறது. இதில் பல்வேறு இந்திய மாநிலங்களின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் கடைகள் பரப்பி அழகு சேர்த்தனர். நாதஸ்வர இசையுடன், காஞ்சிபுரம் பட்டு புடவையுடன் தமிழகத்தின் கடை களை கட்டியது. ஒருபுறம் நகை, புடவை, துணிக்கடைகளில் அதிவேக விற்பனை நடக்க, மறுபுறம் இந்திய உணவகங்களில் விற்பனை நடந்தது.

மதியம் ஒரு மணிக்கு மாறுவேடப் போட்டி தொடங்கியது. 3 வயதுவரை, 3-7 வயது, 8-11 வயது என மூன்று பிரிவுகளாகச் சிறாருக்கான போட்டிகள் நடந்தன. ஜான்சி ராணியும், ராதா கிருஷ்ணரும் வலம்வரப் போட்டி சூடு பிடித்தது. எட்டு வயது அபிநயா நிரஞ்சன் சிவபெருமானாக வந்து ருத்ர தாண்டவம் ஆடி முதல் பரிசை வென்றார். மாகாளியாக வந்த 5 வயது நிகிதா ஸ்வாமி தத்ரூபமாக வந்து இரண்டாவது பரிசைத் தட்டி சென்றார். மிகுந்த கோலாகலமான இந்தக் கொடை நடை சமூக நலத்துக்கு உதவியது என்ற மன நிறைவோடு நிறைவெய்தியது.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com