வாபக - வா பக்கத்தில் கற்கலாம்
எத்தனையோ பெற்றோர்கள் தமது குழந்தைகள் தமிழ் கற்றுக் கொண்டால் நல்லது என்று எண்ணுகிறார்கள். ஏதோ காரணங்களால் கற்றுத் தர முடியாமல் போகிறது. அவர்களுக்கு இக்கட்டுரை கொஞ்சம் உதவியாக இருக்கும் என்பது என் எண்ணம். அத்தகைய பெற்றோர்கள் மனதில் கொள்ள வேண்டிய மந்திரந்தான் 'வா பக்கத்தில் கற்கலாம்' என்பது. சுருக்கமாக 'வாபக'!

'வாபக' என்பதை இப்படியும் விரிக்கலாம். ஒரு மொழியைக் கற்க/கற்பிக்க வேண்டுமானால், அதன் முறையான படிகளாக வாசித்தல், பயிலல், கற்றல் ஆகியவற்றின் முதல் எழுத்துக்களால் உண்டாவதும் வாபக தான். எப்படிச் செய்யலாம் என்று பார்க்கலாம்.

வாசிப்பதற்கு முன்

முதலில் தமிழ் எழுத்துக்களை (உயிர் எழுத்துக்கள் (12), மெய் எழுத்துக்கள் (18), உயிர்மெய் எழுத்துக்கள் (216), ஆய்த எழுத்து (1) நன்றாகச் சொல்லவும் எழுதவும் கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு எழுத்தின் ஒலியையும், ஒலியின் அளவையும் (குறில், நெடில்) மனப்பாடல் செய்யும்படிக் கற்றுத் தர வேண்டும். ஒலியின் அளவை 'மாத்திரை' என்ற அளவுகோலில் சொல்லலாம். கார் ஓட்டும்போது தன்முன்னே செல்லும் காரைப் பின்தொடரும் தூரத்தை நிர்ணயிக்க எப்படி 2 வினாடிகள் முறையை (2 seconds rule. One thousand one, one thousand two..) பயன்படுத்துகிறோமோ அது போல எழுத்தின் ஒலி அளவை 'மாத்திரை' என்ற அளவுகோலில் சொல்லாம். ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண்ணிமைக்கும் நேரம் அல்லது ஒரு சொடக்கு நேரம் ஆகும். இதன்மூலம் அ (1 மாத்திரை), ஆ (2 மாத்திரைகள்) என்று குறிலையும் நெடிலையும் வேறுபடுத்திச் சொல்லித் தரலாம். இதற்கு ஹ¥ஸ்டன் பாரதி கலைமன்றத்தின் முதல் நிலை, இரண்டாம் நிலை பாடப்பகுதியைப் பயன்படுத்தலாம். இவ்வாறு எழுத்துக்களைக் கற்றபின் வாசித்தல் நிலைக்குச் செல்லலாம்.

குழப்பும் எழுத்துக்கள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றை திருப்பித் திருப்பிச் சரியாகச் சொல்லிப் பழக வேண்டும்.

ல, ள, ழ
பல், முள், தமிழ், கல், வாள், தாழ்

ந, ன, ண
நன்றி, பன்றி, தண்ணீர், சாந்தி

ர, ற
மரம், மறதி, பிறகு, கரம்


வாசித்தல்

தனிப்பட்ட எழுத்துக்களின் உச்சரிப்பை மனதிற்கொண்டு முதலில் இரண்டு எழுத்து வார்த்தைகள், பின்னர் மூன்று எழுத்து வார்த்தைகள் என்று வார்த்தைகளை எழுத்துக் கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுக்கலாம். 'சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்' என்பது போல நாவில் எழுத்துகளையும், வார்த்தைகளையும் உச்சரித்துப் பழகிக் கொண்டே இருந்தால் தான் தமிழ் வாசிப்பதில் முன்னேற்றம் காண முடியும். பின்னர் 4, 5 எழுத்து வார்த்தைகளை வாசித்துப் பழக வேண்டும். இந்நிலையை முடிக்கும் தறுவாயில் எந்த வார்த்தையையும் எழுத்துக்கூட்டி வாசிக்க முடியும் என்ற நிலைக்குக் குழந்தைகள் முன்னேற வேண்டும். இந்நிலையில், வாசிக்கும் வார்த்தையின் பொருள் (அர்த்தம்) தெரிந்திருக்க வேண்டு மென்பது அவசியமில்லை. இந்நிலையை முடிப்பதற்கு பாரதி கலைமன்றப் பள்ளியின் 3, 4வது நிலைகளுக்கான பாடப்பகுதிகளைப் பயன்படுத்தலாம்.

பயிலல்

இந்த நிலையில் சின்னச் சின்ன வாக்கியங்களை முதலில் வாசிக்கவும் பின்னர் கொஞ்சம் விரைவாகப் படிக்கவும் பயிற்சி தர வேண்டும். சின்ன வாக்கியங்களைப் படித்துப் பழகும் போது அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையின் பொருளும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. பிழைகளைக் குறைத்துக் குறைத்து இறுதியில் பிழையில்லாமல் வாசிக்கக் கற்றுக் கொடுப்பதே முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும். ஓரளவுக்குச் சரளமாக வாசிக்கத் தெரிந்தபின், ஒரு முழு சொற்றொடரின் (sentence) பொருளையோ, அல்லது ஒரு முழுப் பத்தியின் (paragraph) பொருளையோ ஆங்கிலத்தில் குழந்தைகளைச் சொல்ல வைக்கலாம். இதற்கு சிறிய, சுவையான கதைகளைத் தேர்வு செய்து சொல்லித் தரலாம். இதன் மூலமாகக் குழந்தைகளுக்கு தமிழ்க் கதைகள் படிக்கும் ஆர்வத்தை வளர்க்கலாம். இதற்கு ஒரு உதாரணம் இங்கே தருகிறேன்..

நாயும் எலும்பும்
(சிறுகதை)

ஒருநாள் ஒரு நாய் கறிக்கடைக்குப் போய் எலும்பு ஒன்றை எடுத்துக் கொண்டு ஓடியது. போகிற வழியில் ஓர் ஆறு இருந்தது. அந்த ஆற்றின் மேல் ஒரு பாலம் இருந்தது. நாய் பாலத்தின் மேலிருந்து கீழே எட்டிப் பார்த்தது. ஆற்றுத் தண்ணீருக்குள் ஒரு நாய் வாயில் எலும்புடன் இருப்பது போல் தோன்றியது. அப்போது அந்த நாய் தனக்குள் 'ஆற்றில் ஒரு நாய் இருக்கிறது. அதன் வாயில் உள்ள எலும்பைப் பிடுங்க வேண்டும்' என்று நினைத்தது. உடனே வாயைத் திறந்து தண்ணீருக்குள் இருந்த நாயைப் பார்த்துக் குரைத்தது. உடனே வாயில் இருந்த எலும்பு தண்ணீருக்குள் விழுந்தது. பின்னர் நாய் வருத்தத்துடன் வீட்டுக்குப் போனது.


தமிழ்English
நாய்Dog
நாள்Day
கறிக்கடைButchor place
எலும்புBone
ஓடியதுIt ran
வழிPath, Way
ஆறுRiver
மேல்On top
பாலம்Bridge
கீழேDown
எட்டிப் பார்த்ததுLooked over
தண்ணீர்Water
வாய்Mouth
பிடுங்க வேண்டும்Take away
திறந்துOpen
குரைத்ததுBarked
விழுந்ததுFell down
வருத்தம்Sad
வீடுHouse
போனதுwont


பொருள் விளக்கப் பயிற்சி:
படித்த கதையை ஆங்கிலத்தில் சொல் (Tell the story in English)

கேள்விகள் (முடிந்த வரை தமிழில்):
1. இந்தக் கதையின் மூலம் நீ தெரிந்து கொண்ட கருத்து என்ன?
2. நாய் எதற்காகக் குரைத்தது?

சரியான தமிழ்ச்சொல்லைச் சொடுக்கி கண்டுபிடி:

Dayவிடை: 
நால்நாழ்நாள்ணாழ்னாள்
Bridgeவிடை: 
பாழம்பாலம்பாளம்பலாம்
Boneவிடை: 
எழும்புஏழும்புஎளும்புஎலும்பு
Butcheryவிடை: 
கரிக்கடைகரீக்கடைகறீக்கடைகறிக்கடை
Waterவிடை: 
தந்நீர்தன்னீர்தண்ணிர்தண்ணீர்தண்நீர்
Riverவிடை: 
அறுஅருஆறுஆறூஅறூ


சொற்களைப் பொருத்துக (Find the match):
1. தோன்றியது மனதுக்குள்
2. தனக்குள் பறிக்க
3. பிடுங்க பாதை
4. வழி தெரிந்தது

எதிர்ச்சொற்கள்:
பிடுங்கி X குத்தி
வேண்டும் X வேண்டாம்
வருத்தம் X மகிழ்ச்சி (சந்தோஷம்)
எடுத்து X கீழே போட்டு
போனது X வந்தது
தோன்றியது X மறைந்தது
மேலே X கீழே
ஓடியது X நடந்தது
திறந்தது X மூடியது
இருக்கிறது X இல்லை

பேசுவதற்கான தலைப்புகள் (முடிந்தவரை தமிழில்)
நாய், பாலம், வீடு, ஆறு, எலும்பு, தண்ணீர்

இதோடு கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று காலங்கள் பற்றியும், உயர்திணை, அ·றிணை பற்றியும், ஒருமை, பன்மை பற்றியும் உதாரணங்கள் காட்டி சொல்லித் தரலாம்.

மேலே கொடுத்த பாடப்பகுதியை ஒரு வகுப்பில் (60-90 min) சொல்லித் தரலாம். இன்னும் பல சிறுகதைகளை 'தென்றல்' இளம்தென்றல் பகுதியிலிருந்து பெற்று, மேற்சொன்ன முறைப்படி பயிற்சிகளை அமைத்து ஒவ்வொரு வாரமும் சொல்லித் தரலாம்.

கற்றல்
இந்த நிலையில் குழந்தைகள் நல்ல முறையில் தமிழ் வாசிக்கக் கற்றுக் கொண்டு பின்னர் தானாகவே புத்தகங்களை எடுத்துக் கதைகள் படிக்கச் செய்வதாகும். இது சமயம், படிக்கும் வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்தாக வேண்டும். பின்னர் படித்த பகுதிகளைப் பயன்படுத்தி கட்டுரைகள் எழுதுவது, ஒரு பொருளைப் பற்றிப் பேசுவது போன்றவற்றைச் சொல்லித் தரலாம். முதலில் சின்னச் சின்ன வாக்கியங்களைக் கொண்ட கதைகளையும் பின்னர் போகப் போக பெரிய வாக்கியங்களை உள்ள கதைகளையும் தேர்வு செய்த தமிழ் கற்கும் திறனை படிப்படியாகக் கூட்டலாம். பல இணையதளங்களில் குழந்தைகளுக்கான சிறுகதைத் தொகுப்பு களைப் பெறலாம்.

ஆகவே மேற்சொன்ன முறைகளைப் பின்பற்றி குழந்தைகளைப் பக்கத்தில் வைத்து தமிழ் படிக்கவும் பேசவும் கற்றுக் கொடுக்கலாம். இதன்படி நமது குறிக்கோளை அதாவது நமது குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தரும் எண்ணத்தை நிறைவேற்றலாம். தமிழ் கற்பதற்கு பிள்ளைகளைத் தமிழ் பள்ளிகளுக்கு அனுப்புவது நல்லது. அங்கு மற்றக் குழந்தைகளோடு பேசிப் பழகும் வாய்ப்பு உண்டு. தமிழ்ப் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்ற காரணத்தால் தமிழ் கற்றுக் கொடுப்பதை நிறுத்த வேண்டாம். 'வா பக்கத்தில் கற்கலாம்' முறைப்படி வீட்டிலேயே சொல்லிக் கொடுக்கலாம். இதனால் குழந்தைகளுடனான நெருக்கமும் வளரும்.

பயனுள்ள இணையதளங்கள்:http://ccat.sas.upenn.edu/plc/tamilweb

இரா. கோபாலகிருஷ்ணன்

© TamilOnline.com