ஸ்ரீலஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருளுரை
எல்லோர்க்கும் பொதுவானவர் வியாசர். வியாசபகவான் வேதங்களை எல்லாம் நன்கு சுலபமாக வகுத்து கொடுத்தவர். இவரை சிறப்பிக்க, இவரது சிறப்பை உணர்த்த செய்வது தான் வியாஸபூஜை. இதை தொடர்ந்து அனுஷ்டிக்கப்படுவது தான் சாதுர்மாஸ்ய விரதம்.

புராண காலத்தில் இருந்து இன்றுவரை வேதமே நமக்கு முக்கியமாக இருக்கிறது. வேதம்.. வான் எங்கம் பரவியுள்ளது. ரேடியோ அலைகள் ஆகாயத்தில் பரந்திருப்பது போல என்றும் சொல்லலாம். வானொலி (ரேடியோ) இசைபெட்டியை விசையை திருப்பியவுடன் ஒலி அலைகள் நமக்கு கேட்கின்றன நாம் அதை கேட்டு ரஸிக்கிறோம்.

வேத ஒலியோ.. எங்கும் நிறைந்த நாத பிரம்மமாய் பரந்திருக்கிறது. காற்றுடன் கலந்து பரவி, நிரவி இருக்கின்றது. வேதம் நித்தியமானது! சாசுவதமானது! அதற்கு என்றுமே அழிவில்லை. வேதம் மனிதர்களால் ஆக்கப்பட்டதில்லை! எனவே அபெளருஷேயம் என்று போற்றப்படுகிறது. எந்நேரமும் ஒலி வடிவமாய் அது காற்றில் நிறைந்திருக்கிறது. இதை நாம் ஞானத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

வேத ஒலிகள் நமக்கு புரிவதில்லை. ரேடியோ அலைகளை ரேடியோ பெட்டி மூலம் நாம் அறிந்து, புரிந்து கொள்வது போல, வேதங்களை.. வேதங்கள் அறிந்தவர்கள் ஓதுவது மூலமே நாம் அதை கேட்க முடியும். அப்படிப்பட்ட இந்த வேதங்களையெல்லாம் முழுமையாக அருளியவர் வேதவியாசர். அவர் அருளிய வேதங்களை அடிப்படையாக வைத்துதான் நம் மதமே இருக்கிறது. வேதமதம் தழைக்க வழிசெய்த வியாச பகவான் எல்லோர்க்கும் பொதுவானவர். அவர் நினைவை போற்றி அவருக்கு பூஜை செய்வதே வியாஸபூஜை என்பதாகும்.

நாராயணா! நாராயணா!! நாராயணா!!!

© TamilOnline.com