கணியன் தமிழ்ச்சேதி
தமிழை முதன் முதலாக வலைத்தளத்தில் ஏற்றி வைத்த பெருமை கணியன் டாட் காமையே சாரும். முதன் முதலாக இணையத்தில் தமிழை உள்ளீடு செய்வது பற்றி ஆழமாக யோசித்து அதற்குரிய விசைப்பலகையை உருவாக்கிய வெற்றிகரமாக அதைச் செயல்படுத்திக் காட்டியவர் அமரர். நா. கோவிந்தசாமி. தான் கண்டுபிடித்த சாப்ட்வேருக்கு 'கணியன்' என்ற பெயரைச் சூட்டினார்.

நா. கோவிந்தசாமி சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் தேசிய கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். 1955-இன் ஆரம்பத்திலிருந்தே இவருக்கு தமிழ் இணையதளம் ஒன்றைத் தொடங்க வேண்டுமென்ற ஆசை இருந்திருக்கிறது. அதைப் பற்றி மாலன், ''1995 அக்டோபர் என்று நினைக்கிறேன். ஏறக்குறைய ஒரு வருடத்தில் ஒரு நள்ளிரவில், சிங்கப்பூரிலிருந்து போனில் கூப்பிட்டார். பொதுவாக அதிக உணர்ச்சிகளைக் காட்டிக் கொள்ளாமல் பேசும் அவரது குரலில் அன்று அதிக உற்சாகம் கரைபுரண்டது. 'தமிழை நெட்டில் போட்டு விட்டோம் மாலன்! அதை எங்கள் பிரதமர் துவக்கி ¨வ்கிறார் என்று சொன்னார்'' என்று குறிப்பிடுகிறார்.

1995 அக்டோபர் 27-ஆம் தேதி இந்திய மொழிகளில் தமிழ் முதன்முறையாக வலையேற்றம் செய்யப்பட்டது. இந்த இணையத்தளத்தில் தமிழ்ச் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. உடனுக்குடன் தமிழகச் செய்திகள் வலையேற்றம் செய்யப்படுகின்றன. தமிழ்ச் சினிமா விமர்சனம், படப்பிடிப்பிலிருந்து, செய்திகள் என பொழுதுபோக்கு அம்சங்களையும் இடம்பெறச் செய்திருக்கின்றனர். மாணாக்கன் என்ற பகுதியின் மூலம் சிங்கப்பூர் மாணவர்களது படைப்புகளை வெளியிட்டிருக்கின்றனர். இதன்மூலம் சிங்கப்பூர் வாழ் தமிழ் மாணவர்களை மொழியார்வத்தின்பால் திருப்பி விட்ட பெருமை கணியனைச் சாரும். இந்தியாவின் ஐம்பதாவது சுதந்திர தினத்தை நினைவுபடுத்துகிற வகையில் சிறப்புப் பகுதியொன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அருள் என்ற தலைப்பின்கீழ் திருவண்ணாமலை கோயில் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. நாடகன் என்ற தலைப்பின் கீழ் தமிழ்நாட்டு மற்றும் யாழ்ப்பாண நாடகங்களைப் பற்றிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன. தமிழ்நெட்99 மாநாடு குறித்த முழு விபரங்களையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம். இணையத்தில் தமிழைப் பயன்படுத்துவது குறித்த நா. கோவிந்தசாமி அவர்களது ஆராய்ச்சிக் கட்டுரை இதில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நா. கோவிந்தசாமி அவர்களத மறைவையடுத்து பல்வேறு பத்திரிகைகளும் தமிழார்வலர்களும் விடுத்த இரங்கல் செய்திகளும் முழுமையாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

தமிழ் சம்பந்தப்பட்ட மற்ற இணையத் தளங்களுக்கான இணைப்பையும் தந்திருக்கிறார்கள். பிற இணையத்தளங்களைத் தேடுவதற்குதவியாக தேடுதல் எந்திரமும் இந்தத் தளத்தில் இருக்கிறது. தமிழின் முதல் இணையத்தளமான கணியன் தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி கண்ட பிறகும் வடிவமைப்பு விசயத்தில் ஆரம்பத்தில் இருந்தவாறே தொடர்கிறது. மேலும் தொடர்ந்து விசயங்களைத் தருவதிலும் பின்னிலையில் தற்சமயம் இருந்து வருகிறது. ஆனாலும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தமிழிணையத் தளங்களுக்கு வழிகாட்டித் தந்த பெருமை கணியனுக்கும் நா. கோவிந்தசாமிக்கும் இருக்கிறது. தமிழின் முதல் இணையத்தளத்தைத் தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு http://www.kanian.com

சரவணன்
*****


http://www.kanian.com சில சிதறல்கள்....

இந்தியாவில் பத்திரிகைத் துறை வரலாறே, ஊழல் எதிர்ப்பாகத்தான் ஆரம்பித்திருக்கிறது. கல்கத்தாவில் தொடங்கப்பட்ட முதல் செய்தித்தாளான - ஹிக்கின்ஸ் கெசட், ஹிக்கியால் ஆங்கிலேய அதிகாரிகளின் நிர்வாக ஊழல்களை விமர்சிப்பதற்காகத்தான் தொடங்கப்பட்டது. அவ்வாறு பல அதிகாரிகளை அவதூறு செய்ததற்காக ஹிக்கி அடிக்கடி தண்டனைக்குள்ளானார். பத்திரிகை மூடப்பட்டு மறுபடி வெளியாகி, மீண்டும் மூடப்படுவது என்று நடைபெற்றது.

ஞானி
*****


'' ஐயா! உங்களைத் தனியாகப் படம் எடுக்க விரும்புகிறோம்'' என்றேன். சத்தமாகப் பேசு என்றார்.

உடனே எழுந்தார். ''அப்படியானால் நான் பாரதி பாடலைப் பாடுவேன். என் அசைவுகளைப் படமாக எடுக்க வேண்டும்'' என்றார்.

மகிழ்ச்சியோடு 'சரி' என்றோம். எங்களோடு அழைத்துச் சென்ற புகைப்படக்காரரை அழைத்தோம்.

தியாகி பாஷ்யம் இருக்கையிலிருந்து வேகமாக எழுந்தார். இறுமினார். தொண்டையைச் சரி செய்தார். இரு கரங்களையும் நீட்டினார். கம்பீரமான குரலில் பாடத் துவங்கினார்.

ஆர். நல்லகண்ணு
*****


''தேம்ஸ் நதிக்கரையில் முட்டையிட்டு - சிந்து நதிக்கரயில் குஞ்சு பொரித்து எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போக வந்த வெள்ளைக் கொக்குகளா என்ற மதுரகவி பாஸ்கரதாஸ் பாடல் இடம்பெறாத டி.கே.எஸ். நாடகங்களே கிடையாது. 'தேச பக்த சிதம்பரனார்' என்பது ஐந்து நிமிட இசை நாடகம் வ.உ.சிக்கும், கலெக்டர் விஞ்ச் துரைக்கும் நடந்த உரையாடலை பாரதியார் ஒரு தர்க்கப் பாடலாக எழுதியிருப்பார். அதை அப்படியே டி.கே.எஸ். சகோதரர்கள் ஐந்து நிமிட நாடகமாக்கினார்கள்''.

சு.பொ. அகத்தியலிங்கம்
*****


''தமிழில் ஓர் எழுத்துக்கூட தெரியாமல், தமிழ்நாட்டில் பல்கலைக் கழகங்களில் இருந்து பட்டம் பெற முடியும் என்பது தமிழுக்கு ஏற்பட்ட இழுக்கு என்று உலகத் தமிழர்கள் கருதுகிறார்கள். தாய்த் தமிழகத்திலேயே கல்வி நிலையில் தமிழுக்கு ஒரு உன்னதம் கிடக்கவில்லை என்பது வேதனைக்குரியது. திராவிட இயக்க வழியில் வந்ததாக் கூறும் ஆட்சியாளர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தை ஆண்டும் தமிழுக்கு இந்த நிலை.

கணியன் தலையங்கத்திலிருந்து.

© TamilOnline.com