பிள்ளையார்பட்டி நாயகன்
அருள் பொழியும் 'கற்பக விநாயகர் திருக்கோயில் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான திருக்கோயில்களில் ஒன்றான இது - சுமார் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்ததாகும். இது குடைவரைக் கோயில் வகையைச் சேர்ந்தது.

இந்தத் திருக்கோயில் குகையினுள் அமையப் பெற்றது போல உள்ளதால் இதைக் 'குகைக்கோயில்' என்றும் கூறுகின்றனர். இங்கு அருள் பாலிக்கும் 'கற்பக விநாயகர்' தான் தமிழ்நாட்டிலேயே முதல் பிள்ளையார் சிற்பம்.

ராஜ கோபுரங்கள் ஓங்கி நிற்கும் இந்தத் திருக்கோயிலில் பத்து கல்வெட்டுகள் உள்ளன. 'கற்பக' விநாயகர் இடுப்பில் தனது இடது திருக்கரத்தை ஊன்றி - வலது திருக்கரத்தில் மோதகம் ஏந்தி - துதிக்கையை வலதுபுறம் சுழித்தது போன்று அமர்ந்துள்ளார். இங்கு அமைந்தது போன்ற கம்பீரமான விநாயகரை வேறு எங்கும் காண இயலாது.

கற்பக விநாயகருக்குத் தேசி விநாயகர் என்ற பெயரும் உண்டு என்பதை இங்குள்ள கல்வெட்டுகளிலிருந்து அறிய முடிகிறது. தேசி விநாயகர் என்றால் ஒளி அழகு மிக்க ஒப்பற்ற தலைவர் என்பது பொருளாகும். இங்குள்ள ஒரு விநாயகர் சிற்பம் எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் நம்மைப் பார்ப்பது போலவே அமைந்துள்ளது.

இங்கு ஆண்டுதோறும் பிள்ளையார் சதுர்த்தியின்போது பத்து நாள்கள் நடைபெறுமூ உற்சவம் இறுதி நாள் காலை தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. இந்தப் பெருவிழாவின் போது கற்பக விநாயகர் திருவீதி உலா வருதல் மிகவும் சிறப்பாக இருக்கும். இது தவிர ஒவ்வொரு மாதமும் சதுர்த்தியன்று வெள்ளி மூஞ்சுறு வாகனத்தில் ஏறி கோயில் உள் பிரகாத்தில் வலம் வருவதும் மிக அழகாக இருக்கும்.

வைதேகி தேசிகன்

© TamilOnline.com