இறைவனை வாயார வாழ்த்திப்பாட ஒரு பாடல்
நம்வாழ்வில் நன்மைகளும், தீமைகளும் மாறிமாறி வருகின்றன. அதற்கு நாம் செய்த முன் வினைப்பயன் தான் காரணம் என்று பெரியவர்கள் கூறுகின்றனர். அதற்காக நாம் வருத்தப்படக் கூடாது. இறைவனை மனதார நினைத்து வாயார வாழ்த்திப்பாடினால் எல்லா கஷ்டங்களும் போய்விடும்.

இறைவனது நாமங்களைச் சொல்லிப் பாட இதோ ஒருபாடல்:-

ஓரெழுத்து மந்திரமாம் ''ஓம்'' என்று சொல்லுவோம்.
ஈரெழுத்து மந்திரமாம் ''ராம்'' என்று சொல்லுவோம்.
மூன்றெழுத்து மந்திரமாம் ''கணேசா'' என்று சொல்லுவோம்.
நான்கெழுத்து மந்திரமாம் ''பகவதி'' என்று சொல்லுவோம்.
ஐந்தெழுத்து மந்திரமாம் ''காயத்திரி'' என்று சொல்லுவோம்.
ஆறெழுத்து மந்திரமாம் ''சரவணபவ'' என்று சொல்லுவோம்.
ஏழெழுத்து மந்திரமாம் ''ஓம்நமசிவாயா'' என்று சொல்லுவோம்.
எட்டெழுத்து மந்திரமாம் ''ஓம் நமோ நாராயணா'' என்று சொல்லுவோம்.


கங்கை, யமுனா, சிந்து, காவேரி, கிருஷ்ணா, கோதாவரி போன்ற பல புண்ணிய நதிகள் பல இடங்களில் உற்பத்தியாகி ஒரே கடலில் கலக்கின்றதோ அதே போல் நாம் சொல்லும் பல நாமங்களும் ஒரே இறைவனையே போய் சேரும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நமக்கு எத்தகைய துயரங்கள் வந்தாலும் இறைவனை விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். ''அவனன்றி ஓர் அணுவும் அசையாது''. நாம் இந்த உலகில் ஒரு பொருளையும் உண்டாக்க முடியாது. காக்க முடியாது. 'எல்லாம் அவன் செயல்' என்பதை உணர வேண்டும்

ஜெயகல்யாணி மாரியப்பன்

© TamilOnline.com