பூஜா ஸஹானி நாட்டிய அரங்கேற்றம்
ஆகஸ்ட் 4, 2007 அன்று ஸாரடோகா உயர்நிலைப்பள்ளி அரங்கில் அபிநயா நடனக் குழுமத்தின் மாணவி பூஜா ஸஹானியின் நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.

'கஜவதன' எனும் புரந்தரதாசர் பாடல் கணேச வந்தனத்தை தொடர்ந்து மல்லாரி, சிவஸ்துதியுடன் புஷ்பாஞ்சலி சிறப்பாக அமைந்திருந்தது. பின் ஜதிஸ்வரத்தில் 5 வித ராக, தாளங்களுடன் கூடிய பாடலில் துளியும் பிசிகின்றி, அயராமல் ஆடியது விறுவிறுப்பு. கால்களில் சிறந்த தாளக்கட்டு.

'இன்னம் என் மனம்' என்னும் லால்குடி ஜெயராமன் வர்ணத்துக்கு 'பரதம்' என்ற சொல்லில் அமைந்துள்ள பாவம், ராகம், தாளம் என்ற மூன்றையும் ஒருங்கிணைத்து மாணவி அளித்த விதம் மெச்சத்தக்கது. 'யாதவா, மாதவா, அறியாமல் இருத்தல் போல் நியாயமா' எனக் கெஞ்சும் போதும், 'குழலூதும் கண்ணா... குறைதீர அருளும்' என்னும் இடத்திலும் காண்பித்த முகபாவங்கள் மிகச் சிறப்பு.

'சாலு சாலு' எனும் சாரங்கா ராக தெலுங்கு பதம் விறுவிறுப்பாக இருந்து. 'கும்மனகர யெதிரே' எனும் புரந்தர தாசர் பாடலில் யசோதை கோபித்து கொள்ளும் போது, இனி மண் உண்ணுவதில்லை, நீ சொல்வதைக் கேட்கிறேன் எனச் சாதுவாக நடிக்கும் கிருஷ்ணனைக் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திய விதம் கச்சிதம்.

அடுத்து வந்த மராட்டிய பஜனையில், அகல்யை சாபவிமோசனம், சபரி மோக்ஷம், ராமனின் அயோத்தி விஜயம் ஆகிய மூன்றையும் ஒலிபெருக்கியில் அபிநயத்துடன் எடுத்து சொன்னவிதம், பின் ராமனின் கால் பட்டு அகல்யை சாபவிமோசனம் அடைவது. சபரி ராமனுக்காகக் காத்திருப்பது, ராமன் அயோத்தி திரும்பிவிட்டான் எல்லோரும் வாருங்கள் எனக் கைதட்டி அழைப்பது, வில்லேந்திய ராமனை விவரிப்பது யாவும் மிக அருமை. வீணாவாதினி ராகத்தில் அமைந்த ஆஷாரமேஷ் அவர்களின் தில்லானாவின் தாளத்துக்கேற்ப துரிதமான ஆட்டம், முகபாவம் யாவும் பிரமாதம்.

குரு மைதிலி குமார் அவர்களின் செம்மையான கூடிய பயிற்சி, மாணவியின் தன்னம்பிக்கை, உழைப்பு, பாட்டில் மூழ்கி அர்த்தம் புரிந்து அதற்கேற்ப முகபாவம் காண்பிப்பது, கண், உடல் அசைவுகள், புன்னகை இவை யாவும் சிறப்பாக அமைந்திருந்தன. சிறந்த நாட்டுவாங்கம், பாடல், பக்க வாத்தியங்கள் நிகழ்ச்சிக்கு மெருகேற்றின.

சீதா துரைராஜ்

© TamilOnline.com