அனிதா சுப்ரமணியத்தின் அரங்கேற்றம்
ஜூன் 27, 2004 அன்று சான் ஹோசே, CET அரங்கில் அனிதா சுப்ரமணியத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இவர் 'சுருதி ஸ்வராலயா' வித்யா வெங்கடேசனின் மாணவி.

ஷண்முகப்பிரியாவில் 'ஷண்முக கெளத்துய'துடன் ஆரம்பித்தது நிகழ்ச்சி. பின் ஹம்சானந்தியில் 'சங்கரகிரி' என்கிற ஸ்வாதித்திருநாள் சாகித்யம், அதையடுத்து 'கமலலோசன' என்கிற ஸ்வாமி ரவிதாசின் பஜன், அதன் பின் சங்கராபரண வர்ணம் ஆகிவயற்றிற்கு வெகு அழகாக அபிநயம் செய்தார்.

முகபாவங்களும் அடவுகளும் மிக நேர்த்தி. இடைவேளைக்குப் பின் ஆடிய திக்குத் தெரியாத காட்டில் என்ற பாரதியார் பாடல், மருங்கு வண்டு, பந்தாட்டம் முதலிய நிகழ்ச்சிகளுக்குப் பின் வந்த ஹிந்தோள ராகத்தில் தில்லானா சிகரம் வைத்தாக அமைந்திருந்தது.

அனிதாவின் கால் தாளக்கட்டும், விறு விறுப்பும் அவர் திறமைக்கு எடுத்துக்காட்டு. குரு வித்யா வெங்கடேசன் அனிதாவைப் போல இன்னும் பல திறமைமிக்க மாணவிகளை உருவாக்குவார் என எதிர்பார்க்கலாம்.

முன் பகுதியில் பத்மா ராஜகோபாலன் அவர்களும் இடைவேளைக்குப் பிறகு அனுராதா சுரேஷ், மானஸா சுரேஷ் ஆகியோரும் பாடினார்கள். வயலினில் மைதிலி ராஜப்பன், வீணையில் அருண் பாலா, புல்லாங்குழலில் ரஞ்சனி நரசிம்மன் மற்றும் மிருதங்கத்தில் ரவி ஸ்ரீதரன் ஆகியோர் தத்தம் பங்கினைச் சிறப்பாகச் செய்தனர்.

அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு மில்பிடாஸ் மேயர் அவர்கள் வந்திருந்து கவுரவித்தார்.

© TamilOnline.com