சென்னைக்குக் கடல்நீர்
சென்னை மக்களுக்கு இன்றைய தலையாய பிரச்சனை தண்ணீர். தொடர்ந்து பருவமழை பொய்த்துப் போனதும், பிரதான ஏரிகளான செம்பரம்பாக்கம், புழலேரி, போரூர் போன்ற ஏரிகள் வறண்டு நிலத்தடி நீர் பெரும் அளவு குறைந்து போனது.

கல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் மூலமே இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண முடியும் என்ற கருத்து வலுப்படவே தமிழக அரசும் இதை ஆராயத் தொடங்கியது.

கடல்நீரைக் குடிநீராக்கும் தொழிற்சாலை சென்னையில் நிறுவப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்த போது தெரிவித்தார். ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 30 கோடி லிட்டர் அளவுக்குச் சுத்தமான நீர் கிடைக்கும். சென்னை தவிர, பல கடற்கரையோர நகரங்களிலும் இதே போன்ற தொழிற்சாலைகளை வருங்காலத்தில் நிறுவுவதற்கும் திட்டம் உள்ளது என்றும் நிதியமைச்சர் கூறினார்.

இதுமட்டுமல்லாமல் நீர் ஆதாரங்கள் அனைத்தையும் பழுது பார்த்து, மேம்படுத்தி, சுத்தமான நீரைச் சேமித்து வைக்கும் வகையில் தயார்படுத்தப் பன்னாட்டு நிதிநிறுவனங்கள் மற்றும் நபார்டு உதவியுடன் ஒரு லட்சம் நீர்ப்பாசன ஆதாரங்கள் பழுது பார்க்கப்பட உள்ளன என்றும் அதற்காக 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இத்தகைய குடிநீர் திட்டங்களை ராஜீவ் காந்தி குடிநீர்த் திட்டத்தின் கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் சிதம்பரம்.

கடல்நீராவது வாய்க்கு எட்டுகிறதா என்று பொறுத்துத்தான் பார்கக வேண்டும்.

தொகுப்பு :கேடிஸ்ரீ

© TamilOnline.com