வார்த்தைகளில் வடித்திட முடியாத இழப்பு ....
இந்த இழப்பு மிகப்பெரிது; வார்த்தைகளில் வடித்திட முடியாதது. கோரத் தீ விபத்தில் மறைந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்குத் தென்றல் சார்பாக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பலரது கோபம் பள்ளியில் பணிபுரிந்தோர் மீது பாய்ந்துள்ளது. கோபப்படுவோர் சற்றுச் சிந்திக்கவேண்டும். ஒரு தீ விபத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற விபரம் நம்மில் பலருக்குத் தெரியாது. நான் படித்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் 'Fire Drill' நடந்ததாக நினைவில்லை. இது போன்ற சிறு பள்ளிகளில் வேலைக்குச் சேர்பவர்களுக்கு நிச்சயம் இது போன்ற அசாதாரணமான சூழ்நிலைகளில் என்ன செய்யவேண்டும் என்று தெரிவதற்கு வாய்ப்பில்லை; இந்நிறுவனங்கள் (ஏன் இன்னும் பல பெரிய நிறுவனங்கள் கூட) அப்பயிற்சி அளிப்பதில்லை.

நண்பர் ஒருவர் விரக்தியாகச் சொன்னது: "பாடம் சொல்லித் தருவது பற்றியே அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை."

தில்லியில் ஒரு சினிமாக் கொட்டகை எரிந்த போது பலர் மடிந்தனர். பெரும் கூக்குரல் எழுந்தது. ஆனால், இன்னமும் நமது சினிமாக் கொட்டகைகள் இது போன்ற விபத்துக்கள் நடக்க ஏதுவான இடங்களாகவே இருக்கின்றன.

இந்தப் பள்ளிக்கூடத் துயரமும் ஒரு அடிக்குறிப்பாக மாறிவிடாமல், நிலைத்து நிற்கும் மாற்றங்கள் வரவேண்டும்.

பி. அசோகன்,
ஆகஸ்டு 2004

© TamilOnline.com