எப்போதும் கிறுக்குவதில்லை......
எப்பொழுதாவது
என் பேருந்து
நிறுத்தம் வர
நேரமானால்...
அல்லது
புகைவண்டிப்
பயணத்தில்,
உட்கார்ந்திருந்த
கால்கள் மரத்துப்போய்
சன்னல் வழியே
விளக்குக் கம்பங்களை
எண்ணி முடித்த பிறகு,
கிடைக்கும் காகிதத்தில்
முட்டும் வார்த்தைகளை
கோர்வையாக்கும்
விக்கிரமாதித்த
முயற்சி வெற்றியெனில்,
பிற்பாடு ஒருநாள்

பிரதி எடுப்பேன்
நாட்குறிப்பில்...
வேதாளம்
ஜெயித்தால்,
கவிதைக் காகிதத்தை
கூழாய் கசக்கி
இருப்புப் பாதையின்
சரளைக் குவியலுக்குள்
எறிந்து விடுவேன்

மூர்த்தி,
கலி·போர்னியா - 95051.

© TamilOnline.com