'சங்கீத சாகரா' டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா
நியூஜெர்சியை சார்ந்த வட அமெரிக்க கர்நாடக சங்கீத சபை தனது 30வது வருடமான 2006ல் ஒரு மாபெரும் நிகழ்ச்சியாக திரு பாலமுரளிகிருஷ்ணா அவர்களுக்கு சங்கீத சாகரா, பொன்னாடை மற்றும் தங்கப்பதக்கம் அளித்து அவரை கெளரவித்தது.

முன்னதாக விழாவிற்கு வந்திருந்தவர்களை வரவேற்று பேசிய சபை தலைவர் டாக்டர் அருணா அவர்கள், சங்கீத சாகரா விருதைப் பற்றியும், அதற்கான தகுதிகள் பற்றியும், விருதினை இதுவரை பெற்ற கலைஞர்கள் பற்றியும் பேசினார். குறிப்பாக திரு. பாலமுரளி கிருஷ்ணாவின் தகுதி மிகபெரியதென்று மெச்சினார். இதுவரை இவ்விருதை பெற்றவர்கள் லால்குடி ஜெயராமன், செம்மங்குடி ஸ்ரீனிவாசஐயர், டி.என். கிருஷ்ணன், எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள் மற்றும் கோமளா நாராயணன் ஆகியோர்.

திரு பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் பெருமைகளை விளக்கிப் பேசிய CMANAவின் முன்னாள் தலைவரும், செயலாளருமான டாக்டர் ராமசாமி அவர்கள் அவருடைய பல பெருமைகள விரித்துரைத்தார். நல்ல ஒரு குரல் மட்டும் இன்றி பல மொழிகளில் வல்லமையும் பல மொழிகளில் பாடல்களை சிறந்த உச்சரிப்புடன் அழகாக பாடும் திறமை பெற்றது மட்டுமன்றி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட மிகச் சிறந்த பாடல்கள் இயற்றியுள்ளதையும் புகழ்ந்து பேசினார்.

அந்தப் பாடல்கள் கருத்தும், சங்கீத அழகும், கவிதை அழகும் நிறைந்ததால் இவர் ஒரு மிகப் பெரிய சாகித்யகர்த்தா என்பதில் ஒரு சந்தேகமும் இல்லையென்றும் கச்சேரிகளுக்கு மட்டுமன்றி பரதநாட்டியத்திற்காகவும் இவர் பல நல்ல பாடல்களை இயற்றியுள்ளார் என்றும் அவற்றில் இவர் திறமை மிகவும் பிரசித்தமென்றும் பேசினார்.

கடைசியாக பத்மவிபூஷன் விருது பெற்ற இவர் பாரத ரத்னா பட்டமும் பெற்று திகழ வேண்டும் எனப் போற்றினார். வந்திருந்த நியூஜெர்சி பேரவை உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு உபேந்திரா சிவகுலா திரு பாலமுரளியைப் போற்றியதுடன், இந்த விழா தனக்கு தன் சிறுவயதில் தன் தாய் சங்கீதம் கற்றுக் கொடுக்கும் நினைவுகளையும், சென்னை ஆந்திரா போன்ற இடங்களில் வாழ்ந்த நினைவுகளையும் அளிக்கின்றது என்றார்.

நம் கலாசாரங்களை மற்றவர்க்கு விளக்கவும் தன்னால் முடிந்தவரை கூட்டத்தில் எடுத்துரைக்கவும் தனக்கொரு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி கூறிய அவர், தான் மேலும் பல சேவைகள் செய்ய விரும்புவதாகக் கூறினார்.

கடந்த ஜூன் 4ல் இவ்விழாவில் CMANAவின் அங்கத்தினர்கள் மட்டுமன்றி பல இளம் சிறுவர்களும் கலந்து கொண்டனர். வர்ஷினி, ஸ்ருதி என்ற இரு சிறுமியர்கள் இறை வாழ்த்து பாடி விழாவை துவக்கி வைத்தனர். இந்த விழா நமது கலையும் கலாசாரமும் அடுத்த சந்ததியையும் கவர்ந்திழுக்கும் ஒரு சந்தோஷத்தை வழங்குவதாக இருந்தது.

© TamilOnline.com