சிவகுமார் வீட்டு மருமகளாகிறார் ஜோதிகா!
ரொம்ப நாளாகவே எல்லோராலும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூர்யா-ஜோதிகா திருமணம் ஒருவழியாக இருதரப்பு பெற்றோர்களின் ஆசியுடன் வருகிற செப்டம்பர் மாதம் 11ம் தேதி நடைபெறவிருப்பதுதான் தற்போது தமிழ் திரைப்பட உலகில் சூடான செய்தியாகும்.

கடந்த சில வருடங்களாகவே சூர்யா-ஜோதிகா இருவரையும் இணைத்து ஊடகங்கள் செய்திகள் வெளியிட்ட வண்ணம் இருந்தாலும், இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக சமீபத்தில்தான் வெளியிட்டனர். திருமணத்திற்கு இருதரப்பு பெற்றோர்களின் ஆசிக்காக காத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யாவின் தந்தையும், பிரபல திரைப்பட நடிகருமான சிவகுமார் பத்திரிகையாளர்களிடையே முறைப்படி சூர்யா-ஜோதிகா திருமணத்தை அறிவித்தார்.

திருமணத்திற்கு மறுநாள் 12ம் தேதி மாலை சென்னையில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ஸ்ரீராமநாதன் செட்டியார் சென்டரில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சினிமாவில் நடிக்க மாட்டார் என்று தெரிகிறது. கைவசம் உள்ள படங்களை இம்மாத இறுதிக்குள் முடித்து கொடுத்துவிட்டு சிவகுமார் வீட்டு மருமகளாகிறார் ஜோதிகா.

கேடிஸ்ரீ

© TamilOnline.com