'புதுமைப்பித்'தனின் அழகான கிறுக்கல்கள்
தமிழ்மகன்
படங்கள்:ஆப்ரகாம்

பாரதி பிறந்ததினத்துக்கு ஒருநாள் முன்பு அதாவது டிச.10-ஆம் தேதி பார்த்திபனின் கிறுக்கல்கள் வெளியீட்டுவிழா காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. விழா மரபுகளை மீறிய அந்த நிகழ்ச்சியைக் கண்டு வியக்கக் கொடுத்து வைத்தவர்கள் நிச்சயம் அந்த மாலைப் பொழுதை ஒருவாரத்துக்காவது மறக்க மாட்டார்கள். வாய்ப்பு கிடைக்காதவர்களுக்குச் சில நொறுக்குத் தகவல்களை மட்டும் இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

1. வீணை காயத்ரியின் வாசிப்பில் கீர்த்தனைகளும் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களும் அரங்கத்தை நிரப்பிக் கொண்டிருந்த நேரத்தில் கலைஞர் வந்தார். அவர் உள்ளே நுழைந்த நேரத்தில் அவருக்குப் பெரும் புகழ் தேடித் தந்த 'பராசக்தி' படத்தில் இருந்து, ஒரு பாடலை வாசித்தாரே பார்க்கலாம்.

2. கடவுள் வாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்து போன்ற பழகிப் போன சம்பிரதாய நிகழ்ச்சிகளை, 'நெகிழ்ச்சி'களாக மாற்றிக் காட்டினார் . சீதா, கடவுள் வாழ்த்துப் பாடப் போவதாக அறிவித்தார்கள். திரை விலகியது. பத்துப் பதினைந்து மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார் சீதா. 'உன் அரிசியில் வறியவன் பெயர் பொறி' வசன கவிதை அவர்களுக்குப் பின்னணியாக. தமிழ்த்தாய் வாழ்த்து என்று 'அக்' பத்திரிகையின் ஆசிரியருக்குப் பத்தாயிரம் பணமுடிப்பு வழங்கப்பட்டது. அடுத்து காசி ஆனந்தன் எழுதிய ''தமிழா நீ பேசுவது தமிழா'' பாடல். தமிழர்களின் ஆங்கிலக் கலப்புத் தமிழ் பிரயோகத்தைத் தோலுரித்துக் காட்டியது அது.

3. மீனா, குஷ்பு, ரம்யா, ரோஜா, மகேஸ்வரி, விந்தியா, சுவலட்சுமி ஆகிய நடிகைகளை முறையே வைலட், இண்டிகா, புளூ, கிரீன், யெல்லோ, ஆரஞ்சு, ரெட் (vibgyor) வண்ணச் சேலைகளில் வாணவில்லாக மேடையில் நிறுத்தி வைத்திருந்தனர். நடிகைகள் கலைஞரிடமிருந்து கவிதை நூலைப் பெற்றுக் கொண்டனர். சூரியன் நூல் வெளியிட, வானவில் பெற்றுக் கொள்வதாக நிகழ்ச்சியை வர்ணித்தார் பாடலாசிரியர் விவேகா. ''அட அரங்க மேடையில் இருக்கும் ஆரணங்குகள்'' என்று பூரித்தார் பக்கத்து இருக்கையில் இருந்தவர். முன்வரிசையில் இருந்தவர் மேலும் பூரிப்போடு, ''ஆறல்ல... ஏழணங்குகள்'' என்று வேடிக்கையாகச் சொல்லிச் சிரித்தார்.

4. இலவச மருத்துவ ஊர்தி ஒன்றை தன் மனித நேய மன்றத்தின் மூலம் வழங்கினார் பார்த்திபன். மேடையில் 'கட் அவுட்' செய்யப்பட்ட அம்புலன்ஸ் (கட் அவுட்டுகளை இப்படியெல்லாம்கூட பயன்படுத்த முடியுமா?) ஊர்ந்து வந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி அம்புலன்ஸில் 'ரெட்கிராஸ்' குறியைப் பொறுத்தியதும் சைரன் சத்தத்துடன் வண்டி அங்கிருந்து நகர்ந்து அரங்கத்தில் உள்ளவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

5. அடுத்து பார்த்திபனின் தந்தை பெயரிலான 'ராதாகிருஷ்ணன் நூலக'த்தை முதல்வர் திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ரிப்பன் வெட்டினார் கலைஞர். அடுத்த விநாடி, காமராஜர் அரங்க மேடை நூலகமாக மாறிவிட்டது. நூலகத்தில் இருக்கும் இருக்கைகள் போல மேசைகளும் நாற்காலிகளும். பேச்சாளர்கள் அதில் அமர வைக்கப்பட்டனர். இமைக்கும் நேரத்தில் மேடையில் நடந்த மாற்றத்தால் பிரமித்துப்போன கலைஞர், வியந்த போன நிலையில் ஒரு குழந்தை போல மிரட்சியுடன் இப்படியும் அப்படியும் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது.

6. கே. பாக்யராஜ், அப்துல்ரகுமான், சிவசங்கரி, கி.ராஜநாராயணன், வலம்புரிஜான், வைரமுத்து, பாரதிராஜா, சுஜாதா ஆகியோர் வாழ்த்துரைத்தார்கள்.

7. புதுமைப்பித்தனான பார்த்திபன் கிறுக்கல்கள் என்ற பெயரில் இத்தனை அழகான விழாவை வழங்கியது, அவையடக்கமாக இருக்கலாம். ஆனால் விழாவுக்கு வந்தவர்கள் வாயடைத்துப் போனது என்னமோ நிஜம்.

தமிழ்மகன்
படங்கள்:ஆப்ரகாம்

© TamilOnline.com