பொங்கலோ பொங்கல்
நான்கு நாட்கள் தொடரந்து கொண்டாடப்படும் பண்டிகை என்பதால் இதைப் 'பெரும் பண்டிகை' எனலாம். எப்படி?

வீட்டையும், சுற்றுப்புறங்களையும் சுத்தப்படுத்தி அழகு பொங்கச் செய்கிறோம். வாசல் நிறைந்த வண்ணக்கோலங்கள் மேலும் அழகுகூட்டுகிறது.மனதில் உள்ள வேண்டாத தீமைகளைத் தூண்டும் எண்ணங்களைத் 'தீயினில் தூசாக ' அழித்து மனதையும் சுத்தப்படுத்துகிறோம். நமக்கு உணவளிக்கும், நம் வாழ்க்கையை வளப்படுத்தும் தெய்வத்தைத் தொழுவதுடன் இதற்கு உதவும் கால்நடைகளுக்கும் நம் நன்றியைக் காட்ட உதவும் பண்டிகையல்லவா இது? நண்பர்களையும், உறவினர்களையும் சந்தித்து மகிழ்ந்து பண்டிகைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம்.

'போகி'

மார்கழி மாதத்தின் கடைசி நாள்தான் 'போகி' என கொண்டாடப்படுகிறது. வீட்டை நன்கு சுத்தப்படுத்தி, சுவர்களுக்கு வெள்ளையடித்து, கதவு மற்றும் ஜன்னல்களுக்கு வண்ணம் பூசி வாசல் அடைத்து கோலம் போட்டு 'போகி'க்கு வரவேற்பு தரப்படும். இன்றும் கிராமப் புறங்களில் போகித் திருநாள் விடியலில் தேவையற்ற தட்டுமுட்டு சாமான்களை நடுவாயிலில் இட்டுக் கொளுத்துவர் - போகி நாளன்று இப்படி கொளுத்தும் போது அடிக்கவென முரசுவடிவில் சிறு சிறு மேளங்கள் செய்து விற்கப்படும் .

'பொங்கலோ பொங்கல்'

பிரத்யக்ஷ தேவதையான அந்த சூரிய பகவானை நினைத்து நடு முற்றத்தில் பெரும் பானை வைத்து அந்த வருடம் விளைந்த புது நெல்லை அரிசியாக்கி அதை உலையில் இட்டு அது பொங்கும் நேரம் 'சுற்றத்தாருடன் கூடி நின்று 'பொங்கலோ பொங்கல்” என்று கூவி ஆதவனை மனதார வேண்டும் நாள்தான் தை மாதத்தின் முதல் நாள். இது பெரும் பொங்கல் என்றும், பொங்கல் திருநாள் என்றும், 'சூரிய பொங்கல்' என்றும் போற்றப்படுகிறது.

'மகர ஸங்கராந்தி'

தை மாதம் மகர மாதம் எனப்படும மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் நேரம் இது என்பதால் 'மகர ஸங்கராந்தி' என்றும் கூறப்படுகிறது. 'மகர ஸங்கராந்தி புருஷன்' ஆண்டுக்கு ஒரு வாகனத்தில் வித்தியாசமான அலங்காரங்களுடன் பவனி வருவார். இப்படி வரும் அவரின் தோற்றம் மற்றும் வானம் இதை வைத்து அந்த ஆண்டின் பொதுவான பலன்கள் கூறப்படும்.

'மாட்டுப் பொங்கல்'

3 ஆம் நாள் மாட்டுப் பொங்கல் எனப்படும். மனிதனுக்கு இணையாக - ஒருபடி மேலாகவே உழைத்து விவசாயத்திற்கு தோள் கொடுத்து நாம் உண்ண வகை செய்யும் காளைகளுக்கும், நமக்கு தாயினும் சாலப் பரிந்து பாலூட்டும் பசுக்களுக்கும் நாம் காட்டும் நன்றியின் பிரதிபலிப்புதான் இந்த மாட்டுப் பொங்கல். கால் நடைகளை நன்கு தேய்த்துக் குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசி, மாலை அணிவித்து மணிகள் கட்டி அழகுப் படுத்துவதுடன் அவற்றுக்கு சூடம் காட்டி பூஜையும் செய்வது பழக்கம். சர்க்கரைப் பொங்கல் வைத்து படைப்பதும் வழக்கம்.

'ஜல்லிக் கட்டு'

வண்டிகளையும் சுத்தப்படுத்தி மாடுகளைப் பூட்டி வண்டிகளை வேகமாக ஓட்டிச் செல்லும் பழக்கம் இன்றும் பல கிராமங்களில் உண்டு. வண்டியை கோயிலுக்கு ஓட்டிச் சென்று பூசைகள் செய்வர். பல சிறு கிராமங்களில் 'பொலி எருது கட்டுதல்' இன்றும் உண்டு. மதுரையை அடுத்த அலங்கா நல்லூரில் நடக்கும் 'ஜல்லிக் கட்டு' என்னும் காளைகளை அடக்கும் வீர விளையாட்டு உலகம் முழுவதும் பிரபலமான ஒன்று.

'காக்கை பிடி'

பொங்கல் திருநாளின் 3 ஆம் நாளான இந்த நாளில் தங்களின் உடன்பிறந்த சகோதரர்களின் நலன் வேண்டி 'காக்கை பிடி' வைக்கும் வழக்கம் வித்தியாசமானது. பெண்கள் திறந்த வெளியில் கூடி சிவப்பு, மஞ்சள், வெண்மை நிறத்துடன் கூடிய சாதங்களை கைகளில் எடுத்து பிடிப் பிடியாக்கி மஞ்சள் இலைகளின் மீது 'காக்கா பிடி வைத்தேன் - கன்னு பிடி வைத்தேன் காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணம்” எனக் கூறியபடி வைப்பர். தன் நலன் வேண்டும் தன் சகோதரிக்கு அந்த சகோதரன் முடிந்த அளவு பணம் அல்லது புடவை என சீரை மனமுவந்து தருவான்.

காணும் பொங்கல்'

பொங்கலின் கடைசி நாளான காணும் பொங்கல் அன்று நண்பர்களையும், உறவினர்களையும் சென்று கண்டு அளவளாவி வருவதும் தொன்று தொட்டு வரும் வழக்கம். தங்களிடம் பணிபுரிவோருக்கு பணமோ, துணிமணிகளையோ 'அன்பளிப்பாக'த் தருவர்.

இது ஏன் தமிழர் திருநாள் எனப்படுகிறது? பொதுவாகவே இது தென்னிந்தியாவில் மட்டுமே பிரபலமாகக் கொண்டாடப்படுவது. காரணம் தென்னிந்தியர்களின் அடிப்படை உணவு நெல். நெல்லை விளைவிப்பதில் பெரும் பங்கு பெறும் தமிழ் நாட்டின் பெரும் பண்டிகையான இதை 'தமிழர் திருநாள்' என்பது சரிதானே?

வைதேகி தேசிகன்'

© TamilOnline.com