டைரக்டராகிறார் அருண்பாண்டியன்
'ஊமை விழிகள்' படத்தின் மூலம் தன் திரை வாழ்க்கையைத் தொடங்கிய அருண்பாண்டியன் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என இன்று தனது 100வது படத்தை எட்டிப் பிடித்துள்ளார். ·பிரெண்ட்ஸ் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் 'தேவன்' படத்தில் நடிப்பதோடு, டைரக்ஷன் பொறுப்பையும் முதன்முதலாக ஏற்றுள்ளார். அருண் பாண்டியனின் 100வது படத்தில் விஜயகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஒரு மழை இரவில், நகரின் முக்கிய புள்ளி கொலை செய்யப்படுகிறார். கொலை செய்தவன் ஒரு சின்ன தடயத்தைக் கூட விட்டுவைக்க வில்லை. போலீஸ் அவனை தேடிச் செல்லச் செல்ல, மர்மமுடிச்சு அவிழாமல் மேலும் மேலும் சிக்கலாகிக்கொண்டே வருகிறது. போலீஸ் துறைக்கே சவால்விட்ட அந்த கொலைகாரன் எப்படி பிடிபட்டான், ஏன் கொலை செய்தான் என்பது தான் சுவாரஸ்யமான திரைக்கதை.

கொலைகாரனாக அருண்பாண்டியனும், அவரைப் பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக விஜயகாந்தும் நடிக்கின்றனர். விஜயகாந்தும், அருண்பாண்டியனும் மோதும் சண்டைக் காட்சிகள் பிரமிப்பூட்டும் வகையில் சண்டிகர் மற்றும் பஞ்சாபின் முக்கிய பகுதிகளில் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பஞ்சாப் சர்தார்களும், நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள், மற்றும் வாகனங்கள் படப் பிடிப்பில் ஈடுபடுத்தப்பட்டன. நடிப்பில் 100வது படமும் டைரக்ஷனில் முதல் படம் என்பதால், அருண்பாண்டியன் மிகுந்த கவனத்துடன் படத்தின் ஒவ்வொரு காட்சி களையும் வித்யாசமான முறையில் படமாக்கி வருகிறார்.

இசை இளையராஜா, ஒளிப்பதிவு பி. செல்வகுமார் D.F.Tech, எழுத்து, தயாரிப்பு, இயக்கம் அருண்பாண்டியன்

நடிகர்கள் கார்த்திக், தலைவாசல் விஜய், சாய்குமார் (மலையாளம் -அறிமுகம்), சரத்பாபு, விவேக், கரிகாலன், மணிவண்ணன், வினுசக்கரவர்த்தி, செந்தில் மற்றும் புதுமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

தமிழ்மகன்

© TamilOnline.com