அஞ்சல் தலை(வர்)கள்
உலக மகாதலைவர்களை தபால் தலை களில் அச்சிட்டு கெளரவிப்பது எல்லா நாடுகளிளும் உள்ள பழக்கமாகும். அமெரிக்க நாடு இந்த மாதிரி மறைந்த ஜனாதிபதிகளின் முகங்களை (மிக்கி மெளஸ் உள்பட!) தபால்தலைகளில் அச்சிட்டு வருகிறது.

லின்கன், கென்னடி மார்டின் லூதர் கிங் பற்றிய தபால்தலைகள் பல நாடுகளால் வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால் உலகத்திலேயே மிக அதிகமாக இந்தியா தவிர பிறநாடுகளால் தபால் தலைகளில் அச்சிடப்பட்டு கெளரவிக்கப் பட்டவர் காந்தியடிகள் ஆகும். ஆனால் வெறும் முகத்தை மட்டும் போடாமல் அந்த தபால் தலைகள் காந்திஅடிகளைப் பற்றிய அவரது வாழ்க்கையின் முக்கியக் கட்டங் களை சித்தரிக்கின்றன. அநேகமாக 60 நாடுகள் காந்தி அடிகளை தபால் தலைகள் வெளியிடுவதன் மூலமாக கெளரவித்துள்ளன.

காந்தி அடிகள் தபால் தலைகளைப் பற்றி சில விசேட குறிப்புகள் :

1948ல் இந்தியா 'காந்தி சர்வீஸ்' என தவறாக காந்தி தலை போட்ட தபால் தலைகள் அச்சடித்து வினியோகம் செய்து விட்டது (overprint). இப்பொழுது அந்த தவறான தபால் தலைகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. ஆக 10 ரூபாய் ஒன்று 450000 ரூபாய்க்கும் மேலாக விலையுள்ளது.

1893-1914 ல் காந்தி அடிகள் தென்னாப் பிரிக்காவில் இருந்தபோதுதான் இனவெறியை எதிர்த்துப் போராட ஆரம்பித்தார். ஒரு நூறு வருடங்கள் கழித்துத்தான் - 1997ல் தென்னாப்பிரிக்கா அரசு அவரை தபால் தலைகள் மூலமாக கெளரவித்தது.

மாரிஷஸ் நாடு 1960ல் வெளியிட்ட 6 தபால் தலைகள் அவரது வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களைத் தெளிவாக காட்டுகின்றன.

அமெரிக்க நாடு 'சுதந்திர உரிமைக்காகப் பேராடியவர்கள்' என்ற வரிசையில் காந்தி அடிகளை கெளரவித்தது.

டோமினிகா என்ற நாடு அதன் தபால் தலையில் அவரின் பெயரை ஆங்கிலத்தில் 'Ghandi என்று தவறாக அச்சடித்து விட்டது! அப்போதைய அராபிய கூட்டணி தேசமும் இதே தவறை செய்துள்ளது.

21-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், 20 ம் நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர்களில் ஒருவராக காந்தியடிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு பல அருமையான தாபல் தலைகள் வெளியிடப் பட்டுள்ளன.

காந்தியடிகளை தபால் தலைகள் மூலமாக கெளரவிக்காத நாடுகள் பல இருந்தாலும் அவற்றில் சில நம்மை உறுத்தாமல் இல்லை! அந்த நாடுகளை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்.

அது சரி, காந்தியடிகளுக்குப் பிறகு எந்த இந்தியத் தலைவர் தபால் தலைகள் மூலமாக பல உலக சேதங்களால் கெளரவிக்கப்பட்டார் தெரியுமா?

பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள்தான்!

கிட்டத்தட்ட 35 நாடுகள் அவரை கெளரவித்து தபால் தலைகள் வெளியிட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து (அதிசமயாகத்தான்) வரும் கடிதங்களில் சில சமயம் காந்தி தலையுள்ள தபால் தலைகள் ஓட்டப்பட்டு வரும். ஆனால் என்னமோ தெரியவில்லை - அவர் முகம் முழுக்க மறைத்து முத்திரை குத்தப்பட்டு உருத் தெரியாமல் ஆகி இருக்கும்! ஊம், அது காந்தி அடிகளின் (தபால்) தலைவிதி போலும்.

ஹெர்கூலிஸ் சுந்தரம்

© TamilOnline.com