குறளமுது மற்றும் அறிவோடு விளையாடு
திருக்குறளை மாணவர்களுக்கு எளிமையாகக் கற்றுத் தரும் நோக்கத்தில் சென்னைக் கவிகள் என்ற நிறுவனம் 'குறளமுது' என்கிற பன்னூடக குறுந்தகட்டினையும், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அறிவை வளர்க்கும் விதத்திலும் அமைந்த தமிழ் விளையாட்டுக் குறுந்தகட்டினையும் வெளி யிட்டுள்ளது.

குறளமுது

திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களில் உள்ள 1330 குறள்களும் ஒலி வடிவிலும் வரிவடிவிலும் தரப்பட்டுள்ளன. இந்தக் குறுந்தகட்டில் பரிமேலழகர், மு.வரதராசனார், வெற்றி, கனக சுப்புரத்தினம் ஆகியோரின் உரை விளங்கங்களும் இடம் பெற்றுள்ளன. மலாய், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் திருக்குறளை மொழி பெயர்த்து வெளியிட்டிருக் கிறார்கள்.

குறளைப் பல்வேறு கோணங்களில் வாசகனுக்கு உணர்த்தும் வகையில், முக்கிய கேந்திரங்கள் அடங்கிய சென்னை வரைபடம் ஒன்று எடுத்த எடுப்பிலேயே தரப்பட்டிருக்கும். வள்ளுவர் கோட்டம், கன்னிமாரா நூலகம், உயர்நீதிமன்றம், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை ஆகிய இடங்கள் உருபடங்களாகக் காட்டப்பட்டிருக்கின்றன. வள்ளுவர் கோட்டம் என்பது திருக்குறளைப் பற்றியும், நூலகம் என்பது திருக்குறள் பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள் பற்றியும், உயர்நீதிமன்றம் என்பது திருக்குறளில் சட்டங்கள் என்பது பற்றியும், மருத்துவமனை என்பது திருக்குறளில் உடல்நலம் என்பது பற்றியும் விளக்குவதாக அமைந்துள்ளன. அந்தந்தத் துறை வல்லுனர்கள் திருக்குறள் பற்றி எழுதிய புத்தகங்களும் தரப்பட்டுள்ளன.

குறளின் சில சொற்களுக்கான பொருள் விளக்கத்தை சலனப் படத்தில் காணும் வசதியும் உள்ளது. உதாரணத்திற்கு 'ஏறு' என்ற சொல்லுக்குப் பொருள் தெரியாவிட்டால், அதைக் கிளிக் செய்தால், சிங்கத்தின் அசைவுகள் அடங்கிய சலனப்படம் திரையில் தோன்றும்.

நூலகம் என்னும் பகுதியில் தேடுதல் எந்திரமும் பொருத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியின் மூலம் எண்கள், முதல் எழுத்துக்கள், அணி, இவற்றின் மூலம் வேண்டிய குறளைத் தேடிப் பெற்றுக் கொள்ளலாம். உரைகள் மற்றும் சினிமா ஆகியவையும் இடம் பெற்றிருக்கும். சினிமாவில் க்ளிக் செய்தால் குறள் இடம் பெற்றிருக்கும் தமிழ்த் திரைப்படங்கள் உரிய காட்சிகளுடன் தோன்றும்.

இந்தக் குறுந்தகட்டைத் தயாரித்ததன் நோக்கம் பற்றிக் குறிப்பிடுகையில், "விஞ்ஞான யுகத்தின் இந்த அடையாளங்களை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இனங் கண்டு கொண்டிருக்கிறார் வள்ளுவர். நறுக்குத் தெறித்தாற் போல் கருத்துக்களைச் சுருக்கென்று சொல்வதற்காகவே, ஒன்றே முக்கால் அடி மொழிநடையைத் தேர்ந் தெடுத்தவர். ஒன்றேமுக்கால் அடியால் உலகை அளந்தவர். இன்றைக்கேயான பல சிக்கலுக்கு அன்றே தீர்வுகளைத் தந்தவர். அன்பு, நட்பு, காதல் போன்ற வாழ்வின் அடிப்படைப் பரிமாணங்களையும் கால முழுமைக்கும் ஆராய்ந்து தெளிந்தவர். வள்ளுவர் நமக்குக் கிடைத்த அழியாச் சொத்து. எனவே இதை வெளியிட விரும்பினோம்" என்று கூறுகின்றனர் சென்னைக் கவிகள் நிறுவனத்தினர்.

அறிவோடு விளையாடு

இந்தக் குறுந்தகட்டுக்கு இந்தப் பெயரைச் சூட்டியவர் கவிஞர். வைரமுத்து. அறிவோடு விளையாடு என்ற இந்தக் குறுந்தகட்டில் குழந்தைகளுக்கான விளையாட்டுக்கள் முதன்முறையாக தமிழிலேயே வெளியிடப் பட்டிருக்கிறது. இதில் மொத்தம் ஆறு விளையாட்டுக்கள் உள்ளன.

வல்லாரை

பார்ப்பதற்குச் சாதாரண சீட்டுக் கட்டு விளையாட்டு என்று நினைக்கத் தோன்றும். இதில் ஒரு இரு சீட்டைத் திறக்க வேண்டும். இரண்டும் ஒரே எண்ணாய் இருப்பின் விளையாடுபவர்களுக்கு ஒரு புள்ளி கிடைக்கும். பின் தொடர்ந்து விளையாடலாம். வேறு வேறாக இருப்பின் வாய்ப்பு கணினிக்குச் செல்லும். இவ்வாறு சீட்டு எண்களை நினைவு வைத்து கணினியோடு போட்டியிட வேண்டும்.

சிதறல்

சிதறிக் கிடக்கும் படங்களை ஒன்று சேர்க்க வேண்டும். கணினியைப் பற்றி தெரியாதவர் கள்கூட இதை விளையாட முடியும். எளிதில் கற்றுக் கொள்ளலாம். இதில் மொத்தம் 10 நிலைகள் உள்ளன.

டிக் டாக் டோ

தரையில் கட்டம் வரைந்து விளையாடிய நம்முடைய பாரம்பரிய விளையாட்டான ஆடுபுலியாட்டத்தை இப்போது கணினியில் விளையாடலாம். இருவராகவோ அல்லது கணினியோடோ விளையாடலாம். நெட் வொர்க்கில் கணினியை இணைத்து இருவராக விளையாடலாம்.

கபாலி

ஓரு ஊரில் ஒரு பொருளை வாங்கி வேறோர் ஊரில் விற்க வேண்டும். சில ஊரில் விலை குறைவாக இருக்கும். சில ஊரில் விலை அதிகமாக இருக்கும். கூடுதலாக விற்பதே சாமர்த்தியம். இலாபம் சம்பாதிப்பதே இதன் நோக்கம். பணத்தைக் கையில் வைத்திருந்தால் கொள்ளையடிக்கப்படுவதும், போலீஸ் துரத்துவதும் விறுவிறுப்பைக் கூட்டுகிற மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளன.

கொமுக்கு

இதில் கட்டங்களில் காய்களைக் குறுக் காகவோ, நெடுக்காகவோ வரிசைப்படுத்தி வெற்றி பெற வேண்டும். கட்டங்களின் எண்ணிக்கையையும், காய்களின் எண்ணிக்கையையும் கூட்டிக் கொள்ளலாம். முதல் இரண்டு நிலை எளிதாக இருக்கும். மூன்றாவது நிலைதான் எல்லோரையும் அமுக்கும் நிலை.

கோடீஸ்வரன்

இந்தக் குறுந்தகட்டிலே மிக மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும் விளையாட்டு இது. விளையாட்டின் துவக்கத்தில் வரும் இசை கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் பங்கேற்பது போன்ற உணர்ச்சியை ஊட்டுகிற வகையில் அமைந்துள்ளது. சுமார் 2000 பொது அறிவுக் கேள்விகள் உள்ளன.

ஒவ்வொரு முறை விளையாடும் போதும் வெவ்வேறு கேள்விகள் வரும். மற்றும் 50/50, நண்பனிடம் தொலைபேசியில் கேட்டல், பார்வையாளர்களின் உதவி போன்றவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம். சரியான பதில் சொன்னால் சபாஷ் என்ற கைதட்டலும், தவறான விடை சொன்னால் எக்காளமான சிரிப்புச் சத்தமும் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பதிலை நீங்கள் சொன்னவுடன் 'சரியாகத்தான் சொல்கிறீர்களா', 'நிச்சயமாகத் தெரியுமா' போன்ற கேள்விகள் ஒலியுடன் திரையில் தோன்றி விறுவிறுப்பைக் கூட்டுகின்றன.

நிஜ கோடீஸ்வரன் நிகழ்ச்சி போல் 'இதில் எது இனிப்புப் பதார்த்தம்' போன்ற சொதப்பல் கேள்விகள் போல் அல்லாமல், இந்தக் குறுந்தகட்டில் உள்ள அனைத்துக் கேள்விகளும் பொது அறிவை வளர்க்கும் விதத்திலேயே அமைந்துள்ளன. குழந்தைகள் இதை விளையாடும் போது கண்டிப்பாக ஆனந்தத்தை அனுபவிப்பார்கள்.

மேற்கண்ட இரு குறுந்தகடு மட்டுமல்லாமல், 'மனு2000', 'இதம்2000' போன்ற குறுந்தகடுகளையும் சென்னைக் கவிகள் நிறுவனம் தயாரித்துள்ளது. "மிகுதியான வரவேற்பைப் பெற்றுள்ள இந்த இரண்டு குறுந்தகடுகளையும் வாடிக்கையாளர்கள் நலன் கருதி 950 ரூபாய்க்கு (ஒரு சிடியின் விலை) தரப்பட்ட இவற்றை 500 ரூபாய்க்குத் தரத் தயாராகயிருக்கிறோம்" என்று கூறுகிறார் சுரேஷ் சுப்பையன்.

மேற்கண்ட குறுந்தகடுகளைப் பெற விரும்புபவர்கள்

சென்னைக் கவிகள்

2, ரெட்டி காலனி,
ராமலிங்காபுரம்,
சென்னை-600012
தொலைபேசி: 6426557
www.chennaikavigal.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

சரவணன்

© TamilOnline.com