Tamil.net
தமிழ் டாட் நெட் உலகத் தமிழர்களிடையே ஒருங்கிணப்புப் பாலமாக விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒருங்கி ணைப்புப் பாலம் என்பதற்கு, அமெரிக்காவிலுள்ள தன்னார்வத்துடன் தமிழ் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண்களைத் தந்துள்ளதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தமிழில் மிகச் சிறப்பாக இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிற இணையத் தளங்களுக்கான இணைப்பும் தமிழ் டாட் நெட்டில் தரப்பட்டுள்ளது. அது போக அரசு சார்ந்த

இணையத் தளங்களுக்கான இணைப்பும், மாநகராட்சி மற்றும் முனிசிபால் அலுவலக இணையத் தளங்களுக்கான இணைப்பும் தரப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கான விவாதக் களத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த விவாதக் களத்தில் உலகளாவிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் எந்தப் பிரச்சனைகள் குறித்தும் நீங்கள் விவாதம் செய்யலாம். தமிழ் டாட் நெட் வழியாக இணையத் தளத்தில் வந்து சேர்ந்த தமிழ் வலைவாசிகள் அத்தனை பேரின் மின்னஞ்சலும் அவர்களின் பெயர்களுடன் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த 'குயில்' என்கிற இணைய இதழும் இடம் பெற்றுள்ளது. தமிழைக் கற்பிப்பதற்காகவும் விஷேச பக்க மொன்றை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப் பக்கத்தில் அறிவியல் தமிழ், பேச்சுத் தமிழ், உரைநடைத் தமிழ், இணையத் தமிழ் என தமிழின் வழியாகச் சாத்தியமாகும் அத்தனை அம்சங்களையும் கற்றுக் கொள்வதற்கு வசதி வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளார்கள். இந்தப் பக்கத்துக்கு நுழைவதற்கு முன்னதாக ஒலி வடிவில் தமிழ்த் தாய் வாழ்த்தைக் கேட்பதற்கு ஏதுவாய் வடிவமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

ஜோதிடம், தமிழ்த் தொழில்நுட்பக் குறிப்புக்கள், இலவச தமிழ் மென்பொருட்கள் இறக்குமதி, தமிழ்க் கவிதைகள், உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ளும் வகையில் numTV.com தளத்தின் இணைப்பு என எல்லா வகைகளிலும் வலைவாசிகளுக்கு உபயோகப் படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இசை மற்றும் நாட்டியத்துக்கான பக்கத்தில், தமிழ் இசைத் தளங்கள், கர்நாடக இசைத் தளங்களில் வீணை, வயலின், புல்லாங்குழல், மிருதங்கம் போன்ற தனித்தனி பிரிவுகளும் உள்ளன.

தமிழ்க் கலாச்சாரத்தில் கோலம் என்கிற தலைப்பிலும் ஒரு இணைப்பு தரப்பட்டுள்ளது. இந்தியக் கோயில்கள், இந்தியத் தத்துவம், தமிழ்த் தொலைக்காட்சி, செய்தித் தாள்கள், தேடுதல் எந்திரம், விவாதக்களம் போன்ற பல்வேறு வகைகளில் வலையாடுபவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிற வகையில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

திருமணச் சேவைப் பக்கம், வாழ்த்து அட்டைகள், தமிழ் நாள்காட்டி, தமிழ்ச் சினிமா, நடிக நடிகையர் பற்றிய தகவல்கள், பாடல்கள் போன்ற பக்கங்களுக்கும் இணைப்புக்கள் தரப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களின் தளங்கள், தமிழ்ச் சங்கங்களின் தளங்கள், இலங்கை சார்ந்த இணையத் தளங்கள், தமிழ் இஸ்லாமியர்களின் சிறப்புத் தளங்கள் போன்றவைகளுக்கும் இணைப்புக்கள் தரப்பட்டுள்ளன.

அரிய பல தகவல்களை அறிந்து கொள்ள கண்டிப்பாக உலாவ வேண்டிய தளம் www.tamil.net

******


தமிழ் டாட் நெட்டிலிருந்து...

விசிஷ்டாத்வைதம்

தைத்ரியோபநிஷத்து 'உலகின் காரணம் எதுவோ அது பிரும்மம்' என்று பிருகுவல்லியில் கூறுகிறது. நாராயணோபநிஷத்திலும் இன்னும் சிலவற்றிலும், 'நாராயணனே உலக காரணம்' என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே ஸ்ரீமந் நாராயணனே பிரும்மம் ஆவார்.

பெரியதான, (புனித) குணங்கள் இருப்பதால் 'அது பிரும்மம் எனப்படுகிறது' என்கிறது உபநிஷத்து. ஆகவே, அந்த உள்ள ஒரே பொருளான விசிஷ்ட பிரும்மே கலியாண குணங்களுடையது ஆகும். இப்படி, பிரத்யட்ச, அனுமான ஆகம பிரமாணப்படி உண்மை இதுவே ஆகிறது. இதிலிருந்து 'நிர்குண பிரும்மம்' என்று எதுவும் இல்லை என்று தள்ளப்படுகின்றது.

ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக் கும் உள்ள அங்க வேறுபாட்டு விசேஷமே (சிறப்பு) பொருளைப் புலன்களால் அறிய வைப்பது. இல்லாவிடில், ஒரு பசுமாட்டிற்குப் பதிலாகப் பன்றியைக் கொண்டு வந்து விட நேரும். ஆகவே நேரடிப் புலனறிவில் ஸ்ரீ சங்கரர் கூறுவது போல, பொருள் பற்றிய தனிஞானம் மட்டும் உண்டாக வழியே இல்லை.

இதை வைத்தே உண்டாகும் அனுமான அறிவிலும் அப்படித்தான். பொருளின் அறிவு மட்டும் தனியாக உண்டாகாது. புகையுடன் நெருப்பைக் காண்கிறோம். வேறெங்காவது புகை மட்டும் கண்டால் நெருப்பு அங்கே இருக்கும் என ஊகிக்கிறோம். இது அனுமானித்தல். நெருப்பு என்றால் சூடுள்ள பொருள் என்றே அறிகிறோம்.

தனியாக ஒரு பொருள் பற்றிய ஞானம் உண்டாவதில்லை என்பதே தற்கால ஐரோப்பிய தர்க்கவாதி சொல்லுவதும்: 'concept is not the unit of thaought; but judgement is the unit of thoughts" என்கிறார்கள்.

-டாக்டர் கே.லோகநாதன்

******


நமது சமுதாயத்தில் ஆணுக்கிருக்கிற வாய்ப்பு பெண்ணுக்கில்லை. குழந்தை குட்டிகளைப் பெற்று வாழும் ஒரு முப்பது வயது பெண்மணி திடீரென சம்பாதிக்கும் கணவனை இழக்க நேரிடுகிறது என்றால், அந்தக் குடும்பம் தெருவில் நிற்க வேண்டிய கதிக்கு வந்து விடுகிறது. அதைப் பார்க்க சகிக்காமல்தானோ என்னவோ அவர்களை உடன்கட்டை ஏற்றினோம்? இன்று அவர்கள் வயதேறிய பெற்றோர்களின் அரவணைப்பிலோ, அண்ணன் தம்பிகளின் ஆதரவிலோ வாழவேண்டிய நிலை. தன் காலிலே நிற்க வேண்டிய வழிமுறைகளையோ வாய்ப்புக்களையோ நாம் அளிக்கவில்லை. சமுதாயம் அளிக்கவில்லை.

நான் சொல்ல விரும்புவது; தன்னம்பிக்கை கொடுக்காமல்,'ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்ற சம்பிரதாய - ஆண் கண்ணோட்டத்தில் நமது பெண்கள் பெரும்பாலானவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். ஒரு பெண்ணையும், ஒரு பையனையும் நாம் இரண்டு விதமாக வளர்ப்பது சரியல்ல; நியாயமல்ல. நம் வருங்கால சமுதாயத்திற்கே கேடு செய்கிறோம். அதனால்தான், 'பயம் ஒரு தாய் தரும் நோய்' என்று சில மனோதத்துவ பேராசிரியர்கள் அபிப்ராயப்படுகிறார்கள்.

நமது இலக்கியமோ, 'சீறிவந்த புலியதனை முறத்தினாலே சிங்கார மறத்தி ஒருத்தி துரத்தினாளே!' என்று பாடுகிறது. நடைமுறையோ, வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற வழக்கமடா உன் வழக்கம் என்று சாடுகிறார் பாரதி. "காதலென்றால் இலக்கியத்தில் மகிழ்வார். அதுவே வீட்டோரத்தில்- கொல்லைக் கிணற்றங்கரையில் வந்து விட்டதென்றால் வெகுள்வார்!" இதுவும் நம் வழக்கம்தான். நம் சமுதாயத்திற்கு இரட்டை நாக்கு!

நமக்கு வேண்டிய காரியங்களுக்காகவும், நம்மைப் பாதிக்காத காரியங்களுக்காகவும் பெண்ணைப் போற்றுவதும் நடைமுறையில் பெண்ணை நாலடி பின் தள்ளி நடக்கச் சொல்வதும் பெரும் சமுதாயப் புரட்டு!

-எம்.எஸ். உதயமூர்த்தி

சரவணன்

© TamilOnline.com