சூரியனுக்கு ஒரு கோயில்
''ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்''

சிலப்பதிகாரத்தில் வரும் மங்கல வாழ்த்துப் பாடலில் இடம்பெறும் இச்செய்தி, பரத நாட்டில் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சூரியனை வழிபடும் வழக்கம் இருந்திருப்பதைப் புலப்படுத்துகின்றது. தமிழர் கொண்டாடும் விழாக்களில் முக்கியமானதும், முதன்மை யானதுமான தைப் பொங்கல் விழாவும் சூரிய வழிபாட்டினையே குறிக்கின்றது.

தஞ்சை மாவட்டத்தில் திருவிடை மருதூரில் காவிரியின் வடகரையில் சூரியனுக்கென்றே ஓர் ஆலயம் உள்ளது. திருவாடுதுறைக்கு ஆதீனத் திற்குச் சொந்தமான இக்கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாகும். 'திருமங்கலக் குடி' என்ற ஊருக்கு அரை கிலோ மீட்டர் தூரத்தி லுள்ள இக்கோயிலுக்கு, கும்பகோணத்திலி ருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.

தலவரலாறு

காலவமுனிவர் என்றொருவர் இமயமலைச் சாரலில் தவம் செய்து கொண்டிருந்தார். முக்காலமும் அறியும் திறம் உடையவர். இதனால் அங்கிருந்த மற்ற துறவிகளெல்லாம் இவரிடம் தங்களது வருங்கால நிகழ்வுகள் குறித்துக் கேட்டறிவது வழக்கம். ஒரு நாள் இளந்துறவி ஒருவர் காலவமுனிவரிடம் தன் வருங்காலம் பற்றிக் கேட்டார். தம்முடைய ஞானதிருஷ்டியால் இளந்துறவியின் எதிர் காலத்தை அறிந்த காலவர் ''குறிப்பிட்டுக் கூறும்படி எதுவுமில்லை'' என்றார். உடனே, அத்துறவி ''மற்றவர் எதிர்காலத்தை உணர முடிந்த நீங்கள் உங்கள் எதிர்காலத்தை இதுவரை எண்ணிப் பார்த்ததுண்டா?'' என்று கேட்கவும், அதிர்ந்துபோய்விட்டார் முனிவர். ''இவ்வளவு துணிச்சலுடன் என்னைக் கேட்ட நீ யார்?'' என்று வினவியபோது, நான்தான் காலதேவன் என்று கூறி அங்கிருந்து மறைந்தே போனார்.

முனிவர் தம்முடைய எதிர்காலத்தைக் கணித்தபோது வெலவெலத்துப் போனார். முற்பிறப்பில் நண்டுகளின் கால்களை முரித்துத் தின்ற பாவத்தின் வினைப் பயனால் எதிர் காலத்தில் தம்மைத் தொழுநோய் வாட்டப் போவதை உணர்ந்தார். இதனால் வாடிப்போன அவர் முகத்தைக் கண்டு பரிதாபப்பட்ட மற்ற முனிவர்கள் அதற்கான காரணத்தைக் கேட்ட றிந்து அவருடைய துன்பத்தைப் போக்கும் மார்க்கத்தையும் சுட்டிக் காட்டினார்கள். அதாவது நம்முடைய வினைகளை நாம் அனுபவிக்கக் கருவியாக அமைந்தவர்கள் நவக்கிரகங்கள் என்பதால் அவர்களைத் துதித்துத் தவம் செய்து வினைப் பயனிலிருந்து விடுதலை பெறலாம் என்பதுதான் அவர்கள் காட்டிய மார்க்கம்.

காலவமுனிவரும் இமயமலையை விடுத்து, விந்திய மலைக்கு வந்து பஞ்சாக்கினி வளர்த்து கடுந்தவம் புரியலானார். அவரது தவத்தின் உக்கிரகம் நவக்கிரகங்களின் எல்லையைச் சென்று தகித்தது. எனவே, நவக்கிரகங்கள் ஒன்றாய்க் கூடி முனிவருக்குக் காட்சியளித்து அவர் வேண்டியபடியே தொழுநோய் அவரை அணுகாதபடி வரமும் தந்தனர். வரத்தைப் பெற்றுக் கொண்ட காலவமுனிவர் மீண்டும் இமயமலைச் சாரலை அடைந்தார்.

முனிவர் பெற்ற வரம்பற்றி அறிந்த பிரமதேவர் வெகுண்டார். காலதேவனின் கட்டளையை மீறி, காலவமுனிவருக்கு வரம் கொடுத்ததால் அவர் நோயால் துன்பப்பட வேண்டிய கால அளவு வரை நவக்கிரகங்கள் தொழுநோயால் துன்பப்படுமாறு சாபமிட்டார். தங்கள் தவறுணர்ந்து மன்னிப்புக் கோரிய நவக்கிரகங்களுக்குப் பிரமதேவர் சாபவிமோசனமாக ஒரு வழியைக் கூறினார்.

சாபவிமோசனம், மண்ணுலகில் புண்ணிய பூமியாம் பரதகண்டத்தில் காவிரியாற்றங் கரையில் 'அர்க்கவனம்' என்ற வெள்ளெருக்குக் காட்டில் (அர்க்கம் = வெள்ளெருக்கு) தங்கி, கார்த்திகை மாத முதல் ஞாயிறு தொடங்கி, 78 நாட்கள் தவம் புரிந்து அங்கு கோயில் கொண்டுள்ள 'பிராணவரதர்' பெருமானையும் 'மங்கள நாயகி' அம்மனையும் வழிபட வேண்டும் என்றும், திங்கள் கிழமைதோறும் உதயாதி ஏழு நாழிகைக்குள் வெள்ளெருக்கு இலையில் ஒரு பிடி தயிர் அன்னம் வைத்துப் புசிக்க வேண்டும் என்றும், மற்ற ஆறு நாட்களும் உணவின்றி நோன்பிருக்க வேண்டுமென்றும் கூறினார் பிரமதேவர். இதுவே அவர்களுடைய சாபத் திற்கு விமோசனமாகும்.

காவிரிக்கரையில் நவக்கிரகங்கள் பிராண வரதரைத் தரிசிக்க வந்து கொண்டிருந்த அகத்தியரைச் சந்தித்து தங்களது சாபவரலாறு கூறி அவர் துணையுடன் கோயிலை அடைந் தனர். வனத்திலிருந்த நவதீர்த்தங்களை ஆளுக் கொன்றாக கொண்டு நாள்தோறும் நீராடி எந்தத் தவறும் நேராதவண்ணம் நோன்பிருந்து தவமியற்றினர்.

தவத்தை முடிக்கின்ற நாளிலே பிராண வரதரும், மங்கள நாயகியும் காட்சி தந்து தொழுநோயை நீக்கினர். அவர்கள் அனுபவித்த தொழுநோய்த் துன்பம் பற்றியும் தவமிருந்து சாபம் தீர்ந்தது பற்றியும் அகத்தியர் வாயிலாகக் கேட்டறிந்த காலவமுனிவரும் வெள்ளெருக்கு வனம் வந்து அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அங்குள்ள இறைவனை வணங்கிப் புனிதமானார். வெள்ளெருக்கு வனத்தில் நவக்கிரகங்கள் தவம் செய்த இடம் தனி ஆலயமாகி நவக்கிரகங் களுக்கே உரிய தலமாயிற்று. இத்தலமே இன்றைக்கு சூரியனார் கோயில் என வழங்கப்படுகின்றது.

வெள்ளெருக்கு இலையில் ஒரு பிடி தயிர் அன்னத்தை வாரத்தில் ஒரு நாள் உண்ணுவதில் அடங்கியுள்ள இரகசியத்தை நவக்கிரகங் களுக்கு அகத்தியர் விளக்கியிருப்பதை நாமும் தெரிந்துகொள்ளுவது நல்லது.

எருக்க இலையில் தயிர் அன்னத்தை வைத்தால் எருக்க இலையின் சாரத்தில் ஓர் அணுப் பிரமாண அளவு தயிர் அன்னத்தில் கலக்கும். அந்த அணுப்பிரமாண அளவு சாரம் தொழுநோய்க்கு மருந்தாகும். எருக்கின் சாரத்தைத் தனியாகப் பிரித்தெடுக்கும் மருத்துவ வழியாகும்.

நம்முடைய முன்னோர்கள் அறிந்து வைத்துள்ள வரலாற்றுச் செய்திகளில் அடங்கியுள்ள இதுபோன்ற மருத்துவ உண்மைகள் ஏராளம்! ஏராளம்!!

டாக்டர். அலர்மேலு ரிஷி

© TamilOnline.com