சங்கீதக் கொடி
இசையென்னும் பெயராலே
வசையாத மனமேது
திசையெங்கும் சென்றாலும்
இசையில்லா மதமேது
சங்கத் தமிழில் சங்கீதம்
வங்கக் கடலலையும் கீதம்
வெண்கல மணி கிங்கிணுக்கையிலே
அங்கும் புனித சங்கீதம்
அசைப் போடும் ஆவினமும்
பசி மறந்த பேரறிவும்
ருசித்திட்ட திரு நாமம்
இசை என்னும் ஒரு நாமம்
பிறப்பிற்கு ஓர் ராகம்
இறப்பிற்கும் ஓர் ராகம்
சிரிப்பிற்கும் ஓர் ராகம்
வெறுப்பிற்கும் ஓர் ராகம்
களிப்பிற்கும் ராகமுண்டு
சிறப்பிற்கும் ராகமுண்டு
காதலர்கள் கரம்சேர
ஸ்ருங்கார ராகமுண்டு
கோபத்தில் இசையுண்டு
தாபத்தில் இசையுண்டு
பரதம், கதக் குச்சுபுடி
கதக்களியில் இசையுண்டு
கடற்கரையில் வேர்க்கடலை
வறுப்பவன் கை இசையுண்டு
ராகதானம் பல்லவி செய்
கலைஞனிடம் இசையுண்டு
ராகத்திற் கிசையாத
எவ்வுயிர் இவ்வுலகிலுண்டு
சங்கீதக் கொடியே நீ
சந்தோஷமாய் பறவாய்.

ரோஸ் முரளி கிருஷ்ணன்

© TamilOnline.com