கீதாபென்னெட் பக்கம்
2002- தென்றல் வாசகர்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

போனமாதம் தென்றல் என் பேட்டியை வெளியிட்டு என்னை கெளரவப்படுத்துயது, மிக்க நன்றி. என்னைப் புகைப்படம் எடுக்க நான் யாரையும் சாதாரணமாக அனுமதிப்பதில்லை. ஏனென்றால் அதில் என்னைப் பார்த்து விட்டு நேராக பார்க்கும் போது ''என்ன மேடம்? நேரில் பார்க்கும்போது கொஞ்சம் அழகாகவே இருக்கிறீர்களே'' என்று சொன்ன பேர் நிறைய. அப்படியில்லாமல் நிஜமாகவே ஓரளவு பார்க்கும்படி என்னைப் படம் எடுத்த திரு. வெங்கட்ராமனுக்கு சிறப்பு நன்றி.

அந்த பேட்டியில் எழுத்தாளர் அம்பையைப் பற்றி நான் குறிப்பிட்டதாக வந்திருப்பது அவர் எழுத்தைப் பற்றி பேசியதற்குப் பின் வேறொரு தலைப்பின் கீழ் வந்தது. அவரைப் பற்றி நான் அப்படி குறிப்பிடவில்லை என்பதை இங்கே தெளிவுபடுத்திவிடுகிறேன்.

டிசம்பர் மாதம் - மார்கழி திங்கள் - பல வருடங்களாக இந்த மாதத்தில் நான் சென்னை யில் தான் இருந்திருக்கிறேன். இசைவிழாவில் பங்கு கொள்வதற்காக ஏப்ரலில் இருந்தே ஆயத்தங்கள் செய்ய ஆரம்பித்துவிட வேண்டும். முன்னெல்லாம் அமெரிக்கத் தபாலை நம்பி யிருக்க வேண்டியிருந்தது. நான் சென்னைக்கு வருவதை விமானத் தபால் மூலம் தகவல் சொல்லி சபாக்காரர்கள் அதை பரிசீலித்து எனக்கு கச்சேரிகள் கொடுக்க வேண்டும். பலமுறை சென்னையை டிசம்பரில் சென்று அடைந்த பிறகு தான் எங்கெல்லாம் வாசிக் கிறேன் என்றே தெரியவரும், இப்போதோ எல்லாருமே மின் தகவல் மூலம் விஷயத்தை சொல்லி விடுகிறார்கள். அத்தோடு சங்கீதம், கர்நாடிகா, கர்நாடிக் மியூசிக் அல்லது சென்னை ஆன்லைன் டாட் காமில் யார் யார் எந்தெந்த இடங்களில் வாசிக்கிறார்கள், யார் பக்க வாத்தியம் என்று எல்லாம் விலாவாரியாக தெரிய வந்துவிடுகிறது.

திருமணத்திற்குப் பிறக வருடா வருடம் சென்னை செல்ல காரணம் அந்த சமயத்தில் நிறைய கச்சேரிகள் கேட்கலாம் என்பதோடு என் தந்தை டாக்டர் எஸ். இராமநாதன் அவர்களிடம் கற்றுக் கொள்ளலாம் என்பதுதான். அப்பா ஏழு மணிக்கு மேல் வெளியே கிளம்பிவிடுவார். அதனால் விடியற்காலை நான்கு மணிக்கு எனக்குப் பாட்டுசொல்லிக் கொடுப்பார், அப்பாவிடம் நான் எதிரே உட்கார்ந்து வீணைக் கற்றுக் கொண்டதாக நினைவு இல்லை. சிறு வயதிலிருந்தே அவர்கூட சேர்ந்து வாசித் திருக்கிறேன். பள்ளிவிடுமுறைகளில் எங்கெல் லாம் அவர் கச்சேரிகள் வாசிக்கிறாரோ, அல்லது ஆராய்ச்சிக்காக போகிறாரோ அங்கெல்லாம் என்னையும்கூட கூட்டிச் செல்லுவார். அவர் என் சகோதரி வித்யா ஹரிஹரனுக்கும் என்னையும் எதிரே அமர வைத்து சொல்லிக் கொடுத்த நாட்கள் மறக்க முடியாதவை.

மார்கழி மாதக் குளிரில் காலை நான்கு மணிக்குச் சுடச்சுட முதல் டிகாஷன் காபியை அருந்திவிட்டு அப்பாவிடம் கற்றுக் கொண்ட பிந்துமாலினி, காங்கேயபூஷணி, நடபைரவியை ஜன்மத்திற்கும் மறக்க முடியாது. அப்பா உயிரோடு இருந்த சமயத்தில் சீசனில் ஒன்றிரண்டு கச்சேரிகளுக்கு மேல் வாசிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததில்லை. அதைப் பற்றி நானும் யோசித்ததில்லை. என்னுடைய எந்த கச்சேரிக்கும் ஆஜர் ஆகிவிடுவார்.

மைலாப்பூர் ·பைன் ஆர்ட்ஸில் நான் வாசித்த ஒரு கச்சேரிக்கு அப்பா வரவில்லை என்று குறை. எவ்வளவோ கெஞ்சியும் மறுத்துவிட்டார். அதன் பின் மூன்று மாதங்களில் அமரர் ஆகிவிட்டார். எழுத்தாளர்கள் சாதரணமாக தங்களது சொந்த விஷயங்களை கதையாக எழுதுவது இல்லை. ஆனால் அப்பா இறந்தபின் 'அழுது விடு விலாசினி' என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை என் துக்கத்திற்கு வடிகாலாக அமெரிக்கா விலிருந்து எழுதினேன். அக்கதை குமுதத்தில் பிரசுரமாகியது. அப்பா மறைவுக்குப் பின் டிசம்பரில் சென்னை செல்கிறபோதெல்லாம் ஒரு வெற்றிடம் தெரிகிறது. கண்ணீரை வரவழைக்கிறது.

இந்த வருடம் டிசம்பர் சீசனுக்கு நான் சென்னை செல்லவில்லை.

© TamilOnline.com