ஒலியாலே உணர்வைச் சொன்னவன் கம்பன்
வார்த்தை புரியாதவர்க்கும் செய்யுள் ஒலிக்கும் முறையிலேயே உணர்வுகளைச் சொல்லி விடுமளவுக்குக் கவிதைகளை அமைத்தவன் கம்பன். இந்தப் பாடலைக் கேளுங்கள்:

பஞ்சிஒளிர் விஞ்சுகுளிர்ப் பல்லவம் அனுங்க
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடியள் ஆகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்.


கேட்டவுடனேயே ஏதோ மிக மென்மையான ஒன்று விவரிக்கப்படுகிறது என்பதைச் சொல்லிவிட முடிகிறதல்லவா?

அவ்வளவும் மெல்லொலி பயின்றுவரும் சொற்கள்.

பொற்றேர் பரிமா கரிமா பொருதார்
எற்றே படைவீரரை எண்ணிலமால்
உற்றேவிய யூகம் உலோகமுடைச்
சுற்றாயிரம் யோசனை உள்ளதனை.


இவ்வாறு வீரம், வேகம், அவலம், முரசொலி எழுப்புதல், போர் என்று ஒவ்வொன்றைச் சொல்கையிலும் அவற்றிற்கே உரிய தனிச் சந்தத்தை அமைத்த பெருமை கம்பனுக்கே உண்டு. உலகமொழிகள் எவற்றிலும் இவ்வாறு காண முடியாது என்று கூறுகிறார் பெர்க்கிலிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்.

'கம்பனில் ஒலியும் உணர்வும்' என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றிய கவிஞர் மதுரபாரதி அவர்கள் மேற்கண்டவாறு கூறினார். வடகலிபோர்னியத் தமிழ்மன்றத்தினர் சனவரி 19ம் தேதி நடத்திய பொங்கல்விழாவில் அவர் பேசினார். அதற்கு முன்னர் மன்றத்தின் வருடாந்திரப் பொதுப் பேரவைக் கூட்டம், வரும் ஆண்டிற்கான நிர்வாகக் குழுத் தேர்தல், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தன.

© TamilOnline.com