அன்னப்பூர்ணா, ஷாலினி அரங்கேற்றம்
இந்த வருடம் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி நடைபெற்ற குமாரிகள் அன்னப்பூர்ணா, ஷாலினி ஆகியோர்களின் அரங்கேற்றம் Thasand Civic Arts and Plazaவில் நடைபெற்றது. இந்தச் சகோதரிகளின் தாயார் பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்தவர். தகப்பனார் இந்தியர். பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த இவர்களது தாயார் தங்கள் குழந்தைகளுக்கும் பரத நாட்டியம் கற்பிக்க ஆசைப்பட்டு, நாட்டியத்தில் இன்று சிறந்த குருவாக விளங்கும் திருமதி பத்மினி வாசனிடம் ஏழு வருடங்கள் பரதநாட்டியம் கற்க வைத்து அரங்கேற்றம் நடத்தி சாதனை ஒன்றை செய்திருக்கிறார்.

அரங்கேற்றத்துக்கு சுமார் இரண்டு மாதங் களுக்கு முன்பு செல்வி அன்ன பூர்ணாவின் காலில் ஏற்பட்ட சிறு விபத்தால் அவரால் தொடர்ந்து ஒருமாதத்திற்கு பயிற்சி செய்ய முடியாத நிலையிலும், தொடர்ந்து கடினமாக பயிற்சி எடுத்து, அரங்கேற்ற மேடையில் சிறப்பாக ஆடினார்.

செல்வி ஷாலினியும் தன் சகோதரியைப் போல் கடினமாக பயிற்சி எடுத்து நன்றாக ஆடினார். சங்கராபரண வர்ணம் இந்த நிகழ்ச்சிக்கென்றே புதிதாக குரு ஸ்ரீமதி பத்மினி வாசனால் தேர்வு செய்யப்பட்டு ஸ்வர வரிசைகளும் ஜதிகளும் இனிமையாக அமைந்து இருவரும் சிறப்பாக ஆடினார்கள். "போ சம்போ சிவசம்போ" எனும் ரேவதி ராகப்பாட்டுக்கு ஷாலினி ஆடிய நடனம் அந்த தில்லை நடராஜனே வியக்கும்படி இருந்தது. அன்னபூர்ணாவின் தோற்றமும், நாட்டியமும் அரங்கேற்றத்தை வெகுவாக மெருகேற்றியது.

பாபு பரமேஸ்வரன் வாய்ப்பாட்டு பாட, வினோத் வியலின் வாசிக்க, கிருஷ்ணகுமார் மிருதங்கம் வாசிக்க, மகாதேவன் புல்லாங்குழல் இசைக்க, இவைகளுடன் சகோதரிகளின் நாட்டியம் மிகவும் கச்சிதமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் குரு பத்மினி வாசனின் அனுபவமும், கடின உழைப்பும் சேர்ந்து நாட்டியத்தை பிரகாசிக்க வைத்தது என்றால் அதுமிகையல்ல.

ராமன் சக்கரவர்த்தி

© TamilOnline.com