சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்' இந்தக் கருத்தைச் சொன்னவர் மிகவும் பிரபல மானவர். அவர் கிட்டத்தட்ட ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பவணந்தி முனிவர் என்பது அவரது பெயராக இருந்தாலும், அவர் எழுதிய 'நன்னூல்' என்கிற இலக்கண நூல் பெயரின் அடிப் படையில் 'நன்னூலார்' என்று தமிழ் அறிஞர் களால் அழைக்கப்படப்பட்டு வருபவர்.

'சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்' என்பது ஆசிரியர்களுக்கான அடிப்படைக் குணமாக இருக்க வேண்டும் என்பதைத் தான் அவர் வலியுறுத்தினார். பெரியவர்களுக்கே சுருங்கச் சொல்லல் என்ற நிலையிருக்கையில் குழந்தை களுக்கு மிகவும் சுருங்கச் சொல்ல வேண்டி யிருக்கிறது.

ஒரு முறை அறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷாவிடம் ஒருவர் குழந்தை இலக்கியங்கள் எழுதுவது குறித்து கேள்வி கேட்டார். கேள்வி கேட்டவரிடம், "நான் குழந்தைகளுக்கான ஒரு புத்தகம் எழுதுகிற நேரத்தில் பெரியவர் களுக்கான ஓராயிரம் புத்தகங்கள் எழுதி விடுவேன்" என்று பதில் சொன்னார். அவர் சொன்னதன் பொருள் குழந்தைகளுக்கு எழுதுவதற்கு நிறையச் சிரமங்கள் எடுத்துக் கொண்டு அவர்களுக்குப் புரிகிற விதத்தில் எழுத வேண்டும் என்பதேயாகும்.

"ஒரு தேசம் குழந்தைகளுக்கு எத்தகைய புத்தகங்களை உண்டாக்கித் தருகிறது என்பதைக் கொண்டு அந்த தேசத்தின் முன்னேற்றத்தைத் தீர்மானித்து விடலாம் என்று கூறுவார்கள். நாம் சுதந்திரம் அடைந்த பிறகு எவ்வளவோ முன்னேற்றமடைந்திருக்கிறோம். ஆனால் மேலே கூறிய அளவுகோலைக் கொண்டு பார்த்தால், நாம் இன்னும் பின் தங்கியே இருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தியாவிலுள்ள மாணவர்கள் எல்லோரும் படிக்கக்கூடிய ஒரு பொதுவான நூல் இருப்பதாகவே தெரியவில்லை. அதனால்தான் தேசிய ஒருமைப்பாட்டிற்கு நமது கல்வி முறை மிகச் சிறிய அளவிலேயே உதவுகிறது. இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் விதமாக 'நேரு பால புத்தகாலய'த்தின் கீழ்த் தயாரிக்கப்படும் புத்தகங்கள் நம் குழந்தைகளின் இந்த முக்கியமான தேவையைப் பூர்த்தி செய்யும் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி யடைகிறோம். நம் நாட்டிலுள்ள முக்கியமான மொழிகளைப் பேசும் குழந்தைகள் அனை வருக்கும் அழகான முறையிலே தயாரித்து வெளியிடப்பட்டதுமான உயர்ந்த நூல்கள் கிடைக்கும்படியாக இந்திய தேசிய புத்தக டிரஸ்ட் திட்டம் வகுத்துள்ளது" என்ற முன்னுரையுடன் நேரு பால புத்தகாலயம் பல அரிய புத்தகங்களைக் குழந்தைகளுக்காக வெளியிட்டு வருகிறது.

மிகச் சிறந்த எழுத்தாளர்களால் இந்த நூல்கள் எழுதப்படுகின்றன. அல்லது மொழிபெயர்க்கப் படுகின்றன. நேரு பால புத்தகாலயம் 'இந்திய தேசிய புத்தக டிரஸ்ட்' திட்டத்தின் கீழ்ச் செயல்பட்டு வருகிறது.

தலைப்பிலிருந்து, புத்தகத்தினுள்ளே வரும் விசயங்கள், வடிவம், படங்கள் வரை எல்லாமும் குழந்தைகளுக்குப் புரிகிற விதத்தில் மிக எளிமையாகத் தரப்பட்டுள்ளன. 'பறவைகளைப் பார்', 'என்றும் வாழும் புத்தகங்கள்', 'பலூன்', 'நீரின் கதை', 'ஒரு பாம்பும் தவளைகளும்', 'மித்தாவும் அவளது மந்திரக் காலணிகளும்', 'நம் நதிகள்', 'தண்ணீர்', 'நமது பூமி', 'அவர்கள் கண்ட இந்தியா'... எனப் பல்வேறுபட்ட தலைப்புகளின் அடிப்படையில் அரிய விசயங்களை இந்தப் புத்தகாலயம் புத்தகங்களாகத் தொகுத்துத் தருகிறது.

இனிமேல் குழந்தைகள் 'அம்மா மழை எப்படிப் பெய்கிறது?' என்று கேள்வி கேட்டால், பயந்து போய்விட வேண்டாம். "'மழை எப்படிப் பெய்கிறது என்றுதானே கேட்டாய். போய் நேரு புத்தகாலயம் வெளியிட்ட 'மழையின் கதை' புத்தகத்தைப் படி!" என்று துணிந்து பதில் சொல்லலாம். அந்தளவிற்கு பெற்றோர்கள் கதையாய்ச் சொல்வதை விட, விஞ்ஞான ரீதியிலுள்ள விளக்கங்களை இந்த நிறுவனம் கதை மாதிரிச் சொல்லியிருக்கிறது.

இந்திய வரலாறு, சுதந்திரப் போராட்ட வரலாறு, காந்தி மகானின் வாழ்க்கை வரலாறு, இமயமலை பனிச் சிகரங்கள் பற்றிய பிரிகேடியர் ஒருவரின் பயணக் கட்டுரை... என குழந்தைகளின் வரலாறு மற்றும் புவியியல் அறிவைப் பெருக்கும் நோக்குடனும் பல புத்தகங்கள் இந் நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ளன.

"மரங்கள் எங்கும் தென்படுவதால், அவை எவ்வளவு அற்புதமானவை என்று நாம் யோசிப்பதில்லை. யோசிக்க ஆரம்பித்தால் அதற்கு முடிவே இல்லை. ஒரு மரம் நமக்கு வழங்கும் நன்மைகள் ஏராளம். உண்மையில் நம்மைச் சுற்றி மரங்கள் இல்லை எனில் நம்மால் உயிர் வாழ முடியுமா?" என்று குழந்தைகளை நோக்கி கேள்வி கேட்டுப் பதில் சொல்லும் பாணியில் மரங்களின் இன்றியமையாய தேவை பற்றியும் அதை நாம் காட்டுமிராண்டித்தனமாக வெட்டிக் கொண்டிருப்பதைப் பற்றியும் புரிகிற விதத்தில் விளக்கிச் சொல்லியிருக்கிறார்கள்.

இயற்கை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு செயல்படுகிறது. அதில் நாம் ஒரு தொடர்பைத் துண்டித்தாலும், மற்றொன்று பாதிப்புக்குள்ளாகும் என்பதை விளக்க வருகையில், பின்வருமாறு ஒரு எளிமையான கதையைப் படக்கதையாகத் தந்திருக்கிறார்கள். அந்தக் கதை இப்படி வரும், "ஆணி விழுகிறது, அதனால் குதிரையின் லாடம் தொலைகிறது, லாடம் தொலைந்ததால் குதிரை கீழே விழுகிறது, குதிரை விழுந்ததால் படைத் தளபதி கீழே விழுகிறார், படைத் தளபதி இல்லாத படை தோல்வியுறுகிறது, ஒரு ஆணி தொலைந்ததால் போரில் தோற்றனர்..." இப்படி படு எளிமையாய் இயற்கையின் மகத்துவம் பற்றி எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிச் சொல்கிறார்கள்.

காவிரி, கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்திரா, நர்மதை... ஆகிய இந்தியாவிலுள்ள முக்கியமான ஆறுகள் தோன்றும் இடம், அது ஓடி வரும் வழியிலுள்ள முக்கிய நகரங்கள், அங்குள்ள பண்பாடு, அங்குள்ள மக்களின் பழக்க வழக்கங்கள் ஆகியன பற்றியெல்லாம் விரிவான செய்திகளும் புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

"தாகம் எடுக்கும் போது நாம் தண்ணீர் குடிக்கிறோம். தாகத்தைத் தணிப்பது மட்டுமல்லாமல், நமது உடம்பின் முக்கியமான செயல்பாடுகளிலும் தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடம்பில் உருவாகும் நச்சுப் பொருட்களைச் சேகரித்து அவற்றை உடம்பினின்றும் தண்ணீர் வெளியேற்றி விடுகிறது.

உணவை உண்பதற்கும் தண்ணீரைக் குடிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. உணவுப் பொருட்களை முதலில் ஆராய்ந்து வகை பிரித்துச் சமைத்து உண்கிறோம். ஆனால் தண்ணீரை நேரடியாக அப்படியே குடித்து உடம்புக்குள் அனுப்புகிறோம். எனவே அது சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். நோய்க்குக் காரணமான நுண்கிருமிகள் அதில் இருக்கக் கூடாது. அதில் அதிகமான உப்புப் பொருட்களோ நச்சுப் பொருள்களோ கலந்திருக்கக் கூடாது.

அழுக்குத் தண்ணீரைக் குடிப்பதனால், தொற்று நோய்கள் உட்படப் பல நோய்கள் பரவுகின்றன. நாம் தினமும் குடிக்கும் தண்ணீர் குறைந்த அளவே என்பதால், சுத்தமான குடிநீரைத் தயாரித்துக் கொள்வது இடர்ப்பாடானது இல்லை" இந்தளவிற்குத் தண்ணீரின் உபயோகம் மற்றும் பயன்படுத்தும் முறை பற்றி எளிமையாகச் சொல்லியிருப்பதே நேரு பால புத்தகாலயம் பரவலாக வெற்றி பெற்றதற்குக் காரணம்.

இவ்வளவு அரிய தகவல்கள் அடங்கிய இந்தப் புத்தகங்கள் தமிழ் மற்றும் ஏனைய இந்திய மொழிகள் அனைத்திலும் கிடைக்கின்றன. விலை? கேட்டால் மயக்கமடைந்து விழுந்து விடுவீர்கள்! விலை அதிகம் என்பதற்காக அல்ல; விலை குறைவு என்பதற்காக! ஆம் தரமான இந்தப் புத்தகங்களின் விலை ரூபாய் பத்துக்கும் குறைவே!

தமிழில் வெளியான புத்தகங்களை வாங்க விரும்புபவர்கள்,

இயக்குனர், நேஷனல் புக் டிரஸ்ட், ஏ-5 கிரீன் பார்க், புதுதில்லி- 110016
என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது,

பாரி நிலையம், 1/59 பிராட்வே, சென்னை-600 001, தமிழ்நாடு
என்ற முகவரியிலும் பெற்றுக் கொள்ளலாம்.

சரவணன்

© TamilOnline.com