அன்புமணி Vs வேணுகோபால்!
கடந்த சில மாதங்களாகவே அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தின் இயக்குநர் வேணுகோபாலுக்கும், மத்திய அமைச்சர் அன்புமணிக்கும் இடையே சில காலமாக பல்வேறு விஷயங்களில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் உயர்கல்விகளில் இடஒதுக்கீடு பிரச்சனை உருவாக, அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். இது சம்பந்தமாக மத்திய அமைச்சருக்கும், இயக்குநருக்கும் மோதல் உருவானது.

மத்திய சுகாதார அமைச்சரே இக்கழகத்தின் ஆட்சிமன்ற குழுத்தலைவர் ஆவார். மத்திய சுகாதார அமைச்சராக இருக்கும் அன்புமணி, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி மருத்துவர்களுக்கு ஆதரவாக செயல்படும் இயக்குநர் வேணுகோபாலை பதவிநீக்கம் செய்தார்.

வேணுகோபாலின் பதவி நீக்கத்தை தொடர்ந்து பிரச்சனை பூதாகரமாகியது. உலகப் புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவ மனையின் இயக்குநர் வேணுகோபலை பதவி நீக்கம் செய்தது நியாயமற்ற செயல் என்று இடதுசாரிகள் கண்டனம் தெரிவித்தன. அதுமட்டுமல்லாமல் பாஜக போன்ற எதிர்கட்சிகள் மத்திய அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் வேலைநிறுத்த காலத்திற்கு சம்பளம் கொடுக்க சுதகார அமைச்சகம் மறுக்க, இதனை எதிர்த்து மருத்துவர்கள் உச்சநீதிமன்றம் சென்றனர். உச்சநீதிமன்றம் மருத்துவர்களுக்கு சம்பளம் கொடுக்க மறுக்கும் சுகாதார அமைச்சகத்திற்கு கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் பாராளுமன்றத்தின் சுகாதார நிலைக்குழுவும், இயக்குனர் வேணுகோபால் நீக்கப்பட்டதற்கு அதிருப்தியும், வேதனையும் தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் மீண்டும் அவரை பதவியில் நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியது.

இதற்கிடையில் வேணுகோபால் தனது பதவி நீக்கத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று வழக்கு ஒன்றை டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம் வேணுகோபாலின் பதவி நீக்கத்திற்கு தடைவிதித்தது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com