மே 2002 : வாசகர் கடிதம்
தவம் இருந்து பெற்ற தங்கம் போல் இம்மாத இதழ் (தாமதமாக) கிடைத்தது. நாச்சியார் கோவில் கல் கருடனின் சிறப்பு பற்றி இம்மாத இதழில் வெளி வரும் என்ற என் எதிர்பார்ப்பு வீணாகவில்லை. நாச்சியார் கோவில் பற்றி மேலும் சில தகவல்கள்: முதலில் தாயாருக்கு அமுது நிவேதனம். அதன்பிறகுதான் பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. தாயாரின் பெயரிலேயே ஊரும் சிறப்பிக்கப்படுகிறது. சக்தி வாய்ந்த கல்கருடனை உருவாக்கிய சிற்பி அதற்கு இறக்கைகளை செதுக்கி முடித்தவுடன் அச்சிலை உயிர் பெற்று பறந்துவந்து நாச்சியார் கோவில் பெருமாளை வணங்கிவிட்டு அங்கேயே தங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இன்றும் அது உயிர் உள்ளதாக நம்பப்படுகிறது. 1999 ஆம் ஆண்டு ஜனவரி 18ம் நாள் இறைவனடி சேர்ந்த கருடபட்சிகளை அதே மரத்தினடியில் அடக்கம் செய்து நினைவு மண்டபம் கட்டப்பட்டு வழிபாடும் நடந்து வருகிறது.

விவாதமேடை என்பது ஒரு விஷயத்தை பற்றி பல்வேறு வாசகர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளக்கூடிய பகுதிதான். இதில் சர்ச்சை எதுவும் வர வாய்ப்பு இல்லை.

(அப்படியே வந்தாலும் - வாசகர்களின் கருத்துக்கள் என்னுடையவை அல்ல. ஆசிரியர்/அல்லது விவாதமேடை - விதண்டாவாத மேடையாக மாறும் நேரத்தில் - மாறும் என்று தோன்றினால் - வேறு விஷயத்தை பற்றி விவாதத்தை தொடங்கலாம்- இது எப்படி இருக்கு?)

மீரா சிவகுமார் சோதிட பகுதி தேவையில்லை என்று எழுதியுள்ளார். இதைப் பற்றி வாசகர்களின் கருத்தே விவாதத்துக்குரியதுதான்.

சோதிடம் என்பது நல்ல விஷயம்தான். ராசிபலன் என்பது பொதுவாக சொல்லக்கூடிய பலன்கள். தென்றலில் வரும் ராசிபலன் பகுதியில் ஒவ்வொரு ராசிக்கும் பலன் எழுதிவிட்டு அதன் அடியில் ''ஜனன கால ஜாதகத்தின்.....பலன்கள் அமையும்'' என்ற இரண்டரை வரிகள் பாதுகாப்பாக எழுதப்பட்டுள்ளது. இதை முதலிலேயே எழுதிவிடலாம். ''இந்த ராசிபலன் பகுதியில் எழுதப்பட்ட பலன்கள் சரியானது என்பதை உறுதியாக கூற இயலாது. ஜனன கால ஜாதகத்தின்... பலன்கள் அமையும். (எனவே கதை....)

இம்மாத தென்றலில் ''ஆசிரியர் பக்கம் முதல் அடிபக்க அட்டை வரை'' ஓரிரு நெருடல்களை தவிர சூப்பர் என்ற ஒரே வரியில் எழுதிவிடலாம் என்றாலும் சி.சு. செல்லப்பாவின் 'மூடி இருந்தது. கதவை - மன்னிக்கவும் - கதையை ஒரேமூச்சில் படித்தேன். பிரமித்தேன். ஒரு கைதி விடுதலையாவதை இவ்வளவு அழகாக தெளிவாக எழுதமுடியுமா?

''கீதா பென்னட் பக்கம்'' வழக்கம் போல் 'பிரகாசம்'. கதிரவன் எழில் மன்னன் தென்றலில் 'ஒளிவிளக்கு'. கவிஞர் பொன்னடியன் திறந்த மனதுடன் அளித்த பேட்டி 'பளிச்'. அப்துல்கலாம் கட்டுரையை படிப்பவர்களுக்கு உடலில் புதிய ரத்தம் பாய்ந்திருக்கும்.

''நிறைவேத்துவாயா! ராஜி?'' சிறுகதை இம்மாத தென்றலுக்கு திருஷ்டிபரிகாரம்.

கலாரசிகர்களுக்கு விருந்தாக ''நிகழ்வுகள்''

பயனுள்ள விவரங்களுடன் ''வழிபாடு'' என்று விமர்சனம் செய்தாலும் ஊறுகாய் இல்லாமல் மோர்சாதம் சாப்பிட்டதை போல் ஒரு ''சப்'' அரசியல் இல்லாத தென்றல்.

'தமிழக அரசியல் களம்' பக்கம் 60 என்று பொருளடக்கத்தில் உள்ளது. ஆனால் உள்ளோ? இவ்வளவு பெரிய தவறு எப்படி நடந்தது?

62ம் பக்கம் முக்கியமான நாட்கள் மிகவும் சிறியது என்றாலும் பயனுள்ளது. பாராட்டத்தக்கது.

இந்நாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள். அவற்றின் சிறப்புகள் இவற்றை பற்றி எழுதினால் புதிதாக இந்நாடு வந்துள்ள மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இந்திய பிரஜையாகிய எனக்கு இந்நாடு அளித்த அனுமதி நாட்கள் முடிவடையும் நாட்கள் நெருங்கி வருகிறது. ஜூன் மாத இரண்டாம் வாரம் தாய்நாடு திரும்புகிறேன். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் ''மாயாபஜார்'' பகுதிக்கு சமையல் குறிப்புக்கள் தயாரித்து வருகிறேன். சென்னையிலிருந்தும் குறிப்புகள் அனுப்புகிறேன். (சாந்தாதாரர் ஆகிவிடுகிறேன்).

இந்திரா காசிநாதன்
******


படைப்பு - இனிப்பு

இந்த புத்தாண்டு நல்லவிதமாக அமைய வேண்டும் என்று அனைவரும் ஆண்டவனை பிரார்த்திக்கும் நேரம். இனிப்பு, காரத்துடன் எல்லாவகைச் சுவையுடன் சேர்ந்த உணவு வகைகளை ஆண்டவனுக்குப் படைப்பது வழக்கம். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, காரம், உப்பு இப்படி அனைத்தும் சேர்ந்த ஒரு சமையல் கலவை. மெல்லிய புளிக்கரைசல், மாங்காய், உப்பு, கொஞ்சம் வெல்லம், வேப்பம்பூ, கொஞ்சம் மிளகாய் தூள், கசப்பு சுவைத் தெரியாமல் இருக்க பொடியாக அரிந்த வெள்ளரி சேர்த்த உணவு வகையை ஆண்டவனுக்குப் படைத்து, குளித்து ஆண்டவனை வணங்கி கொஞ்சம் சாப்பிடுவது ஐதீகம். அதை உணர்த்தும் விதமாக சமையல் குறிப்பை அமைத்த விதம் அருமை. செய்யும் செயல் காலம் கருதி செய்வதே ஞானம் நல்லவிதமாக அமைந்த சமையல் சிறப்பு, இதழுக்கு பெருமை சேர்ப்பதாய் அமைந்தது அருமை.

அதிரை. முகமது தஸ்தகீர்
******


நான் சிறிது காலம் முன்பு தான் லாஸ் ஏஞ்சல்ஸ் குடி பெயர்ந்தேன். அருமையான இந்த மாத இதழ் தொடர்ந்திட வாழ்த்துகிறேன்.

சித்ரா முரளி, C.A
******


தங்களுடைய தென்றல் பத்திரிக்கையைத் தற்செயலாக நான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாட்டை விட்டு வெகு தொலைவில் இருந்தாலும், தென்றலைப் படிக்கும் போது நான் தாய்நாட்டில் இருப்பதைப் போல் உணர்ந்தேன்.

சுபத்ரா பெருமாள், சாண்டா கிளாரா
******

© TamilOnline.com