ஸாண்ட்டா கிளாரா - மேடையேற்றி மகிழ்ந்த குரு
“வீணையின் தத்துவத்தை அறிந்தவர்களும், ஸ்ருதி, தாளம் இவற்றை நன்கு பயின்றவர்களும் எளிதில் பேரின்ப வீட்டை அடைவார்கள்” என்று யக்ஞ வல்க்ய ஸ்ம்ருதி கூறுகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த இசைக்கலையை பல்லாண்டுகளாகப் போற்றி வளர்த்து வருகிறார், 'சங்கீத வித்வான்' பட்டம் பெற்ற திருமதி லலிதா வெங்கடராமன் அவர்கள்.

1966-இல் மைசூர் பல்கலைக் கழகத்தில் இசை விரிவுரையாளராக சேர்ந்த இவர், பின்னர் 1992 வரை வீணை பேராசிரியராகப் பணி புரிந்தார். சுமார் பத்து ஆண்டுகளாக விரிகுடாப் பகுதியில் வீணையும் பாட்டும் கற்றுக் கொடுத்து வருகிறார்.

1993 முதல் 'ஸ்ரீக்ருபா டான்ஸ் ·பௌண் டேஷன்' மூலம் ஸான் ஹோஸேயில் இசை கற்றுக் கொடுக்கத் துவங்கினார். 2000-ஆம் ஆண்டு ஸான் ஹோஸேயில் ராக வாணி இசைப் பள்ளியை அமைத்து வாய்ப்பாட்டு மற்றும் வீணை கற்றுத்தருவதோடு, பற்பல இசை நிகழ்ச்சிகளையும் சிறப்புடன் இயக்கி வருகிறார். ஆரம்ப (ஜூனியர் லெவல்) மற்றும் உயர் நிலைகளில் (அட்வான்ஸ்டு லெவல்) சுமார் 60 மாணவ மாணவியர் இவரது நேரடி மற்றும் தனி கவனிப்பின் கீழ் (டிரக்ட், ஒன் ஆன் ஒன் பேஸிஸ்) பாட்டு மற்றும் வீணை இசை பயின்று வருகின்றனர்.

சமீபத்தில், 4/21/2002 அன்று பாலோ ஆல்ட்டோ கலை மையத்தில் இவருடைய மாணவியரின் வீணை மற்றும் பாட்டுக் கச்சேரி நடைப்பெற்றது. இந் நிகழ்ச்சிக்கு விரிகுடாப் பகுதி மக்களுக்கு முன்னமே நன்கு பரிச்சயமான திரு. நடராஜனும், திரு. ராஜீவும் பக்கவாத்தியத்துணை அளித்தனர்.

மிருதங்கத்தில் திரு. நடராஜன் ஸ்ரீநிவாசனும், கடத்தில் திரு. ராஜீவ் சுப்பராவும் அருமையாக ஆதரவு தர, திருமதி. தீபா சுப்ரமணியன், மற்றும் செல்வி. அஸ்வினி நெப்பல்லி வீணை வாசித்து செவிக்கு இனிய விருந்தளித்தனர். முதன் முறையாக மேடையில் வாசிப்பினும், திருமதி. தீபா இசை ஆதரவாளர்கள் நிறைந்த அந்த சபையில் மிகத் துணிவாக வாசித்தார். உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் செல்வி. அஸ்வினி யும் திறமையாக வாசித்தார்.

வீணை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, திருமதி. பிரமிளா ஸ்ரீநிவாசனின் பாட்டிற்கு, திரு. ரூபேஷ் கர்த்தா வயலின் வாசித்தார். திரு. நடராஜன் ஸ்ரீநிவாசன் மிருதங்கத்திலும், திரு. ராஜீவ் சுப்பராவ் கடத்திலும் பக்கபலம் தந்தனர்.

ஏழு வயதிலேயே தனது பாட்டியாரிடம் சங்கீதம் பயில ஆரம்பித்துவிட்ட திருமதி. பிரமிளா அவர்கள் தன் இசைப் பயிற்சியை திருமதி. லலிதா வெங்கடராமனிடம் தொடர்ந்து கற்றுவருகிறார். ஷண்முகப்ரியா, பைரவி, பூர்விகல்யாணி போன்ற கன ராகங்களை மிக நேர்த்தியாக கையாண்டார்.

ராகம், தானம், பல்லவி பகுதியில், பூர்வி கல்யாணியில் அமைந்த 'ஸ்ரீ ராமா, ஜய ராமா' என்னும் பல்லவியை கண்ட்ட திருபுடைத் தாளத்தில் விரிவாக வழங்கினார். ராகமும் தானமும் பாடி, சிறப்பாக நிரவல் மற்றும் திஸ்ரத்துடன், மூன்று காலமும் பாடியதோடு, பெஹாக், கானடா போன்ற இனிய ராகங்களில் ஸ்வரமும் பாடினார். திரு. ரூபேஷ் சளைக்காமல், நன்றாக வயலினில் ஈடு கொடுத்தார். தனி ஆவர்த்தனத்தில் லய வித்வான்கள் தங்கள் தாள நிபுணத்தை புலப்படுத்தி சபையோரின் பாராட்டை கைத்தட்டல் மூலம் பெற்றனர். அதற்குப் பின்னர், தில்லானா, மற்றும் மங்களம் பாடி, வெறும் அரங்கேற்றம் என்றில்லாமல், முழு கச்சேரி கேட்கும் நிறைவை அளித்தார்.

இது போன்ற அரங்கேற்றங்கள் இசைப் பயிற்சியின் முடிவென்றிருந்திட வேண்டாம். இவையே உங்கள் இசைப் பயணத்தின் இனிய தொடக்கமாக இருக்கட்டும் என்று தன் மாணவ மாணவியருக்கு உணர்த்துகின்றார், திருமதி வெங்கடராமன்.

ஸ்ரீவித்யா நாராயணன், ஸாண்ட்டா கிளாரா

© TamilOnline.com