இடைத்தேர்தலும் சட்ட மசோதாக்களும்
தமிழகம் சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட மூன்று தொகுதி களுக்கான இடைத்தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் இருந்த கட்சிகளின் கூட்டணி தற்போது இல்லை. கூட்டணி அரசியல் என்பது அந்தக் கண நேர அரசியலுக்கு உரியது என்பதாகவே அரசியல் கட்சிகள் புரிந்து கொண்டுள்ளனர்.

சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என ஐந்து முக்கியக் கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆனாலும் போட்டி அதிமுக - திமுக இரண்டுக்கும் இடையில்தான் இருக்கும். இதுபோல் வாணியம்பாடியிலும் திமுக - அதிமுக இரண்டுக்கும் இடையில்தான் போட்டி. இங்கு பாஜக நடுநிலைமை வகிக் கிறது. மறைமுகமாக அதிமுகவுக்கு ஆதர வாகவே பாஜக உள்ளது. இந்துமுன்னணி சிவசேனா உள்ளிட்ட இந்துவாதக்கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அச்சிறுப்பாக்கம் தொகுதியில் பாமகவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் பாஜக மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்தியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தமிழகத்தில் ஒவ்வொருவிதமான அரசியல் நிலைப்பாட்டில் உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி சிதறலுக்குள்ளாகி குழப்பமான நிலையில் உள்ளது.

அதிமுக கூட்டணியில் முன்னர் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவைகூட தனித் தனியாகத்தான் செயல்படுகின்றன. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்கும் காங்கிரஸின் திட்டம் இன்னும் சாத்தியமாகவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி, தங்களிடமிருந்து பிரிந்து தனிக்கட்சிகளாக உருவெடுத்த கட்சிகளை மீண்டும் தம்முடன் இணைக்க கடும்முயற்சி மேற்கொண்டு வருகின் றனர். வாழப்பாடி தலைமையில் இயங்கிய கட்சி, குமரிஆனந்தன் தலைமையில் இயங்கிய கட்சிகள்யாவும் காங்கிரசுடன் இணைந்து விட்டன.

காங்கிரசுடன் த.மா.கா. வும் இணைவது உறுதியாகிவிட்டது. ப. சிதம்பரம் தலைமை யிலான ஜனநாயகப் பேரவை மட்டும் இணையும் என்ற எதிர்பார்ப்புக்கு இன்றுவரை சாதகமான சமிக்ஞைகள் எதுவும் வெளிவரவில்லை.

அதிமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டது. இதற்குள் தமிழகம் கண்ட 'காட்சிகள்' 'நெருக்கடிகள்' தமிழகம் இதுவரை காணாதவை. அதிமுக - திமுக இடையிலான பழிவாங்கும் அரசியலில் உச்சபட்ச வெளிப் பாடுகள் அரங்கேறிவிட்டன. இன்னொருபுறம் தொழிலாள விவசாயிகளின் போராட்டங்கள், அரசு ஊழியர்களின் போராட்டங்கள் என விரிவு பெற்றன. இனி போராட்டம் நடத்தும் உரிமை யைக் கூட பறிக்கும் சட்டமசோதாவை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

அரசு பல்வேறு சட்ட மசோதாக்களை கொண்டுவருவதும் பின்னர் அவற்றை கிடப்பில் போடுவதையும் ஒரு நடைமுறையாக கொண் டுள்ளது. குறிப்பாக 'பான் பராக்' 'குட்கா' போன்ற பாக்குத்தூள் விற்பனைக்கு தடை, பொது இடங்களில் புகைபிடிப்பதற்கு தடை, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை, அங்கீகாரம் பெறாத 'மினரல் வாட்டர்'க்கு தடை போன்ற வற்றை குறிப்பிடலாம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப் பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் குற்றம் சாட்டிவருகின்றன. கடந்த இருமாதங்களில் நகரங்களில் தொடர்ந்து கொலை, கொள்ளை அதிகரித்துக் கொண்டே யுள்ளன. வீடுகளில் மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காவல் துறையும், அரசும் கொள்ளையர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக் கிறார்கள்.

இந்திய அளவில் குஜராத் விவகாரம் இந்து முஸ்லிம் உறவுகளிடையே ஏற்பட்டு வரும் விரிசலின் ஆழத்தை வெளிப்படுத்தியுள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப் பின்மையும் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவு தமிழகத்திலும் வெளிப் பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும் அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒன்று உருவாகியுள்ளது. இதில் 14 பெரிய சிறிய முஸ்லிம் கட்சிகளும் இயக்கங்களும் ஒன்றி ணைந்திருக்கின்றன. முஸ்லிம்கள் தாக்கப் படுகிறார்கள். அதனால் முஸ்லிம்கள் ஒன்றிணை கிறார்கள் என்ற போக்கு நிதர்சனமாகி உள்ளது.

ஆக அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தேவை நிமிர்த்தம் தமக்குள் அணி சேருவதும், பிறகு பிரிவதும், பிறகு சேருவதும் என்ற விதியை, வெட்கமின்றி பின்பற்றக் கூடியவர்களாக உள்ளனர். மக்கள் பிரச்சனைகள், மக்கள் நலன்கள் சார்ந்து கட்சிகள் அணி சேர்வதும் பிரிவதும் என்ற தர்க்க விதி, கூட்டணித் தத்துவம் தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகளை இன்னும் பீடிக்கவில்லை.

துரைமடன்

© TamilOnline.com