கீதாபென்னெட் பக்கம்
சுமார் பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால் லாஸ் ஏஞ்சல்ஸ¥க்கு வந்த புதிதில் செளத் இந்தியன் ம்யூசிக் அகாடமியில் முதன் முதலாக என் வீணைக் கச்சேரியை ஏற்பாடு செய்திருந்தார் அன்றைய பிரசிடென்ட் திரு. நாராயணன். அந்த கச்சேரிக்குத் தலைமை தாங்கி என்னை வாழ்த்தி பேசினார் ஒரு பிரபல கர்நாடக சங்கீத கலைஞர். சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே என்னை நிறைய பார்த்தவர். என் அப்பாவிடமும் அவரது மக்களிடமும் அளவில்லாத அன்பு கொண்ட அவரது எதிரே உட்கார்ந்து வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது என் பாக்கியம். அத்தோடு அவரது ஆசிர்வாதம் கிடைத்த பிறகே என்னுடைய இசையும் ஓரளவு வெளியுலகத்திற்குத் தெரிய ஆரம்பித்தது.

சமீபத்தில் க்ளீவ்லான்ட் தியாகராஜ உத்சவத்தில் கலந்துக் கொண்டு பாட இருந்தவரால் உடல் நிலை காரணமாக வர இயலவில்லை. அவர் அங்கே பாட ஒத்துக் கொண்ட அதே தினத்தில் மறைந்துவிட்டார். இவர் வெஸ்லியன் பல்கலை கழகத்தில் பேராசிரியராக இருந்த போது நான்சச் (Nonsuch) என்ற கம்பெனி இவரது இசைத் தட்டை வெளியிட்டது. இந்த இசைத் தட்டு எத்தனை அமெரிக்கர்களை நம் இசைப் பக்கம் திரும்பவைத்தது என்பதற்கு அளவேயில்லை. போன டிசம்பர் இசை விழாவில் ஒட்டு மொத்தமாக அத்தனை பத்திரிகைகளும் இவரின் இசை ''மனதை உருக்கியது'' என்று எழுதியிருந்தனர்.

கர்நாடக இசை உலகம் சமீபத்தில் இழந்த மிகப் பெரும் பொக்கிஷம் திரு.கே.வி. நாராயணசுவாமி அவர்கள்.

தினந்தோறும் தினசரி பத்திரிகையை படிக்கும் போது உலக நடப்பு அதுவும் தற்போதைய நிலை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தருகிற செய்திகள்தானே அதிகம். மாறுதலுக்கு சமீபத்தில் ஒரு கட்டுரை ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.

லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் நீண்டகூந்தல் கொண்ட பெண்கள் கழுத்து வரை வெட்டி அதை கான்ஸர் சொஸைடிக்கு வழங்கினார்கள். எதற்கு? கீமோதெரபியில் முடி உதிர்ந்து போகிற குழந்தைகளுக்கு விக் பண்ண என்று தாங்களே முன் வந்திருக்கிறார்கள். அதில் ஒரு பெண்ணுக்கு முழங்கால் வரை பிளான்ட் முடி. அதை இழக்கத் தயங்கி அழ ஆரம்பிக்க மற்ற பெண்களும் மாணவர்களும் அவளை வெகுவாக உற்சாகமூட்டியதில் அவளும் கூந்தல் தானம் பண்ணினாளாம். இந்த விஷயத்தைப் பற்றி படித்த போது உருக்கமாக இருந்தது.

கல்யாணம் முடிந்த கையோடு முழங்கால் வரை நீண்டிருந்த என் கூந்தலை ஒரு ப்யூட்டி பார்லர் பெண்ணிடத்தில் இரண்டு அங்குலம் மட்டுமே வெட்ட சொன்னேன். அவேளா ஒரு அடிக்கு மேல் வெட்டி விட்டாள். அன்றைக்கு என் மனது பட்ட வருத்தம்! அதனால் தான் இந்த இளம் பெண்களின் மனிதத் தன்மையுடன் செய்த இந்த உதவி என்னைத் தொட்டது.

© TamilOnline.com