சம்பிரதாயக் கொண்டாட்டமா இது!
தொடர்ந்து பல நூறாண்டுகளாக கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்து வரும் தனித்தன்மை வாய்ந்த பாரம்பரியம் நம்முடையது. பெண்கள் முதலில் பெற்றோரை, பின்னர் கணவரை அதன்பின் பிள்ளைகளைச் சார்ந்து வாழ்ந்து பழக்கப்பட்ட நாடு. சமீப காலமாகத்தான் பெருளாதார விடுதலை [economic independence] என்ற பேரில் ஓரளவுக்காவது பெண்கள் கல்வி ஞானம் பெற்று வேலைக்குப் போய்ப் பொருளீட்டிவர ஆரம்பித்துள்ளனர். இருந்தும், ஒரு விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்வதென்றால்கூட, விண்ணப்பதாரரின் பெயரை அடுத்து காணப்படும் கேள்வி தந்தை / கணவர் / பாதுகாவலர் பெயர் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. தந்தை இல்லாத விண்ணப்பதாரர் தாயார் பெயரைப் பாதுகாவலர் என்றுதான் குறிப்பிட வேண்டும். விண்ணப்பதாரர் திருமணமாகாத பெண் என்றால் தந்தை பெயரையும், திருமணமாகியிருந்தால் கணவன் பெயரையும் குறிப்பிட வேண்டும். இதுவே ஒரு ஆண் என்றால் எப்படி இருந்தாலும் தந்தை பெயரைத்தான் குறிப்பிடுகின்றார். திருமணமாகிவிட்டதால் மனைவி பெயரைப் போடுவதில்லை. மனைவி என்பதால் மட்டும் மதிப்பு குறைவதில்லை. தாய் என்றான பின்னரும் இதே மதிப்பற்ற நிலைதான்.

தந்தையை இழந்து தாயின் ஆதரவில் வாழ்க்கையின் மேல் மட்டத்திற்குயர்ந்த பலருடைய முகவரிகள் நமக்குத் தெரியும். ஜெமினி ஸ்டூடியோ உரிமையாளரும் திரைப்பட இயக்குனரும் முன்னாள் ஆனந்த விகடன் ஆசிரியருமான திரு. எஸ்.எஸ். வாசன் அவர்களை ஒரு சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம். திரைப்பட உலகில் சிறந்த மேதையாய்த் திகழ்ந்த இவர் தாயாரால் மட்டுமே வளர்க்கப்பட்டார். இருந்தும், வள்ளுவர் குறள் சொல்வதென்ன?

மகன் தந்தைக்காற்றும் நன்றி இவன் தந்தை
என்னோற்றான் கொல்லெனுஞ் சொல்.

மகன் தன்னுடைய வெற்றிக்குக் காட்டும் நன்றிக்குத் தந்தை மட்டுந்தான் உரிமை கொண்டாடலாம். தாய்க்குப் பங்கில்லை என்று தானே பொருள்படுகிறது. இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பெண்களைப் பூமிதேவி என்ற போலிப் பாராட்டிலும் கல்விக்கடவுள் சரஸ்வதி ஒரு பெண் என்றும், நதிகள் ஆறுகள் இவற்றின் பெயர்களெல்லாம் பெண்ணின் பெயர்களல்லவா என்றெல்லாம் எடுத்துக்காட்டி அந்த மயக்கத்திலேயே பெண்ணினத்தை வைத்திருக்கப் போகிறார்கள்?

பெண்களின் மனவலிமை, ஆற்றல், உழைப்பு, விடாமுயற்சி, இலட்சியம் இவற்றை யெல்லாம் புரிந்துகொண்ட சமுதாயமாக மாறாத வரை, இந்த அன்னையர் தினக் கொண்டாட்டங்கள் மேலை நாடுகளைப் பார்த்துக் 'காப்பி'யடிக்கும் சம்பிரதாயக் கொண்டாட்டமாகத்தான் இருக்கமுடியும்.

டாக்டர். அலர்மேலு ரிஷி

© TamilOnline.com