ரசித்து ருசிக்க ரசவகைகள்
கவனிக்க வேண்டியவை: ஈயச் சொம்பில் ரசம் வைப்பது சிறந்தது. நீரில்லாத ஈயச் சொம்பை எரியும் அடுப்பில் வைக்கக்கூடாது.

பருப்பு ரசம்

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - கைபிடி அளவு
புளி - சிறு எலுமிச்சம்பழ அளவு
தக்காளி - பெரிதானால் 1 சிறியதானால் 2
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1 ஸ்பூன் (தாளிக்க)
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சை கொத்தமல்லி - வாசனைக்கு
தேங்காய் பால் - (ருசிக்கு) 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

துவரம் பருப்பை 1 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் வேகவைத்து மசித்து தண்ணீரை எடுத்து வைத்து கொள்ளவும். புளியையும், தக்காளியையும் கொதிக்கும் வெந்நீரில் போட்டு கரைத்து கொள்ளவும். கரைத்தபுளி, தக்காளி நீரை ஈயச் சொம்பில் ஊற்றவும். உப்பு, சாம்பார் பொடி, பெருங்காயம் போடவும். கொதி வந்ததும் அடுப்பை சிறியதாக எரியவிட்டு ஈயச்சொம்பை தட்டை போட்டு மூடி வைக்கவும். 5 நிமிடம் கொதித்ததும் பருப்பு நீரை விட்டு, பொங்கி நுரை வரும்போது கீழே இறக்கி வைக்கவும். பச்சை கொத்தமல்லியை சிறுசிறு துண்டுகளாக்கி போடவும். கடுகு, சீரகம் தாளிக்கவும். பருப்பு நீரை விடும்போதே தேங்காய் பாலையும் விட வேண்டும்.

இந்திரா காசிநாதன், உமா நடராஜன்

© TamilOnline.com