அட்லாண்டாவில் கேட்டவை
நமது முன்னாள் ஆர்மி ஆபிஸர் சென்ற முறை பாரிலிருந்து வெளியே வர பட்ட பாட்டை படித்திருப்பீர்கள். இந்த முறை நெருங்கிய நண்பர் குடும்பத்தோடு அவரும் அவர் மனைவியும் ஒரு பிக்னிக் போனபோது நடந்த கதை இது

காரில் அவர்கள் நால்வரும் போகும் போது கூட ஒரு 12 வயது வால் பையனும் இருந்தான். அவர்கள் வீட்டில் தங்கிய இரண்டு நாட்களும் நமது முன்னாள் ஆர்மி ஆபிஸர் நன்கு குடிப்பதையும், சிகரெட் பிடிப்பதையும் பையன் பார்த்திருந்தான். வள வள என்று பேசிக்கொண்டே காரில் போய்க்கொண்டிருந்தனர். அந்த நண்பர் குடும்பம் ஆர்மி அல்ல. வேறு ஏதோ பிசினஸ் செய்பவர்கள். ஜாலியாகப் பேசும் போது நண்பரின் மனைவி எதேச்சையாக "மாமா நீங்கள் ஆர்மியில் 32 வருடம் இருந்து இருக்கிறீர்களே எத்தனை battleல் கலந்துகொண்டு கலக்கி இருக்கீற்கள்?" என்று கேட்க முன்னாள் ஆர்மி ஆபிஸர் உற்சாகமாக அவரது வீர தீர பராக்கிரமங்களைக் கூறி 2000 battleல் கலக்கி இருப்பதாகக் கூற கேட்டவளுக்குத் தலைச் சுற்றி கன்·ப்யூஸ் ஆகி "நம் நாட்டுக்கும் வேறு நாட்டுக்கும் எனக்குத் தெரிந்து மூன்றோ நான்கோ தடவை தானே சண்டை நடந்தது, எப்படி 2000 battles?" என்று கேட்க இவர் பதில் சொல்லும் முன் வால் பையன் "அம்மா அவருக்கு வயது ஆகிவிட்டது அவர் நீ கேட்ட "battle"ஐ தவறாக "bottle" என்று நினைத்துவிட்டார் அது நிச்சயம் 2000க்கு மேலேயே இருக்கும்" என்று கூற முன்னாள் ஆர்மி ஆபிஸரே விழுந்து விழுந்து சிரித்துவிட்டார்.

இயக்குனர் விசு அவர்கள் நாடகம் நடத்திக்கொண்டிருந்த நேரம் அது. மிக சீரியஸான கதைகளைப் படமாக எடுத்தும் ரியல் லை·பில் ரொம்ப ஜாலியாக எப்போதும் ஜோக் அடித்துக்கொண்டே இருப்பார். குழுவினரும் இவருக்கு சளைத்தவர்கள் அல்ல. ஒரு முறை கோயம்புத்தூரில் மூன்று நாடகங்கள் போட குழுவோடு வெள்ளிக்கிழமை இரவு இரயிலில் ஏறி அவர்கள் கம்பார்ட்மெண்டில் தத்தம் சீட்களில் அமர்ந்தனர். குழுவில் நடிக்கும் இரு நடிகைகள் எதிரும் புதிருமாக பிளாட்·பார்ம் பக்கம் உள்ள ஜன்னல் ஓர சீட்டில் தங்கச் சங்கிலி, வளையல் என்று போட்டு அமர்ந்திருந்தனர். டிக்கெட் செக் செய்ய வந்தவர் இரயில் கிளம்பும் முன்னே உள்ளே வந்துப் பார்த்து விசுவை விஷ் செய்துவிட்டு அந்த இரு நடிகைகளிடம் "நீங்கள் இருவரும் ஜன்னல் கதவை சாத்திவிடுங்கள் திருட்டு பயம் அதிகம் உள்ளது யாராவது இரயில் கிளம்பிய பிறகு பிளாட்·பாரத்தில் இருந்து உங்கள் தங்கச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ஓடிவிடுவார்கள் ஜாக்கிரதை" என்று கூறி ஜன்னலையும் சாத்திவிட்டுக் கிளம்பினார். அப்போது விசு "சார், இந்த ஜன்னலையுன் சாத்திவிடுங்கள் என்று அவரது நெருங்கிய நண்பரும் குழு மானேஜருமான ஆள் உட்கார்ந்திருந்த ஜன்னல் ஓரச் சீட்டைக் காட்டினார். அதற்கு T.T.R. "இவர் ஆண்பிள்ளைத் தானே அதுவும் தங்கச் செயின் ஒன்றும் போட்டுக்கொள்ளவில்லையே என்று கேட்க விசு "இல்லையே சார் வண்டி கிளம்பிய பின் பிளாட்·பாரத்தில் நடந்து போகும் பெண்ணின் கழுத்திலிருந்து இவர் தங்கச் செயினைப் பிடுங்கிவிட்டால்?" என்று போட்ட போடில் அந்த கம்பார்ட்மெண்டே சிரிப்பில் குலுங்கியது.

T.T.R. சிரித்துச் சிரித்து வயிற்றைப் பிடித்துக்கொண்டு அங்கேயே உட்கார்ந்துவிட்டார்.

(இது எப்படி அட்லாண்டாவில் கேட்டது ஆகும் என்று கேட்பவர்களுக்கு விசு அவர்கள் மூன்று முறை அட்லாண்டா வந்து என்னுடன் தங்கியிருக்கிறார். அப்போது ஒரு முறை அவர் சொல்லி நான் கேட்டது. ஆகையால் இது அட்லாண்டாவில் கேட்டது தான்.)

ஓ.கே. மறுபடியும் நமது முன்னாள் ஆர்மி ஆபிஸர் விஷயம் தான். அவர் ஒரு முறை டெல்லி சென்றிருந்தபோது ஒரு 300 வீடுகள் இருக்கும் காலனியில் அவரது நண்பர் வீட்டில் தங்கி இருந்தார் ஒரு வாரத்திற்கு. அப்போது நண்பர் வீட்டுக்கு வரும் எல்லோரையும் சந்தித்துப் பேசிக் கொண்டு இருப்பார். அதுவும் இளம் பெண்கள் என்றால் ஒரே குஷிதான். அவர்களும் வயசான கிழடுதானே என்று இவர் பேசிப் பேசி கழுத்தருப்பதைப் பொறுத்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் ரொம்ப நெருங்கிய நண்பரின் பெண் கீதாவை நம்மவர் சந்தித்துப் பேசி மிகவும் ·பிரெண்ட் ஆகிவிட்டார். ஆனால் வயது காரணமாக எல்லார் பெயரையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் ஏதாவது ஒரு பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு பேச ஆரம்பித்துவிடுவார். இவர் ஒரு முறை வாக்கிங் போகும் போது கீதா எதிரில் கையில் ஒரு புஸ்தகத்துடன் வர இவர் குஷியாகச் சிரித்து ஆனால் வயதான காரணத்தால் பெயர் மட்டும் சட்டென்று நினைவில் வராமல் "காமி..நீ..." என்று சந்தேகமாக இழுக்க அந்தப் பெண் கீதா பொய் கோபத்துடன் "காமிக்கமாட்டேன்" என்று கூறி சிரித்தபடியே சென்றுவிட்டாளாம்.

நன்றி

அட்லாண்டா கணேஷ்

© TamilOnline.com