சுபல் தேசாயின் பரத நாட்டிய அரங்கேற்றம்
Orlandoவில் ஆகஸ்ட் 11, 2002 அன்று சுபல் தேசாயின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இது தான் அவரது முதல் முழுமையான தனி பரத நாட்டிய நிகழ்ச்சி. இந்த முதல் நிகழ்ச்சி தான் அரங்கேற்றம் என்று வழங்கப்படுகிறது. Lake Brantly High Schoolலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று கூட்டம் நிரம்பி வழிந்தது. வந்தவர் அனைவரும் சுபலின் திறமை கண்டு வியந்து போய்விட்டார்கள்.

கேட்கி மற்றும் ஜனக் தேசாய் தம்பதியினரின் மகளான சுபல், NIDA (Nritya India Dance Academy)யின் மாணவி. ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பரத நாட்டிய கலா மந்திரின் முன்னாள் மாணவியும் ஆசிரியருமான குரு கீதா ராஜ் கார்கேராவிடம் பயின்றார். சுபல் தனது படிப்பிலும் கெட்டிக்காரி தான். சமீபத்தில் 14வது வயதில் அடியெடுத்து வைத்த சுபல், தனது பரத நாட்டிய ஆசையை கீதா ராஜிடம் வளர்த்துக்கொண்டார். பல இந்திய அசோசி யேஷன்கள் நடத்திய விழாக்களில் பங்கு கொண்டு பரிசுகள் பல வென்றிருக்கிறார் சுபல். 1998ல் டிஸ்னியின் அனிமல் கிங்டமில் நாட்டிய நிகழ்ச்சியை வழங்கியிருக்கிறார். Epcotன் மில்லேனியம் நிகழ்ச்சி, நாசா போன்றவற்றில் இவர் நிகழ்ச்சிகள் வழங்கியிருப்பது குறிப்படித்தக்கது.

தீபாஞ்சலி மற்றும் கணேச வந்தனத்துடன் நிகழ்ச்சியைத் துவங்கினார் சுபல். இதனைத் தொடர்ந்து அலரிப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து சாவேரி ராகம் ரூபக தாளத்தில் ஜதீஸ்வரம். சங்கராபரணம் ராகம் ஆதி தாளத்தில் அமைந்த சகியே இந்த வேளையில் ஜாலம் என்ற பாரம்பரிய வர்ணம் அருமையாக அமைந்தது. ராகமாலிகையில் "ஹரி தும ஹரோ" என்ற மீரா பஜன் தான் அரங்கேற்றத்தின் சிறப்பு அம்சமாகத் திகழ்ந்தது. இந்தக் கலைஞருக்குள் ஒளிந்திருந்த உணர்ச்சிகள் அனைத்தும் இதன் மூலம் வெளிப்பட்டது. திரெளபதியின் வஸ்த்ரஹரணா, நரசிம்ம அவதாரம் மற்றும் கஜேந்திர மோட்சம் ஆகியவற்றை எந்த ஒரு ஒத்திகையும் இல்லாமல் திறம்பட வழங்கினார். ஏனேனில் இதற்காக நிகழ்ச்சி அன்று காலையில் ஒத்திகை பார்க்க நேரம் இல்லையாம். இதன் காரணமாக ஒத்திகை எதுவும் இன்றி நேரடியாகவே மேடையில் ஆடி தனக்கு இசை ஞானமும் தாளத்தை சரியாக அறிந்துகொள்ளும் ஆற்றலும் இருக்கிறது என்பதை நிரூபித்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியினை அனாயசமாக அளித்தார் சுபல்.

பல்வேறு கடவுள்களைப் பற்றி வெவ்வேறு ராகம் தாளங்களில் நிகழ்ச்சி அமைந்திருந்தது. ஒவ்வொரு பாடலிலும் வேகம் படிப்படியாக அதிகரித்து இறுதியில் தனக்கு உடல் வலிமையும் மன உறுதியும் இருக்கிறது என்பதை அற்புதமாக வலியுருத்தினார் சுபல். அத்திப் பூத்தது போல லைவ் ஆர்கெஸ்ட்ரா, அரங்கேற்றத்திற்கு மேலும் மெருகூட்டியது. ஜெயா ராதாகிருஷ்ணன் வாய்ப்பாட்டில் தமது குரல் வளத்தால் அனைவரையும் கவர்ந்தார். ப்ரீதி சுந்தரேசனும் கோமதி சுந்தரமும் வீணை / புல்லாங்குழல் மற்றும் வயலினில் நிகழ்ச்சிக்கு பக்கபலம் சேர்த்தனர். வேணுபுரி ஸ்ரீனிவாஸின் மிருதங்கம் ஆட்டத்தின் வேகத்தை உணர்த்தியது. கீதா ராஜின் நட்டுவாங்கம் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. NIDAவின் மற்றொரு மாணவியான Dr. சப்ரீனா மதுபாஷி மற்றும் திரு. வித்யுத் தேசாயின் விளக்கங்கள் அற்புதமாகவும் கச்சிதமாகவும் அமைந்திருந்தது.

காசல்பெரியின் மேயர் ப்ரூஸ் ப்ரோனோவோஸ்ட் மற்றும் Osceola County கமிஷனர் பால் ஓவன், ஆகஸ்ட் 11, 2002ஐ 'சுபல் தேசாய் தினம்' மற்றும் 'நிருத்யா இந்தியா டான்ஸ் அகாதெமி தினம்" என்று அறிவித்தனர்.

சுபல், அவரது குரு திருமதி. கீதா ராஜ் மற்றும் அவரது பெற்றோர்கள் கேட்கி, ஜனக் தேசாய் ஆகியோருக்கு இது ஒரு மறக்கமுடியாத நாள்.

© TamilOnline.com