கீதாபென்னெட் பக்கம்
கடந்த சில வருடங்களில் நம்முடைய வாழ்க்கை முறை வெகுவாக மாறியிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. மின்அஞ்சல், இன்டெர்நெட் என்று உலகம் சுருங்கி விட்டது. இந்த சமயத்தில் வீணை கலைஞர்கள் நாங்கள் மட்டும் மாறாமல் இருக்க முடியுமா?

சுமார் எட்டு வருடங்களுக்கு முன் வரை வீணைக் கச்சேரிகளுக்கு செல்ல வேண்டுமானால் என் கணவர் தன் கையாலேயே செய்த ஒரு ·பைபர் கிளாஸ் பெட்டியை எடுத்துப் போவேன். பெட்டி லேசாக தான் இருக்கும். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விமான பயணத்தின் போதும் அந்த பெட்டியை பார்த்த உடனே 'ஓவர் சைஸ்' என்று நிறைய டாலர்களை வசூலித்து விடுவார்கள்.

அதுமட்டுமல்ல, பயணிகளில் பலர் அந்த பெட்டி யைப் பார்த்துவிட்டு முகத்தில் மெகா சோகத்துடன் "ஐயோ பாவம்! பெட்டிக்குள் யாருடைய உடம்பு இருக்கிறது?'' என்று ''உச்சு'' கொட்டி துக்கம் விசாரிப்பார்கள். அந்த பெட்டியை நான் அலாக்காக தூக்கினால் வரிசையில் நிற்கும் அனைவரும் "யூ ஆர் எ சூப்பர் உமன்" என்று கத்திக் கொண்டே கைத்தட்டு வார்கள்.

இதெல்லாம் இன்று வேண்டியதில்லை. சென்னை யில் இருக்கும் சில வீணை கலைஞர்கள முக்கியமாக திருமதி ராஜேஸ்வரி பத்மநாபன் அவர்கள் வெகு வாக பாடுபட்டு தனித் தனியாக பிரிக்க கூடிய வீணையை டிஸைன் செய்திருக்கிறார்கள். இந்த வீணையின் குடம் பாதியாக பிரிந்துவிடும். சுரைக் காய், மற்றும் யாளியையும் பிரித்து அந்த பகுதிகளை மட்டும் கையில் ஒரு பையில் வைத்துக் கொண்டு விடலாம்.

அந்த மாதிரி ஒன்றைத்தான் நானும் இப்போது வெளிநாடுகளுக்குக்கூட எடுத்துப் போகிறேன். வீணையின் விலையைவிட அதிகம் கொடுத்து லாஸ் ஏஞ்ஜலஸில் உள்ள ஒரு கடையில் என்னுடைய சொந்த வீணைக்கென்றே பிரத்தியேகமாக பெட்டியொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளே வெல்வெட் மெத்தையில் சுகமாக பயணம் செய்து எனக்கு கச்சேரிகளில் கை கொடுக்கிறது என்னுடைய அருமை வீணை! இனி போகிற ஊர்களில் வீணை கடன் கேட்க வேண்டியதில்லை. விமானப் பயணங்களின் போது வீணைக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்றும் கவலைப்பட வேண்டிய தில்லை.

திரிலோக் குர்த்து என்பவருடைய குழுவோடு யூரோப்பில் ப்யூஷன் வாசிக்க போன சமயத்தில் ராட்சஸ உருவம் கொண்ட பேஸ்வாத்தியத்தை விமானத்தில் எடுத்து வந்த கலைஞரைப் பார்க்க மனசு வருந்தியது. அவர் கொண்டு வந்தது மிக விலை உயர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வயதான வாத்தியம். பாவம்! அது விமானப் பயணம் முடிந்து அவர் கைக்கு வந்த போது பாதியாக உடைந்து போயிருந்ததைப் பார்த்து அவர் கண்ணில் ரத்தமே வந்துவிட்டது.

வீணையைப் போலவே பேஸ், செல்லோ போன்ற வாத்தியங்களையும் பிரித்து எடுத்துப் போகும்படி யாராவது செய்ய தொடங்கினால் நிறைய கலைஞர் கள் வாழ்த்துவார்கள்.

© TamilOnline.com