கடலைப் பருப்பு போளி
தேவையான பொருட்கள்

கடலைப் பருப்பு - 1 டம்ளர்
தேங்காய்த் துருவல் - 1 கப்
வெல்லம் - 1/2 கிலோ
மைதாமாவு - 300 கிராம்
ஏலக்காய் - 4
கேசரி பவுடர்,
பச்சை கற்பூரம், நெய் - தேவையான அளவு

செய்முறை

கடலைப் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து வேகவிடவேண்டும்.

வெந்தவுடன் தேங்காய், வெல்லம் சேர்த்து மிக்சியில் அரைத்து ஏலக்காய், பச்சைக்கற்பூரம் போட்டுப் பூரணம் செய்து கொள்ளவும்.

மைதா மாவை சிட்டிகை உப்பு, கேசரி பவுடர் போட்டு 1/2 கரண்டி எண்ணெய்யும், தண்ணீர் விட்டுத் தளரப் பிசைந்து ஊற வைக்கவும்.

ஊறிய மைதா மாவில் ஒரு எலுமிச்சையளவு எடுத்து பிளாஸ்டிக் கவர் அல்லது இலையில் எண்ணெய் தடவிக் கொண்டு உள்ளங்கையளவு தட்டி, நடுவில் கடலைப் பருப்பு பூரணம் வைத்து எண்ணெய் அல்லது நெய் தொட்டுக் கொண்டு மெல்லியதாய்ப் பூரணம் வெளியில் வராமல் சப்பாத்தி போல் தட்டி கொள்ளவும்.

அடுப்பை சிறியதாக எரிய விட்டு அதன் மேல் தோசைக் கல்லை போடவும்.

கல் நன்றாக காய்ந்தவுடன் சப்பாத்தி போல் தட்டி வைத்திருந்ததை அதில் போட்டு சுற்றி சிறிது நெய் விட்டு இருபுறமும் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

இந்தப் போளியில் பால், நெய் அவரவர் ருசிக்கேற்ப போட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

கடலைப் பருப்பை வேக விடாமல் ஊற வைத்து அரைத்து வெல்லம் போட்டுக் கிளறியும் பூரணம் செய்து போளி செய்யலாம்.

இலையில் தட்டாமல் மேல் மாவை கெட்டியாகப் பிசைந்து அப்பளக் குழவியால் இட்டும் செய்யலாம்.

தங்கம் ராமசுவாமி

© TamilOnline.com