எது நன்னெறி
மூன்றரை வயது நிரம்பிய என் மகளுக்கு மம்மு (உணவு) ஊட்ட, அவளும், என் அம்மாவும் ஒரு தீர்மானம் செய்து கொண்டனர். அதாவது, ஒரு நாள் பாட்டி கதை சொல்ல பேத்தி கேட்பாள், மறு நாள் பேத்தி கதை சொல்ல பாட்டி கேட்க வேண்டும் என்பது தான் அது.

அன்று பாட்டி கதை சொல்ல வேண்டிய முறை. பாட்டி வடை செய்தது தொடங்கி, காக்கா பாட்டியை ஏமாற்றியது மற்றும் நரி காக்காவை ஏமாற்றி வடையை பறித்து சென்றது வரை சொல்லி முடித்து, ஒரு நல்ல கருத்தை சொன்ன திருப்தியடைந்தாள் என் அம்மா.

சரி, மறு நாளோ பேத்தி கதை சொல்ல வேண்டிய முறையல்லவா? அவள் தொடங்கினாள் "ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துதாம், அந்த காக்காக்கு ரொம்ப பசிச்சுதாம், அது அந்த ஊர்ல வடை தட்டற பாட்டிகிட்ட போய், பாட்டி எனக்கு ஒரு வடை குடு, ரொம்ப பசிக்கறதுன்னு கேட்டுதாம். அந்த பாட்டியும் காக்காக்கு ஒரு வடை குடுத்தாளாம். அந்த வடைய காக்கா சாப்டுண்டு இருந்தப்போ, அங்க வந்த நரி, காக்கா எனக்கும் பசிக்கறது, கொஞ்சம் வடை குடுன்னு கேட்டுதாம். உடனே, அந்த காக்கா நரியை பாட்டி கிட்ட கூட்டிண்டு போய், பாட்டி இந்த நரிக்கும் பசிக்கறதாம், அதுக்கும் ஒரு வடை குடுன்னு கேட்டுதாம். பாட்டி, நரிக்கும் ஒரு வடை குடுத்தாளாம். அப்பறம் ரெண்டுமா சமர்த்தா சாப்டுட்டு போய்டுத்தாம் என்று சொல்லி கதையை அவள் முடிக்க, ஓ, இதைத் தான் 'Peaceful Co-existence' என்று சொல்கிறார்களோ என்று எண்ணி திகைத்து கொண்டு இருந்தோம்.

ஜெயகாந்த் ராமமூர்த்தி

© TamilOnline.com