யோகிசுவரா தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள்
தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் தமிழகம் தந்த தவப்புதல்வர், உலகப் புகழ்பெற்ற யோக ஆசிரியர், சமரச சன்மார்க்க போதகர். பக்தி யோகம், ராஜயோகம், கருமயோகம், ஞானயோகம் ஆகிய யோகங்கள் சேர்ந்த ஒருங்கிணைந்த யோகத்தை அமைத்தவர். அது இன்று உலகமெங்கும் பயிலப்பட்டு வருகிறது. இக்காலத்திற்க ஏற்ற நடைமுறை ஞானமும் ஆழ்ந்த ஆன்மிக உணர்வும் ஒருங்கே அமையப் பெற்றவர். தம் வாழ்க்கையை மனித சமுதாய சேவைக்கு அர்ப்பணித்தவர். அக அமைதிக்கு வழி காட்டியவர். சகஜ சமாதியை அடைந்தவர். எப்பொழுதும் பரம உணர்வு நிலையில் இருந்தவர்.

சுவாமிகள் கோவை மாநகருக்கு அருகிலுள்ள செட்டிபாளையம் என்ற ஊரில் பக்தி நிறைந்த குடும்பத்தில் 1914ல் பிறந்தார். வேளாண்மைக் கல்வியையும் தொழில்நுட்பக் கல்வியையும் கற்றுப் பலவகைத் தொழில்களை நடத்தும் அனுபவங்களைப் பெற்றார். ஆனால் ஆன்மிக நாட்டத்தால் தூண்டப் பெற்று வாலிப வயதிலேயே துறவறத்தை மேற்கொண்டார். பார்வதி தேவியின் தரிசனம் வாய்க்கப் பெற்றவர். பல சாதுக்களிடமும் ராமகிருஷ்ண தபோவனத் தலைவர் சுவாமி சித்பாவனந்தரிடம் திருவண்ணாமலை ரமண மகரிசியிடமும் புதுவை அரவிந்த ஆசிரம சுவாமி அரவிந்தரிடமும் ஆன்மிகப் பயிற்சியைப் பெற்றவர். இறுதியில் இமயமலையைச் சேர்ந்த ரிஷிகேசத்தில் சுவாமி சிவானந்த அடிகளின் சீடராகி ஞான, ராஜயோகப் புலவை பெற்றார். வசிஷ்டகுகையில் அத்வைத அனுபவத்தைப் பெற்றார். அதன்பின் அவருக்கு இவ்வனுபவம் அடிக்கடி ஏற்பட்டது.

பின்னர் சுவாமி சிவானந்த அவர்கள் சுவாமி சச்சிதானந்தாவை 1953ல் ஸ்ரீலங்காவிற்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர் தெய்வ வாழ்க்கைச் சுங்கக் கிளைகளையும் கண்டியில் சச்சிதானந்த தபோவன ஆசிரமத்தையும் நிறுவினார். பக்தர்கள் இவரை ''குருதேவர்'' என்று வழங்கலாயினர். குருதேவர் சர்வசமய வழிபாட்டைத் தொடங்கி பல்வேறு சமயத்தவர்களிடையே ஒற்றுமையை வளர்த்தார். தீய பழக்க வழக்கங்களில் ஈடுபட்டிருந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை ஆன்மிகத்திலும் தெய்வ வாழ்விலும் நாட்டமுடையவர்களாக மாற்றினார். நாடெங்கும் சென்று உரை நிகழ்த்தி ஆன்மிகத்தைப் பரப்பினார். நாத்திகப் போக்குள்ள இளைஞர்களை ஆன்மிகராக மாற்றினார். சிறையிலும் ஆன்மிக சேவையை வழங்கினார். இலங்கையில் குருதேவர் செய்து வந்த சேவை மகத்தானது. மேல்நாட்டவர்களும் சச்சிதானந்த ஆசிரமத்திற்கு வந்து சென்றனர். 1965 ல் ஆசிரமத்திற்கு வந்த கான்ராடு என்ற அமெரிக்கத் திரைப்படப்பிடிப்பாளர் குருதேவரின் பக்தராக மாறி இவரை மேல்நாட்டிற்கு வந்து செல்லுமாறு அழைத்தார். குருதேவர் கான்ராடின் அழைப்பை ஏற்று 1966ல் ஐரோப்பாவிற்குச் சென்றார். போப்பாண் டவரைச் சந்தித்தார். கான்ராடுடன் பாரிஸ் நகரத்தில் தங்கியிருந்தபோது நியூயார்க்கிலிருந்து வந்த புகழ்பெற்ற ஓவியர் பீட்டர் மேக்ஸ் குருதேவரால் ஈரக்கப் பெற்றார். இலங்கைக்குத் திரும்பிச் செல்லும்போது நியூயார்க்கு வருமாறு குருதேவரை அழைத்தார்.

இரண்டு நாட்கள் தங்குவதற்காக நியூயார்க்குக்கு வந்தார். வாழ்க்கையில் பிடிப்பின்றி ஹிப்பிகளாகத் திரிந்த இளைஞர்களும் யுவதிகளம் குருதேவரின் போதனைகளால் ஈர்க்கப் பெற்றனர். சுவாமிகள் அந்நகரில் ஐந்து மாதம் தங்கியிருந்து அவர்களுக்கு யோகப் பயிற்சியையும் ஆன்மிக போதனைகளையும் வழங்கினார். ஒருங்கிணைந்த யோக நிலையைத்தை நிறுவி அவர்களை யோகிகளாக மாற்றினார். பயிற்சி பெற்ற சீடர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு 1967 ஜனவரியில் இலங்கைக்குத் திரும்பினார். நியூயார்க்கிலிருந்து ஏராமளான பக்தர்கள் அவருக்கு எழுதிய கடிதங்கள் அவருக்காகக் காத்திருந்தன. விரைவில் திரும்பிவிடுமாறு வேண்டிக் கொண்டனர். இலங்கையின் அமெரிக்கத் தூதுவரும் அமெரிக்கா விற்குக் குருதேவருடைய சேவை அவசியம் என்பதை வலியுறுத்தி அங்குத் திரும்பிச் செல்லுமாறு வேண்டிக் கொண்டார். அமெரிக்கர்கள் ஆன்மிக நெறியை உண்மையாக நாடுவதை அறிந்து குருதேவர் 1967 மே மாதத்தில் அமெரிக்காவிற்குத் திரும்பி வந்தார்.

அமெரிக்காவில் குருதேவரின் ஆன்மிகப்பணி விரிவடைந்தது. யோக சாதகர்கள் ஆசிரம வாழ்க்கை யை விரும்பினார்கள். ஆசிரம வாழ்க்கை தொடங் கியது. கனெக்டிகட் மாநிலத்தில் சச்சிதானந்த ஆசிரமம் தொடங்கப்பட்டது. பல அமெரிக்க சீடர்கள் துறவற தீட்சை பெற்றனர்.

பின்னர் வர்ஜீனியா மாநிலத்தில் ஆயிரம் ஏக்ரா பரபள்ளவுள்ள யோகவில் என்ற பரந்த மலைவெளிக்கு ஆசிரமம் மாற்றப்பெற்றது. அங்கு உலக ஒருங் கிணைந்த யோக மையம், 'தாமரை' என்ற ஒப்பற்ற சர்வ சமய ஒளிகோயில், நடராசர் கோயில், உடல் நல மையம், நுண்கலை மையம், வித்யாலயம் முதலியவைகளை நிறுவினார். ஆசிரமத்தைச் சுற்றி யோக சமுதாயம் வளர்ந்துள்ளது. தாமரைத் திருக்கோயில் 'உண்மை ஒன்று, வழிகள் பல' என்ற கோட்பாட்டின் சுடராக விளங்கி வருகிறது. பல்வேறு சமயத்தவர்களும் இங்கு ஒன்றாகக் கூடி வழிபாடு செய்கின்றனர். இதுவே உலகின் முதல் சர்வ சமய ஒளிக்கோயிலாகும்.

உலகின் பல்வேறு இடங்களில் ஒருங்கிணைந்த யோக நிலையக் கிளைகள் யோகக் கலையையும் குருதேவரின் போதனைகளையும் பரப்பிவருகின்றன.

குருதேவர் ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலி ருந்து வரும் அழைப்புகளை ஏற்று ஆன்மீக மாநாடு கருத்தரங்கு போன்ற நிகழ்ச்சிகளில் உரையாற்றி வந்துள்ளார். ஆயிரக்கணக்கான மக்கள் குருதேவரி டம் யோக, ஞானப் பயிற்சியைப் பெறும் பேறு பெற்றனர்.

குருதேவரின் சர்வசமய சமரச சேவை ஒப்பற்றது. போப்பாண்டவர் இச்சேவைக்காகக் குருதேவரைப் பலமுறை பராட்டியுள்ளார். பல்வேறு பொதுநல நிறுவனங்கள் குருதேவருக்குப் பற்பல விருதுகளை வழங்கியுள்ளன. இவருடைய மாணவர்களான டாக்டர் டீன் ஆர்னிஸ், டாக்டர் அமிர்தா மெக்லானஹான் போன்றவர்கள் மரக்கறி உணவு, தூய வாழ்க்கை, தியானம், யோகப்பயிற்சி, உடற்பயிற்சி ஆகிய உடல்நலத் திட்டத்தால் இருதயநோய், புற்றுநோய் போன்ற கொய நோய்களை மருந்தின்றிக் குணப்படுத்தி வருகின் றனர்.

அமைதியே ஆண்டவன், சர்வசமய சமரசம் ஒன்றே குலம் ஒருவனே தேவன், உண்மை ஒன்று வழிகள் பல, தூய வாழ்வு, ஆன்மநோய் ஒருமைப்பாடு போன்றன குருதேவரின் தத்துவமாகும்.

குருதேவர் மக்கள் எளிதில் விளங்கிக் கொள்வதற் கேற்ற உவமானங்கள் சிறுகதைகள் மூலம் மெய்ஞானக் கருத்துக்களை விளக்கி வந்தார். இவர் உரையாற்றிய கருத்துக்கள் ''சொற்களுக்கு அப்பால்'', ''உன்னை யறிக'', ''ஒருங்கிணைந்த ஹடயோகம்'', ஆரோக்கிய மரக்கறி உணவினன்'', அமைதி நம் அருகில்'', ''வாழும் கீதை'', ''பொன்னான நிகழ்காலம்'', ''பதஞ்சலி யோக சூத்திர விளக்கவுரை'' முதலிய நூல்களாக ஆங்கிலத்தில் தொகுக்கப் பெற்று வெளியிடப்பெற்றுள்ளன. குருதேவரின் ஆசியால் அவருடைய ஆசிரமத்தில் கடந்த பத்தாண்டு காலம் ஆன்மீக சாதனையும் சேவையும் புரியும் வாய்ப்பும் அவருடைய ஆங்கில நூல்களைத் தமிழாக்கம் செய்யவும் அவருடைய வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் எழுதும் வாய்ப்பும் இவ்அடியேனுக்கு வாய்க்கப் பெற்றன.

குருதேவர் தம் பக்தர்களுக்கு ஏற்கெனவே அறிவித்திருந்தவாறு இம்மாதம் 19ஆம் நாளில் உடலை விட்டுப் பிரிந்து மகாசமாதியை அடைந்தார். இவருடைய நெறியையும் போதனைகளையும் கடைப்பிடிப்பவர்கள் நிலையான அமைதியையும் ஆனந்தத்தையும் அடைவர், பிறவிப் பயனைப் பெறுவர்.

ஓ. இராம. கிருஷ்ணசாமி

© TamilOnline.com