அட்லாண்டாவில் கேட்டவை
நண்பர் ஒருவர் அட்லாண்டாவாசி. ஒரு மனைவி, ஒரு மகள், ஒரு மகன். நண்பர் பலே கில்லாடி. மார்க்கெடிங் லைனில் இருப்பதால் எல்லோரிடமும் எப்படி பழகவேண்டும் என்பது அத்துப்படி. ரொம்ப ஜாலி டைப். எல்லோரிடமும் கல கல என்று பேசிக்கொண்டிருப்பவர். மனைவி ஒரு நர்ஸ். கடமையே கண்ணாக இருப்பவர். இவருக்கு வாழ்க்கை துணைவி ஆனதால் அவரும் கொஞ்சம் கல கல.

இந்த தம்பதியின் மகள் அண்டர் கிராஜுவேஷன் முடித்ததுமே திருமணத்திற்குப் பார்க்க ஆரம்பித் தனர். அதிர்ஷ்ட வசமாக ஒரு நல்ல பையன் கிடைக்க, பையனுக்கும் பெண்ணுக்கும் மிகவும் பிடித்துப் போக கல்யாணம் நிச்சயமாகி விட்டது. பையனுக்கு விசா பிரச்சனை இருந்ததால் கல்யாணத்தை அமெரிக்கா விலேயே பண்ண வேண்டிய கட்டாயம். கல்யாணப் பெண்ணுக்கு நமது இந்திய வைதீக முறைப்படி கல்யாணம் செய்துகொள்ள ஆசை. பெண்ணின் தாயாரும் "ஒன்றும் கவலை படாதே, சென்னையில் கல்யாணம் செய்வது போலவே இங்கே நடத்தி விடலாம். அதற்கு நானும் உன் அப்பாவும் பொறுப்பு" என்று பெண்ணின் ஆசையை நிறைவேற்ற வாக்கு கொடுத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தனர். ஜாலி நண்பரும் வேறு வழி இல்லாமல் மனைவி சொன்ன எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டி முடிந்த வரையில் பெண்ணின் கல்யாணத்திற்கு எல்லா காரியங்களையும் செய்ய ஆரம்பித்தார். கல்யாணத் தேதியும் நெருங்க, பையனின் பெற்றோரும் முக்கிய சில சொந்தங்களும் சென்னையிலிருந்து வந்திறங்க, நண்பரின் மாமனார் மாமியாரும் பேத்தியின் கல்யாணத்தைப் பார்க்க ஊரிலிருந்து வந்தனர்.

எல்லாம் நல்லபடியாக நடக்க கல்யாணம் சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் சிறப்பாக நடந்து முடிந்தது. எல்லோருக்கும் ஒரே சந்தோஷம், முக்கியமாக பையனைப் பெற்றவர் களுக்கு. நல்ல பெண், நல்ல குடும்பம் என்பதில் ரொம்ப சந்தோஷம். அதுவும் நமது ஜாலி நண்பர் சம்பந்திகளை மிகவும் அருமையாக கவனித்து அவர்கள் எது கேட்டாலும் உடனே செய்து கொடுத்டு அசத்திவிட்டதில் சம்பந்திகளுக்குக் கொள்ளை பெருமை.

எல்லாம் நல்லபடியாக முடிந்து ஜாலி நண்பர் குடும்பம் மட்டும் நன்கு நடந்த கல்யாணத்தைப் பற்றி குடும்பமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது ஜாலி நண்பரின் மாமனார் திடீரென நண்பரைப் பார்த்து "எல்லாம் ஓ.கே. ஆனால் நீ சம்பந்திக்கு ரொம்ப பயப்படுகிறாய். அவர்கள் என்ன சொன்னா லும் சரி சரி என்று தலையை ஆட்டுவது எனக்கு பிடிக்கவில்லை" என்று கூற, ஜாலி நண்பர் மாமனாரைப் பார்த்து சிரித்தபடி "மாமா நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன் ஆனால் யோசித்த பிறகு 30 வருடம் முனும் என் கல்யாணத்தின் போது, என் அப்பா, அம்மா பட்ட வேதனையை என் சம்பந்திகள் படக் கூடாது என்பதால் தான் அப்படி அவர்களுக்கு மரியாதைக் கொடுத்தேன்" என்று தமாஷாகக் கூற எல்லோரும் சிரிக்க மாமனார் முகம் அஷ்ட கோணலாகியது.

******


அட்லாண்டாவில் நடந்த சூப்பர் ஹிட் பட்டிமன்றம் "திருமணமான இந்திய ஆண்களுக்கு சுதந்திரம் அதிகம் அமெரிக்காவில் அல்லது இந்தியாவில்" கேட்டது இது.

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு ராணியிடம் ரொம்ப பயமாம். ஊருக்கே ராஜாவாக் இருந்தாலும் இப்படி ராணியிடம் பயப்பட வேண்டியுள்ளதே என்று மிகவும் மனம் வருந்துவாராம். ஒரு நாள் மனைவி வெளியூர் சென்ற சமயம் தன் மந்திரியைக் கூப்பிட்டு தனது மனைவி படுத்தும் பாட்டைச் சொல்லி தனது பயத்தையும் சொல்லி மந்திரி நிலமை வீட்டில் எப்படி என்று கேட்டார். அந்த மந்திரி தலையைக் குனிந்தவாறு "ராஜா அவர்களே நீங்கள் எவ்வளவோ மேல். என் மனைவிக்கு கோபம் வந்தால் பாத்திரங்கள் பறக்கும், பட படவென எனக்கு அடியும் விழும். ஆகவே எனக்கு என் மனைவி என்றா சிம்ம சொப்பனம் தான். அவளைப் பற்றி நினைத் தாலே உடல் எல்லாம் நடுங்குகிறது அதனால் தான் தினமும் வீட்டுக்குப் போக பயந்து தான் 18 மணி நேரம் இங்கே வேலை செய்கிறேன்" என்று கூற ராஜாவிற்குத் தலை சுற்ற ஆரம்பித்தது.

உடனே ராஜா "நாம் இருவர் மட்டும் தான் மனைவிக்கு பயப்படுகிறோமா? அல்லது எல்லா ஆண்களுமே அப்படித்தானா? எனக் கேட்க மந்திரி "எல்லா ஆண்களும் அப்படித்தான் என நினைக் கிறேன்" என்று சொல்ல கோபமடைந்த ராஜா "நினைக்காதீர்கள் சரியான பதிலைச் சொல்லும்" என தன் மனைவியிடம் காட்ட முடியாத கோபத்தை மந்திரியிடம் காட்டினார். பதறிப்போன மந்திரி "ராஜா அவர்களே, நாளைக்கே நம்ம நாட்டிலுள்ள திருமணமான ஆண்களை எல்லாம் வரச்சொல்லி உங்க சந்தேகத்தைக் கேட்டுவிடலாம்" எனக் கூற ராஜாவும் சரி என்று சொல்ல அடுத்த நாளே கல்யாணமான ஆண்களை வரச்சொல்லி தண்டோரா அடிக்க எல்லோரும் ராஜ கட்டளையை ஏற்று வந்துக் கூடினர். மந்திரி ராஜாவின் சந்தேகத்தைக் கூறி மனைவிக்குப் பயப்படுபவர்கள் எல்லோரும் வலது பக்கமும் பயப்படாதவர்கள் எல்லாம் இடது பக்கமும் போகச் சொல்லிக் கூற எல்லோரும் ஒரு நொடி கூட யோசிக்காமல் வலது பக்கம் போக ஒரே ஒருவன் மட்டும் இடது பக்கம் சென்றானாம்.

அந்த ஒரு தைரியசாலியைப் பார்த்து மனம் மகிழ்ந்துபோன ராஜா அவனை அருகில் கூப்பிட்டு "தம்பி எனது ஆட்சியில் ஒரே ஒரு ஆண்மகனாவது மனைவிக்குப் பயப்படாமல் இருப்பதைக் கண்டு மிகவும் சந்தோஷமாக உள்ளது. அந்த ரகசியத்தை மற்றவர்களுக்கும் சொல்லேன் எங்கள் எல்லோருக் கும் ரொம்ப உதவியாக இருக்கும். தயவு செய்து எல்லோருக்கும் விளங்கும் படி மனைவியை எப்படி அடக்கி வைப்பது என்று தைரியமாகச் சொல்" எனக் கூற அந்த ஆள் மயங்கி சாய்ந்துவிட்டானாம்.

பதறிப் போன ராஜா முதல் உதவி செய்து "என்னப்பா ஆகியது?" எனக் கேட்க அவன் சொன்னானாம் "மகாராஜா தாங்கள் என்னெனவோ சொல்கிறீர் களே எனக்கு ஒன்றும் தெரியாது. இன்று நான் இங்கு வரக் கிளம்பும் முன் என் மனைவியிடம் போய் வருகிறேன் என்று சொன்னபோது அவங்க சொன்னாங்க ராஜா ஏதாவது கேட்டா மசமசவென்று நின்னு எல்லோரும் செய்கின்றதைச் செய்யாமல் வித்யாசமாக நீ இருக்கணும் என்று சொல்லி அனுப்பினாங்க, அதனால் தான் எல்லோரும் வலது பக்கம் போக, நான் இடது பக்கமா போனேன். தப்பென்றால் மன்னித்துவிடுங்கள். நான் சீக்கரம் வீட்டிற்குப் போகவேண்டும் இல்லையென்றால் என் மனைவி நாளை காலை வரை தோப்புக் கரணம் போடச் சொல்லி விடுவாங்க" என்று அப்பாவியாகக் கூற "பெண்கள் நாட்டின் கண்கள்" "மாதர் குல மாணிக்கங்கள் நீடுழி வாழ்க" என்று ராஜாவும் மந்திரியும் கூட்டத்தை முடித்துவைத்தனராம்.

அட்லாண்டா கணேஷ்

© TamilOnline.com