K.M. கோவிந்தசாமியின் சரித்திரம் - 4
அட்லாண்டாவை அலறவைக்கும் தமிழ் குடும்பம் - RUSTY'S SIXTH SENSE - "நாய் மொழி"

(இந்தக் கதையில் கோவிந்தசாமியின் பங்கு மிகவும் குறைவு தான் ஆனாலும் யாருமே கேட்க அஞ்சும் ஒரு கேள்வியை அனாவசியமாக கோ. சாமி கேட்டு ரமேஷின் மனதைப் புண் படுத்துவது ஒரு சில மனித பிறவிகளால் மட்டுமே முடியும். அந்த லிஸ்டில் கோ.சாமிக்கு முதலிடம்)

மங்களம் பாட்டி ஈனசுரத்தில் "ஏண்டியம்மா இந்த நாய் இப்படி அழுகிறது" என்று சோகமாய் கேட்க விஜி அதற்கு "ஒண்ணும் இல்லை அதுக்கு உடம்பு முடியலை, கொஞ்சம் சும்மா இருங்கோ இல்லேன்னா உங்க பிள்ளை கத்துவார் அவர் நண்பர் வேறு வந்திருக்கிறார்" என்று அவள் வாயை அடக்கிவிட்டு நாய்க்கு என்ன ஆச்சு என்று பார்க்க முயல, மெல்லிய குரலில் "அதில்லடி நாய் அழுதா வீட்டுக்கு நல்லதில்லை" என்று மங்களம் பாட்டி சொல்ல "அதெல்லாம் இந்தியாவில் இங்க அமெரிக்கவில் இல்லை" என்று கோபமாக விஜி சொல்ல "எங்க இருந்தா என்ன, நாய் ஊளையிடப்படாதுன்னு பெரியவா சொல்லுவா - ஊளையிட்டா சாவு செய்தி காதில் விழும்பா. நாய்க்கு எமதர்மனைப் பார்க்கும் சக்தி உண்டுன்னு சொல்லுவா" என்றாள் மங்களம் பாட்டி, பாவம் தன்னைப் பற்றிய கவலையில்.

மங்களம் பாட்டிக்கு 73 வயது. இரண்டு வருடத்துக்கு ஒரு முறை பிடிவாதம் பிடித்து அட்லாண்டா வந்துவிடுவாள், பிள்ளையையும், மருமகளையும், இரண்டு பேரன் பேத்தியையும் பார்க்க. எவ்வளவு சொன்னாலும் பணத்தை அனுப்பினாலும் ஹெல்த் இன்சூரனஸ் எடுக்க மாட்டாள். "நன்னா குத்துக்கல் மாதிரி இருக்கேன் எதுக்கு அவனுக்கு தண்டம் அழனும்" என்று சொல்லை வந்துவிடுவாள். கட்டையைத் தொடுங்கள் (Touch wood) இதுவரை ஒரு தலைவலி என்று கூட படுத்ததில்லை. இந்தியாவிலாவது அப்பப்போ உடம்புக்கு வரும் ஆனால் அட்லாண்டாவில் ஒரு முறை கூட உடம்பு படுத்தவில்லை. என்ன கொஞ்சம் சுவீட் பாட்டி உடம்பில் கொஞ்சம் சுகர் உண்டு. மற்றபடி ரொம்ப ஹெல்த்தி.

ஒரே பிள்ளை ரமேஷ் மீதி இரண்டு பெண்களும் சென்னையில் தான் வாசம். ஒருத்திக்குக் குழந்தை இல்லை அடுத்தவளுக்கு ஒரே பொண்ணு 14 வயதில். மாப்பிள்ளைக்கு சர்கார் உத்யோகம். அங்கே ஒரு வருடம் போனால் போது இதுகளைப் பார்க்க ஆசை அடித்துக்கொள்ளும். பிள்ளையும் குழந்தைகளும் மூன்று வருடத்துக்கு ஒரு முறை இந்தியா வந்தாலும் அந்த 20 நாள் லீவ் பாட்டிக்கு போதவே போதாது. இங்கு லீவ் கொடுக்கும் ஆபிஸரைத் திட்டித் தீர்ப்பாள்.

அட்லாண்டா வந்து 6 மாதம் இருந்து அப்புறமும் போக மனசில்லாமல் விசா எக்ஸ்டென்ஷன் கிடைக்கவில்லை என்றால் தான் கிளம்புவாள். இங்கே மருமகளை சொந்தப் பெண் போலத்தான் நடத்துவாள் ஆகவே அவளும் அம்மா அம்மா என்று கூப்பிட்டுக்கொண்டு சொந்தப் பெண் போலவே அன்புடன் சண்டைப் போட்டுக்கொண்டும் இருப்பாள். பேரன் பேத்திக்கு பாட்டி வந்தால் ஒரே குஷி. திக்கித் திணறி தமிழ் பேசி சுவீட் பாட்டியிடம் அதைப் பண்ணு இதைப் பண்ணு என்று உரிமையாய் இருப்பார்கள். ரமேஷ் மற்றும் விஜி அதைப் பார்த்து சந்தோஷப் படுவார்கள் உள்ளாற இன்சூரன்ஸ் கவலை இருந் தாலும்.

அந்தப் பக்கம் ரமேஷ் குரல் கோபமாகக் கேட்டது.

"யோவ் கோவிந்தசாமி என்னையா கேட்ட? என்ன கேட்ட?" என்று ரமேஷ் அவன் சட்டையைப் பிடிக்காத குறைதான். புரிந்தும் புரியாததுபோல நடித்து மறுபடியும் "ஒண்ணும் இல்லே இப்ப இந்த நாய் சாகக் கிடக்கே, செத்தா எரிப்பேளா இல்லை புதைப்பேளா என்று கேட்டேன். தப்பா இருந்தா மன்னிச்சுடு" என்றான். ரமேஷ் கோபத்தின் உச்சக்கட்டத்தில் "யோவ் இன்னும் உயிர் இருக்குயா, சாகலை, அது போனப்புறம் கேட்க வேண்டிய கேள்வியை அட்வான்ஸா கேட்கிறியே இதுவே உங்கப்பாவோ இல்லை அம்மாவோன்னா இந்த மாதிரி கேட்பயா?" எனக் கேட்க கோவிந்தசாமி பதறிப் போய் "சே சே மனுஷாளுக்கும் நாய்க்கும் வித்தியாசம் இருக்கே" என்று சொல்லப்போக ரமேஷ் கெட்ட வார்த்தை ஒன்று சொல்லி "அறிவில்லாம பேசாதேயா, மனுஷங்களைவிட நாய்கள் எவ்வளவோ மேல் ஐயா நிச்சயமா நாம போடுற சோத்துக்கு நன்றியைக் காட்டும். வேணும்முன்னா உஙக் அப்பாவைக் கேளு கரட்டா சொல்லுவார் உன்னைவிட நாய்க்கு எவ்வளவோ நன்றி அதிகம்ன்னு" கோ.சாமி விழிகள் சிவக்க கோபம் தலைக்கு ஏற அதைக் கவனித்த ரமேஷ் அப்போதுதான் கோ.சாமியையும் அவன் குடும்பத்தை யும் முறைத்துக் கொண்டால் என்ன நடக்கும் என்பதை எண்ணிப் பார்த்து எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு சாரி சொல்லி வைத்தான். இருந்தபோதும் "செத்தால் எரிப்பீர்களா? அல்லது புதைப்பீர்களா?" எனக் கேட்டதை ரமேஷால் தாங்கமுடியவில்லை.

ஒன்றும் இல்லை ரமேஷ் & குடும்பம் வளர்த்த நாய் ரஸ்டி திடீரென உடம்பெல்லாம் குறுகிப் போய் நடக்கமுடியாமல் எப்படியோ கஷ்டப்பட்டு இவர்கள் பேசிக்கொண்டு இருந்த இடத்தில் வந்து விழுந்து அழுதது. முடியாமல் முக்கி முனகியது. பதறிப்போன ரமேஷ் அதைக் தூக்கி மடியில் வைத்து தடவிக் கொடுத்து என்னாச்சு என்று பார்க்க, அவன் மனைவியும் குழந்தைகளும் பயத்தில் அலற அவர் களை சமாதானப்படுத்தி அனிமல் எமெர்ஜென்சிக்கு போகத் தயாரா இருந்த நேரத்தில் தான் மேற்கண்ட உரையாடல் நடந்தது.

இப்படி யாராவது ரமேஷிடம் பேசியிருந்தால் இந்த ஜென்மத்திற்கு ரமேஷ் அந்த ஆளிடம் முகம் கொடுத்துப் பேசி இருக்கமாட்டான். உடனே "கெட் அவுட்" சொல்லியிருப்பான். ஆனால் கோவிந்தசாமி இவனுடன் கூடப் படித்தவன் தூரத்து சொந்தம் கூட, மேலும் அவன் வக்ர புத்தி இவனுக்குத் தெரிந்ததால் அவ்வப்போது வேறு வழி இல்லாமல் அவனைப் பகைத்துக் கொள்ள வேண்டாமே என்று சிறிது நட்பாக இருப்பான்.

ரமேஷ், அவன் மனைவி விஜி & பொண்ணு வித்யா, பையன் கணேஷ் நால்வரையும் அட்லாண்டா வந்த நாள் முதலாக தெரியும். அப்போதும் கோ.சாமி கட்டை பிரம்மச்சாரி அவனது அக்கா நாக்கு நீ...ளம் நாகலட்சுமி ஊரில் இல்லாதபோது எல்லாம் ரமேஷ் வீட்டுலேயே நிறைய சாப்பிடுவான். அதுவும் அமெரிக்காவில் அப்போதெல்லாம் இப்போது போல செளத் இந்தியன் ஹோட்டல்கள் கிடையாது. ஒரு வேளை செஞ்சோற்றுக் கடனுக்குப் பொறுத்துக் கொண்டானோ என்னவோ தெரியாது.

அதற்குப் பிறகும் அந்த நாயை ரமேஷுடன் எமெர்ஜென்சி ஆஸ்பிடல் வரைக் கூட்டிக்கொண்டு போய் எல்லாம் செக் அப் செய்து திரும்பி வந்தார்கள். ஆஸ்பிடல் ரிப்போர்டில் நாய்க்கு ஒன்றும் இல்லை எல்லாம் சரியா இருக்கு சில சமயம் வெயில் அதிகம் இருந்தால் இப்படி அட்டாக் வரும், பயப்பட வேண்டாம் என்று சொல்ல நாயும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தது. நிம்மதிப் பெருமூச்சில் ரமேஷும், கோ.சாமியும் வீட்டுக்குத் திரும்பி வந்தார்கள். வீட்டில் எல்லோரிடமும் நல்ல செய்தியைச் சொல்லை "அப்பாடி" என்று ஒரு வழியாக சிறிது அழுகை நின்று நிம்மதி வந்தது.

அவர்கள் நாய் ரஸ்டி அவ்வப்போது ரமேஷிடம் வந்து என்னவோ கூற முயற்சி செய்தது. ரமேஷுக்கு ஒரே பதற்றம் ஏனென்று புரியவில்லை. மாரை வலிப்பது போல ஒரு ப்ரம்மை. இதைச் சொன்னால் விஜி உடனே ஆம்புலன்சைக் கூப்பிட்டு கலாட்டா பண்ணிவிடுவாளே என்று சும்மா இருந்தால். கோ.சாமியைக் கொஞ்சம் பேசாமல் இருக்கச் சொல்லி கண்களை மூடிக்கொண்டான். நாய் அருகே வந்து இவனை கருணையாக வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தது.

ரமேஷ் மனதில் பழைய நினைவுகள் ஓடியது. அதுவும் 5 வருடங்களுக்கு முன்பு அந்த நாய் வந்த நாள்.

அன்று ரமேஷுக்கு ஒரே ஆச்சரியம். அட்லாண்டாவில் இருக்கும் அவன் ஆபிஸ் வேலைக்காக மியாமி 4 நாட்கள் சென்று திரும்பி இருந்தான். அப்போது தான் அந்த ஆச்சரியம் காத்திருந்தது. வீட்டில் ஒரு அழகிய ஆண் நாய்க்குட்டி. பிரவுன் கலரில் பார்ப்பதற்கு நம்மவூர் தெரு நாய் ஜாடை. ஆனால் நல்ல புஷ்டியான தெரு நாய் போல நன்றாக இருந்தது.

இவன் வந்த நேரம் மனைவியும் மகளும் வெளியே போயிருந்ததால் இவன் அந்த வால் ஆட்டும் நாய்க் குட்டியைச் சிறிது கொஞ்சிவிட்டு குளிக்கச் செல்ல நினைத்தான். வீட்டுப் பின் பகுதியில் சன் ரூமில் அதன் புதுக் கூண்டு இருந்தது. இவன் அதைக் கொஞ்சித் திரும்ப கூண்டில் விட்டது அது சிறிது வள் வள் என்று கத்தியது. மனது கேட்காமல் திரும்ப வந்து சிறிது கொஞ்சி உடம்பு அசதியைப் போக்க ஒரு குளி குளித்தால் தேவலை என்று நினைத்து அந்தக் குட்டி கத்தினாலும் பரவாயில்லை என்று கூண்டில் விட்டுச் சென்றான்.

இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டும். ரமேஷ் ஒரு நாய் பிரியன். இந்தியாவில் இருந்தவரை எப்போதும் வீட்டில் இரண்டு நாய்கள் இருந்தது. கூட்டுக் குடும்பமாக பெரிய சொந்த வீட்டில் இருந்ததால் அவுட் ஹவுசில் இருந்த வேலைக்காரக் குடும்பம் வேண்டும் போது இவனது நாய்களைப் பார்த்துக்கொண்டது. அவன் அப்பாவிற்கு நாயால் ஆகும் செலவுதான் பிடிக்கவில்லையே தவிர காவலுக்கு இரண்டு நாய்கள் இருந்ததில் சந்தோஷம் தான். ரமேஷ் வேலைக்குப் போய் அந்த செலவும் அவன் ஏற்றுக் கொண்டதால் ஒன்றும் பிரச்சனை இல்லை. அம்மா & தங்கைகள் வெறுக்கவும் இல்லை அதுகளைக் கொஞ்சிக் குலவவும் இல்லை. வீட்டில் கூட இரண்டு ஜந்துக்கள். ஏதாவது வீட்டுக்குள் அசிங்கம் பண்ணினால் மட்டும் எல்லோரும் கொஞ்சம் எகிறுவார்கள் ஆனால் அது இரவு கொஞ்சம் குரைத்து ரமேஷ் "பாருங்க பாருங்க திருடன் ஓடறான்" என்று சொன்னால் போதும் பார்க்காத திருடனை எல்லோரும் பார்த்தது போல நாய்களைப் புகழ ஆரம்பித்துவிடுவார்கள்.

ரமேஷின் கல்யாணத்திற்குப் பிறகு தான் பிரச்சனையே. மனைவி விஜிக்கும் சுத்தமாக நாய்களைப் பிடிக்கவில்லை. அவள் பெரிய குடும்பத்துப் பெண் பணத்தில் அல்ல அக்கா, தங்கை, தம்பி என்று வீட்டில் எட்டுக் குழந்தைகள். இதற்கு நடுவில் அவள் அப்பா வேலைக்கும் போய்க்கொண்டிருந்தார். எட்டுப் பிள்ளைகளில் 5 பெண்கள் 3 ஆண்கள். இதற்கு மேல் அவர்கள் நாயை எங்கு வளர்ப்பது. ஆகவே அவர்கள் வீட்டில் நாய் வளர்ப்பவர்களைப் பார்த்தால் ஒரு ஆசை. சீ இதெல்லாம் வீட்டில் வளர்பார்களா என்று அப்பா அம்மா சொல்லி சொல்லி குழந்தைகளுக்கு ஒரு வெறுப்பு செல்ல பிராணிகள் மீது. அப்படியே வளர்ந்து நாய் பிரியன் ரமேஷுக்கு மாலையிட்ட மங்கை விஜி.

இவர்கள் வீட்டு நாய்களை பார்த்ததிலிருந்து விஜிக்கு ஒரே பயம் எத்தனை சொன்னாலும் பயம் போகவில்லை. அப்பா அமாவிடம் வேறு கம்ப்ளெயிண்ட் பண்ணி ரமேஷ் மாமனார் நைசாக ரமேஷிடம் "எதுக்கு மாப்பிள்ளை இந்த நாய்களெல்லாம்" என்று கேட்க ரமேஷ் "அதுகளும் எங்க வீட்டுக் குழந்தைகள் தான்" என்று கூற வீட்டில் ஒரே வள் வள் தான். மாமனார் கோபத்தில் "இந்த நாய் ஜாக்கிரதை போர்டை எடுத்துட்டு, நாய்கள் நல்லதுகள் ஆனால் மனிதர்கள் ஜாக்கிரதை என்று புதுசா போர்டு வைங்கோ" என்று சொல்லி கோபமாகப் போய்விட்டார்.

எது எப்படியோ விஜிக்கு சுத்தமாக நாய்களைப் பிடிக்கவில்லை. முதல் டெலிவரிக்குப் போகும் போது சொல்லிவிட்டு போனாள். "நான் குழந்தையோட திரும்பி வரும்போது இரண்டு நாய்களும் இங்கே இருக்கக் கூடாது வேறு யாரிடமாவது கொடுத்துவிடுங்கள்" என்று. ரமேஷும் அவ நிம்மதியா போய் பெத்துப் பிழைக்கவேண்டுமே என்று "கவலைப்படாம போய் வா" என்று சொல்லி அனுப்பினான். சொன்ன முகூர்த்தம் இரண்டு மாததில் ஏதேதோ வியாதி வந்து இரண்டும் மண்டையைப் போட்டது. கூட்டுக் குடும்பமாக இருந்ததால் அவன் அம்மா போகட்டும் விடு உன் பொண்டாட்டிக்குத் தான் நாய்களைப் பிடிக்கலை அதனாலே வேற நாய் இப்போதைக்கு வேண்டாம் எனச் சொல்ல மிக வருத்தத்துடன் ரமேஷ் ஒப்புக்கொண்டான்.

அப்புறம் நடந்ததே வேறு. ரமேஷுக்கு வேலை பிராப்ளம் வந்து வாழ்க்கைப் பிரச்சனையில் நாய் வளர்ப்பது மறந்து போக குடும்பமாக ஒரு ஆப்பர்டூனிடி கிடைத்தபோது அட்லாண்டாவிற்குக் குடி பெயர்ந்துவிட்டார்கள். கூட்டுக் குடித்தனம் இப்போது தனிக் குடித்தனம் ஆகியது. ரமேஷ், அவன் மனைவி, மற்றும் இரண்டு குழந்தைகள் அட்லாண் டாவில்.

முதல் நான்கு வருடங்கள் அபார்ட்மெண்ட் வாசம். நாய் வளர்பது பற்றி நினைக்கக்கூட முடியவில்லை. புது நாட்டில் செட்டில் ஆக வேண்டுமே என்ற கவலை. புருஷன், பொஞ்சாதி இருவருக்குமே நல்ல வேலை கிடைத்தது. நல்ல செழிப்பான நாடு, அட்லாண்டா வும் நல்ல ஊரு. ரொம்ப வெயிலும் இல்லை, குளிரும் இல்லை. வருடத்துக்கு இரண்டு மாதம் கொஞ்சம் குளிர். அவ்வளவுதான். அமெரிக்காவிலேயே இருந்துவிட வேண்டியதுதான் என்று முடிவு பண்ணிய நாளிலிருந்து எப்போதும் பச்சை அட்டை பற்றித் தான் கவலை. ஒரு வழியாக 5வது வருடம் அந்த பிரச்சனையும் தீர்ந்தது.

அப்புறம் ஜகச் ஜோதியாக டெவலப் ஆகும் ஏரியாவில் லாண்டோடு வீடு வாங்கியபோது ஆசை அடித்துக்கொண்டது. ஆக இங்க இரண்டு நாய்கள் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று. ஆனால் புது கார்பெட் பயமுறுத்தியது. விஜியிடம் கேட்கவும் பயம். நல்ல வீட்டை வீணடிக்கக் கூடாது என்று சும்மா இருந்தேன். அவன் பெண் வித்யா அப்பா போல நாய் ஆசை வைத்திருந்தாள். அம்மா அவளை அடக்கி வைத்திருந்தாள். இப்போது வீடு வாங்கி 5 வருடம் ஆகிவிட்டது. புது கருக்கு எல்லாம் முடிந்து கார்பெட் எல்லாம் கொஞ்சம் அழுக்கு பட்டதால் மனைவியிடம் நாய் விஷயம் கேட்கலாமா என எண்ணும் போது தான் வீட்டில் நாய்.

அப்படிப்பட்ட வீட்டில் இப்போது ஒரு நாய் என்றால் ரமேஷுக்கு ஆச்சரியம் வருமா? வராதா?

இவன் குளிக்கச் சென்றதும் அவன் மனைவி விஜியும் மகள் வித்யாவும் க்ராசரி ஸ்டோரிலிருந்து பால் மற்றும் காய்கறிகளையும் வாங்கிக் கொண்டு உள்ளே வந்தனர். மகன் டென்னிஸ் கிளாஸ் போயிருந்தான். அப்பா காரைப் பார்த்து வித்யா "அம்மா அப்பா வந்துட்டார் போல" என்று சொல்ல திரும்பிக் காரைப் பார்த்த விஜி "ஆமாண்டி இப்ப நாயைப் பார்த்திருப்பார்" என்று சிறிது பயத்துடன் சொல்ல "அம்மா டோண்ட் ஒரி நான் பேசிக்கிறேன்" என்று கூறியபடியே கராஜ் வழியாக கிச்சன் உள்ளே வந்தார்கள். மாடியில் குளித்து ·பிரெஷ் ஆன ரமேஷ் மெதுவாக கீழே இறங்கி வந்து இருவருக்கும் ஒரு ஹலோ சொல்லி "அது யார் வீட்டு நாய்க் குட்டி நல்லா இருக்கே" என்று கூற விஜி "நான் உங்களுக்குப் பிடிக்குமேன்னுதான் நம்ம வீட்டுக்கு யூமேன் (Humane) சொஸைட்டியிலிருந்து வாங்கி வந்தேன்" என்றாள். "ஓகோ, எனக்கு பிடிக்கு மேன்னா?" என்று சந்தேகமாகக் கேட்க "ஒண்ணும் இல்லை ரமேஷ் உங்களுக்கு, உங்கள் பொண்ணுக்கு நாயை பிடிக்கிறது. அதுவும் இன்னும் நாலைந்து வருடத்தில் பொண்ணு கல்யாணம் ஆகிப் போய்விடுவா. ஒரு வேளை வர மாப்பிள்ளைக்கு நாய் பிடிக்கலைன்னா நம்ம பொண்ணுக்கு நாய் வளர்க்கலையே என்ற குறை ரொம்ப இருக்கு லை·ப்ல எதுக்கு அந்த மா
திரி குறைன்னுதான் இதை வாங்கிட்டு வந்தேன்" என்றாள். உண்மையான காரணம் இப்போது ரமேஷுக்குப் புரிந்தது. பொண்ணுக்காக! பொண்ணுக்காக! கொஞ்சம் பொறாமை வந்தாலும் தனக்கும் பிடிக்குமே என்று மனதைத் தேற்றிக்கொண்டான்.

அடுத்த நாளிலிருந்து ரமேஷும் குழந்தைகளும் நாய் விஷயத்தில் படு பிசி. ரஸ்டி என்று நாமகரணம் சூட்டி அதற்கு ராஜ உபசாரம். அதுவும் நல்லபடியாக வளர்ந்து வந்தது. அது இருமினால், தும்மினால் அனிமல் கிளினிக்குக் கூட்டிப் போய் வைத்தியம் பார்த்து டாக்டர் ரொம்ப ஹெல்தி நாய் என்று சொன்ன பிறகு ஆறே மாதத்தில் அதுக்கு தனியா இருந்தா ரொம்ப போர் என்று சொல்லி ஒரு பெண் நாய் குட்டி வந்தது தனி கதை. அதை சொன்னது விஜி என்பதில் அப்பனுக்கும் குழந்தைகளுக்கும் வாயெல்லாம் பல்.

விஜிக்கு எப்படித்தான் அந்த பழைய நாய் பயம் போயிற்று என்பது ரமேஷுக்கு புரியாத புதிர். குதிர் போல பெண் வளர்ந்ததால் அவள் மீது உள்ள பாசத்தில் நாய் பயம் போனது இவனுக்கு ஒரே ஆச்சரியம். இப்போது எல்லாம் விஜி நாயைக் கொஞ்சுவது, கவனிப்பது எல்லாம் பார்த்து இவனுக்கு ஆச்சரியத்தில் விழிகள் விரியும், வாய் பிளக்கும்.

இந்த பிளாஷ் பேக் ஓடும் போதே அவனது விழிகள் விரிந்தன, வாய் பிளந்தது. ஒரு சின்ன முனகலுடன் பூவுலகிற்கு "பை" சொல்லிவிட்டான் மாரைப் பிடித்தபடி ரமேஷ்.

ரஸ்டி "வள் வள்" என்று குரைத்தது. அதன் பாஷையில் "ஐயோ, எவ்வளவு சொல்லியும் உனக்கு புரியலியே, நான் இதற்கு மேல் என்ன செய்வேன்? மாடியிலேயே இருந்த நான் எமனைப் பார்த்து உன்னைக் காப்பாத்த ஓடி வந்தேனே அப்போ கால் வழுக்கி கீழே விழுந்து உடம்பு முடியாமக் கூட உன்னிடம் ஓடி வந்து சொன்னேனே, அழுதேனே, ஆஸ்பிடலுக்கு போறேன்னு உடனே சந்தோஷப்பட்டேனே, ஆனா உன் ஆஸ்பிடலுக்குப் போகாமல் நீ அதை புரிஞ்சுக்காம என்னை ஆஸ்பிடலுக்கு கூட்டிக்கொண்டு போனியே? அட மூட மனிதர்களே எங்களை வளர்க்கறா, அன்பு காட்டறா நீங்கதானே எங்களுக்கு எல்லாம், தெய்வத்துக்கும் மேல் உங்க மேலே அன்பு வைத்திருக்கும் எங்க பாஷையை ஏன் கத்துக்க மாட்டேன்னுறீங்க? தேவை இல்லாத போது ஏதேதோ பாஷையெல்லாம் தேடிப் போய்க் கத்துக்கறீங்களே, பணம் சம்பாதிக்கனும்னு, உயிர் இருந்தாதானே பணத்தைச் சம்பாதிக்க முடியும், முதலில் இதை கத்துக்கோங்கைய்யா என்று கதறிய அதைக் குண்டு கட்டாகப் பிடித்து இதற்கு என்னவோ ஆகிவிட்டது என்று சொல்லி கராஜில் தள்ளி மற்ற காரியங்களை அழுதுகொண்டே மனிதர்கள் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

வக்ர புத்தி நண்பன் கோ.சாமிக்கு இப்போது அந்த சந்தேகம் வந்தது. இவர்கள் ஜாதியில் "எரிப்பார்களா? புதைப்பார்களா?" என்று. ஆனால் பழைய அனுபவத்தில் "அடி" விழுமோ என்று யாரிடமும் கேட்க பயமாக இருந்தது.

ரமேஷின் 10வது நாள் காரியம் நடக்க மதியம் வந்தவர்கள் சாப்பிட்டுவிட்டு போக, அவனைப் பெற்ற தாயார், தாலி கட்டிய மனைவி, அவன் பெற்ற பிள்ளைகள் மற்றும் நெருங்கிய சொந்த பந்தங்கள் சாப்பிட உட்கார்கிறார்கள். பாதி சாப்பிடும் போது கராஜிலிருந்து ஒரு பெரிய சத்தம். நாய் அழும் சத்தம். மங்களம் பாட்டி பதறிப்போய் மறுபடியும் எமதர்மராஜன் தன்னைத் தேடி வந்துவிட்டானோ என்ற பயத்தில் மாரைப் பிடிச்சபடி "என்னாச்சு போய் பாருங்கோ" எனறு கூற எல்லோரும் ஒடிப் போய் பார்த்தால் 10 நாட்கள் ஊன் உறக்கம் இல்லாமல், தன் முதலாளி போன துக்கம் தாளாமல் இருந்த ரஸ்டியின் விழிகள் விரிந்து வாய் பிளந்து கிடந்தது.

அட்லாண்டா கணேஷ்

© TamilOnline.com