மனப்பான்மை இருந்தால்...
விமானத்திலிருந்து இறங்கியவுடன் நான் பார்த்த முதல் அனுபவம் எல்லா கவுண்டரிலும் (counter) வரிசையாக வரவேண்டும். ஒருவர் கவுண்டரில் இருக்கும் போது மற்றவர் கொஞ்சம் தள்ளி நிற்க வேண்டும். இதே முறை எல்லா இடங்களிலும் கடைபிடிக்கப்படுகிறது. இதில் தெரிந்தவர், தெரியாதவர் பாகுபாடு இல்லை.

இரண்டாவதாக மற்றொருவர் வீட்டிற்கு செல்வதற்கு முன் அவர்களுக்கு போன் பண்ணி அவர்களுக்கு அன்று சந்திக்க செளகரியபடுமா என்று கேட்டுக் கொண்டு செல்லும்முறை. அதே மாதிரி காலைவேளையில் அலுவலகம் செல்வதால் யாரும் அனாவசியமாக போனில் அழைத்து பேசுவதில்லை. இம்முறை பலவிதங்களிலும் வரவேற்கத்தக்கதாக உள்ளது.

இங்குள்ள கோயில்களில் எவ்வளவு மக்கள் இங்கு வந்தும், நமது பண்பாட்டினை விடாமல் கடைபிடிக்கிறார்கள் என்று பார்க்கும் போது உள்ளம் பரவசமடைகிறது. வெளிநாட்டுக்கு வந்துள்ளோம் என்ற உணர்வே தோன்றுவதில்லை.

இங்கு வந்து தான் வரலக்ஷ்மி நோன்பு பண்டிகை பண்ணினேன். அதற்கு இரண்டு நாள் முன்னாள் எனது மகளிடம் அவளுக்கு தெரிந்த நண்பரின் நண்பர் மூலம் உனது அம்மா வந்திருக்கிறரா நான் அவர்களுடன் வந்து நோன்பு பண்ணுகிறேன் என்று சொன்னார். அப்பெண், அம்மன் முகம் மற்றும் எல்லா பொருட்களுடன் வந்து என்னுடன் நோன்பு பண்ணினார். இங்கு வந்தும் நமது பெண்கள் கலாசாரத்தை விடாமல் தொடர்ந்துவருவது சந்தோஷமாயிருந்தது. பல வீடுகளில் நவராத்திரி கொலு வைத்து தாம்பூலம் கொடுத்து அந்த பழக்கத்தையும் விடாமல் செய்கிறார்கள்.

திடீரென எனக்கு தெரிந்த பெண்ணின் தயா¡ர், தந்தைக்கு விசா கிடைக்க தாமதமாயிருக்கிறது. அவளுக்கோ ஞாயிற்றுக்கிழமை (8.9.2002) சீமந்தம்/வளைகாப்பு. அப்பெண்ணுக்கு என்னை அவ்வளவாக அறிமுகம் இல்லை. ஆனால் அவள் என்னை நேரில் அணுகி உதவி கோரினாள். நான் போய் உதவியது மிகவும் சந்தோஷம் ஆகிவிட்டாள். எனக்கும் மனநிறைவாயிருந்தது.

இங்குள்ள அமெரிக்கர்கள் அந்நிய நாட்டினரை இன்முகத்துடன ஹாய் சொல்வது, சாலைவிதிகளை கடைபிடித்தல், சுற்றுசூழல் சுத்தமாக வைத்திருத்தல், உடலை நன்றாக ஆரோக்கியமாய் வைத்திருப்பது என்ற பல நல்ல பழக்கங்களுடன் உள்ளனர்.

இங்கு பல கோணங்களில் தீர யோசித்து பார்த்ததில் இங்குள்ள அமெரிக்கர்கள்/ க்ரீன்காட்டில் உள்ள இந்தியர்கள் மற்றும் விசிட் விசாவில் வருகை புரியும் இளம் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கோ மாலை 6 மணிக்கு பிறகும் சனிக்கிழமை/ஞாயிற்றுக்கிழமை மற்ற long week endல் உடல்நலம் பாதிக்ககூடாது. அப்படி பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு ஒரு emergency என்ற பெயரில் நிறைய பணம் மற்றும் நீண்ட நேரம் காக்க வேண்டும். Insurance இல்லாமல் visit visa வில் வந்தால் அவர்கள் பாடு அதோகதிதான். மருத்துவர் என்பவர் தனது சொந்த விசயங்களை தியாகம் செய்து சமூகத்திற்காக சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை இருந்தால் தான் இதற்கு ஒரு விமோசனம் பிடிக்கும்.

வயதானவர்கள் தங்கள் மகன்/மகள் இங்கு இருந்தாலும் இதனால் வர அஞ்சுகிறார்கள். இந்நிலை மாற சம்பந்தப்பட்டவர்கள் ஆவண செய்ய வேண்டும்.

கெளசல்யா சவாமிநாதன்

© TamilOnline.com