தீபாவளி ஸ்பெஷல்
அதிரசம்

தேவையான பொருட்கள்
அரிசி - 2 1/2 கப் அல்லது 1/2 கிலோ
வெல்லம் - 300 கிராம்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
நெய் - 1 ஸ்பூன்
எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு

செய்முறை

அரிசி மாவு

அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 2 மணி நேரம் ஊரவைக்கவும். பின்னர் தண்ணீரை முழுவதும் வடிகட்டவும். பின்னர் ஒரு துணியை விரித்து நிழலில் 30 நிமிடங்கள் உலர வைக்கவும்.

மிக்ஸியில் நன்றாக அரைத்து சலித்தெடுக்கவும்.

வெல்லப்பாகு

வெல்லத்தை தூள் செய்து கனம் அதிகமான வாணலியில் இட்டு சிறிது தண்ணீர் சேர்க்கவும்.

வெல்லம் நன்கு கரையும் வரைக் கிளறவும். கல், மண் மற்றும் மற்ற தூசுகளை நீக்க கரைத்த வெல்லத்தை வடிகட்டவும். மீண்டும் வாணலியில் ஊற்றி மிதமான சூட்டில் காய்ச்சவும்.

வெல்லப் பாகு சிறிதளவு எடுத்து குளிர்ந்த நீரில் ஊற்றி, கையில் எடுத்தால் உருட்டும் பக்குவம் வரும் வரை காய்ச்சவும். அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய் பொடியைச் சேர்த்து கிளறவும்.

அரிசி மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கிளறவும் (கட்டித் தட்டிவிடாமல் இருக்க வேண்டும்). சப்பாத்தி மாவு பதம் அளவுக்கு அரிசி மாவு, பாகு கலவை இருக்க வேண்டும். கலந்த மாவை மூடிவைத்து மறுநாள் அதிரசம் செய்ய வேண்டும்.

அதிரசம் செய்வதற்கு முன்பு, மாவுக் கலவையை நன்றாக பிசையவும். உருண்டைகள் செய்யும் போது மாவுக் கலவை உடைந்தால் சிறிதளவு பால் அல்லது தண்ணீர் தெளித்து கலக்கவும். பின்னர் உருண்டைகளாக்கிக் (எலுமிச்சை அளவு) கொள்ளவும்.

எலுமிச்சை அளவு உருண்டையை எடுத்து எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் அல்லது அலுமினியம் பேப்பரில் வைத்து கையால் வட்ட வடிவில் தட்டிக் கொள்ளவும்.

எண்ணெயை ஒரு வாணலியில் காய்ச்சவும். எண்ணெய் காய்ந்தவுடன் தட்டிய அதிரச மாவை மெதுவாக இட்டு நன்கு பொரித்தெடுக்கவும் (பொன்னிறமாக மாறும் வரை). பொரிக்கும் போது அடுப்பை மிதமான சூட்டில் எரிய விடவும். அதிக எண்ணெயை பொரித்த அதிரசங்களிலிருந்து வடித்தெடுக்கவும் (ஒரு தட்டில் அதிரசத்தை வைத்து, கரண்டியால் அமுக்கி, அதிக எண்ணெயை வடிகட்டலாம்).

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com