இசை அமைப்பாளர் வித்யாசாகரோடு ஒரு உரையாடல்
அவரது தாத்தா விஜயநகர அரசவையில் வித்வான்; அவரது தந்தை எட்டு விதமான வாத்தியங்கள் இசைக்கக் கூடிய கலைஞர். இப்படி இருக்கையில் வித்யாசாகரும் இசைத் துறையில் நுழைந்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. தனது நான்காவது வயதில் கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டு கற்க ஆரம்பித்து இவர் இத்துறையில் அடியெடுத்து வைத்தார். ஆந்திராவில் பிறந்து சென்னையில் வளர்ந்த வித்யாசாகர் மலையாளப் படங்களுக்கு இசை அமைத்து நான்கு மாநில விருதுகள் பெற்றுள்ளார்! தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ('துர்கா') ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார் இவர். விக்ரம் - லைலா நடித்த 'தில்' மற்றும் மாதவன் - மீரா ஜாஸ்மின் நடித்த 'ரன்' படங்களின் வெற்றியும், இப்படங்களின் இசையும் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது. இப்பொழுது வித்யாசாகர் தமிழ்த் திரையுலகில் இரண்டாவது 'ரன்' எடுத்துக்கொண்டிருக்கிறார். இவரோடு ஒரு உரையாடல்.

அவரது பயிற்சி:

நான்காவது வயதில் வாய்ப் பாட்டு கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். 8 வயது ஆகும் போது தன்ராஜ் மாஸ்டரிடம் சேர்ந்தேன். இன்னும் சொல்லபோனால் நானும் A.R. ரஹ்மானும் ஒரே நாளில் தான் இவரிடம் சேர்ந்தோம். 3 - 4 வருடங்கள் கிடார் கற்றுக் கொண்டேன். பின்னர் பியானோ கற்றேன். தியரியில் ஏழாவது கிரேட் செய்தேன். பதினோறாவது வயதில் முன்னணி இசை அமைப்பாளர்களின் குழுவில் நான் ஒரு இசைக் கலைஞனாக இருக்கத் தொடங்கினேன். சென்னையில் தான் ரெகார்டிங் நடைபெற்றதால் பெரும்பாலான மொழிகளுக்கு இசை அமைக்கத் தெரியும். இப்பொழுது எனக்கு 10 வாத்தியங்கள் இசைக்கத் தெரியும்.

இசை அமைப்பாளராகியது பற்றி:

எனது ட்யூன்களை நான் இயற்றி மற்றவர்கள் அதனை வாசிக்க வேண்டும் என்று விரும்பினேன். பல இசை அமைப்பாளர்களுக்கு உதவியாளராக இருந்துள்ளேன். ஒரு சிலருக்கு இசையும் அமைத்துக் கொடுத்திருக்கிறேன் (அவர்கள் பெயரில் தான்). அதனால் எனக்குத் தேவையான அனுபவம் இருந்தது. தனியாக இசை அமைக்க வேண்டும் என்று விரும்பினேன். இயக்குனர் (ராபர்ட்) ராஜசேகரின் 'பொன்மனம்' படத்தில் தான் 1989ம் ஆண்டு இசை அமைப்பாளராக அறிமுகமானேன். நடிகர் - இயக்குனர் அர்ஜுனோடு நல்ல நட்பு உண்டு. அதனால் அவரது பல படங்களுக்கு இசை அமைத்துள்ளேன்.

அவரது மலையாளப் படங்கள் பற்றி:

1996ம் ஆண்டு தான் எனது முதல் மலையாளப் படத்திற்கு இசை அமைத்தேன். மோகன்லால் கதாநாயகனாக நடித்த 'அழகிய ராவணன்' என்ற படம். இப்படத்திற்கு எனக்கு மாநில விருது கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மேலும் மூன்று கேரள அரசு விருதுகள் பெற்றுள்ளேன். 2001ம் ஆண்டு நான் இசை அமைத்த நான்கு படங்கள் தேசிய விருது செலகஷனுக்கு தேர்வு செய்யப்பட்டன. இப்படங்களில் நானும் பங்கு பெற்றேன் என்ற மகிழ்ச்சி எனக்கு இன்றும் உண்டு. 1996 முதல் 2001ம் ஆண்டு வரை மலையாளப் படங்களில் பிசி. பின்னர் தமிழில் 'தில்' படம் வெளியாகியது. நானும் தமிழ்ப் பட இசையில் மீண்டும் பிசியாகி விட்டேன். ஒன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு தான் மீண்டும் மலையாளப் படத்திற்கு இசை அமைக்க முடிந்தது. திலீப் - காவ்யா மாதவன் நடித்த 'மீச மாதவன்' படத்திற்கு நான் தான் இசை அமைத்தேன். படம் மாபெரும் வெற்றி பெற்றது. பாடல்களும் பிரபலம் அடைந்தன. தங்களது மண்வளம் மாறாமல் மென்மையான, பாரம்பரிய சங்கீதம் கலந்த இசையையே அவர்கள் விரும்புகிறார்கள்.

தமிழ்ப் படங்கள் பற்றி:

முன்னமே பல தமிழ்ப் படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும், 'தில்' படம் தான் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தரணி - விக்ரம் கூட்டணியின் அடுத்த படமான 'தூள்' படத்திற்கும் நானே இசை அமைக்கிறேன். சூர்யா மூவிஸ் 'ரன்' படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பு இயக்குனர் லிங்குசாமியால் கிடைத்தது. இவரது 'ஆனந்தம்' படத்திற்கு நான் இசை அமைத்திருந்தேன். அதனால் அவர் எனது பெயரை சிபாரிசு செய்தார். படமும் வெற்றி. பாடல்களும் வெற்றி! இதன் மூலம் எனது மவுசு கூடியுள்ளது.

மற்ற படங்கள் பற்றி:

அஜித் நடித்த 'வில்லன்' படம். அஜித் நடித்து நான் இசை அமைக்கும் மூன்றாவது படம் இது. 'அன்பே சிவம்' படம் ஒரு ஒப்பற்ற வாய்ப்பு என்று கருதுகிறேன். ஏனெனில் நான் கமல் படம் ஒன்றிற்கு இசை அமைக்கிறேன் அல்லவா! மேலும், இயக்குனர் சுந்தர் Cயின் முதல் படமான 'முறை மாமன்' படத்திற்கும் இசை அமைத்திருந்தேன். அதன் பிறகு 'அன்பே சிவம்' மூலமாக மீண்டும் இணைகிறோம். 'இயற்கை', 'பல்லவன்', 'வெல் டன்', 'அன்பே', 'Power of Women'...

பாடல் வரிகளா இசையா?

என்னைப் பொறுத்தமட்டில் பாடல் வரிகள் தான் முக்கியம். எனது இசை மென்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கேட்பவர்கள் அதனை ரசிக்கவேண்டும் அல்லவா. எழுதப்பட்ட பாடல்களுக்கு இசை அமைப்பதையே பெரிதும் விரும்புகிறேன்.

ஆல்பம் பற்றி:

ஆல்பம் செய்யவேண்டும் என்று ஆசை தான். ஆனால் அதற்கு அதிக நேரம் தேவைப்படும். முதலில் ஒரு கருவை எடுத்துக்கொண்டு பிறகு இசை அமைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். ஒரு வேளை அடுத்த வருடம் ஆல்பம் வரலாம். காதல், தேசப் பற்று இவற்றினை தவிர்த்து வேறு ஏதேனும் எடுத்துக்கொள்ள எண்ணியுள்ளேன்.

அறிமுகப்படுத்திய பாடகர்கள் பற்றி:

ஹரிஷ் ராகவேந்தர், புஷ்பா ஸ்ரீராம், ஸ்ரீராம் பார்த்தசாரதி, கோபால் ராவ், மாணிக்கம் வினாயகம், ஸ்ரீவர்தினி போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளேன். காட்சிக்குத் தேவையான குரலைத் தான் தேர்ந்தெடுப்பேன்.

அவரது வெற்றி வாசகம்: இசை அமைக்கும் படங்களின் எண்ணிக்கை வெற்றியை நிர்ணயிக்காது; ஆனால் எவ்வளவு காலம் இத்துறையில் நீடித்து இருந்தோம் என்பது தான்!

முகப்பு வாசகம்:

இசை அமைக்கும் படங்களின் எண்ணிக்கை வெற்றியை நிர்ணயிக்காது; ஆனால் எவ்வளவு காலம் இத்துறையில் நீடித்து இருந்தோம் என்பது தான்!

© TamilOnline.com