நந்தலாலாவின் நிதி திறட்டும் இசை விழா
ஜனவரி மாதம் 20ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சான்ஓசே CET performing Centre-இல் நந்தலாலா மிஷன் நடத்திய நிதி திறட்டும் இசை விழாவில் நடந்த திருமதி ஆஷா ரமேஷ் அவர்களின் கச்சேரி நந்தலாலா துதியுடன் விநாயகர் வந்தனம். தொடர்ந்து ''மாதேமலயத்வஜ'' எனும் கமாஸ்ராக வர்ணம் அடுத்து நாமமதுரா எனும் நாட்டை ராக நாராயணதீர்த்தர் பாடல் யாவும் நல்ல ஆரம்பம்.

சுருதி சுத்தம், நல்ல பாடாந்தரம், வளமான இனிமையான குரல், துரிதகால பாடலில் துல்லியமான உச்சரிப்பு யாவும் பாடகிக்கு சிறப்பாக அமைந்துள்ளது.

சாவேரி ராக ''கரிகளபமுக'' எனம் தீட்சிதர் பாடலில் ராகஆலாபனை, நிரவல் சுரம் யாவும் கனகச்சிதம். ஆஷா அவர்கள் பாடல் முடிந்து பின் ராகத்தின் பெயர், இயற்றியவர் பெயரை அறிவித்தது பொருத்தம். வளைகுடா பகுதியில் நிறைய மாணவ, மாணவிகள் கர்நாடக இசை பயின்று வருவதால் அவர்களுக்கு ராகத்தை பாடும் போது ஊகித்து தெரிந்து கொள்வதில் ஒரு திரில் (thrill) இருக்கும். அனுராதா ஸ்ரீதர் அவர்களின் வயலின் கச்சேரி சர்வசகஜமாக இனிமையுடன் இழைந்தோடியது. 'பார்வதி நினுனே' எனும் கல்கடா ராக சியாமா சாஸ்திரகள் அவர்களின் பாடல் மிக்க உருக்கம்.

''ஆடமோடி கலதே'' எனும் சாருகேசி ராகபாடல விஸ்தாரம் கூடிய விறுவிறுப்பு. ராக ஆலாபனை, கச்சிதமான நிரவல், நறுக்குத் தெரித்தாற் போன்ற சுரகோர்வைகள் யாவும் சிறப்பு. திரு. லால்குடி ஜெயராமன் அவர்களின் ஸ்பெஷலான இப்பாடலில் அவர் சகோதரி மகள் அனுராதா ஸ்ரீதர் ராகத்தின் அபூர்வ பிடிகளை அனாயாசமாக அலட்டிக் காமல் அள்ளி வீசி அவையோரை அசத்தி கைத்தட்டலை பெற்றார். தனி ஆவர்த்தனத் தில் ஸ்ரீராம் பிரம்மானந்தம், ரவி குடாலா இருவரும் மாற்றி மாற்றி சொன்ன கோல், வாசிப்பு என மிடுக்குடன் மிருதங்கம், தபலாவில் தடபுடல் என்னும்படி சளைக் காமல் அபாரமாக வாசித்து நிகழ்ச்சியை களைகட்டச் செய்தனர். பாராட்டுக்கள்.

கர்நாடக இசைகச்சேரி முக்கால் பகுதி முடிந்ததை அடுத்து மெல்லிசை கலந்த பல மொழி பாடல், பஜன்கள் கேட்க ஜன ரஞ்சகமாகவும் மனதிற்கு இதமாகவும் இருந்தது. மராட்டி அபங்க், விருத்தத்துடன் கூடிய பாசுரம், கஜல், புரந்தரதாசர் பாடல், குஜராத்தி பஜன், ஹோலிகீத் யாவும் கலந்த இரண்டரை மணி நேர கச்சேரி மூன்று மணி நேரமாக நீண்டு அமைந்தாலும் நீண்ட நேரம் காதில் கானம் இனிமையுடன் ஒலித்தது. அனைவர்க்கும் பாராட்டுக்கள்.

சீதாதுரைராஜ்

© TamilOnline.com