முயற்சி செய்து பாருங்கள்
முயற்சி செய்து பாருங்கள்

அன்புள்ள,
எனக்கு வாழ்க்கையில் என்றுமே நிம்மதி இருந்ததில்லை. நல்ல வேலையில் இருந்த என் கணவர் அமெரிக்க மோகத்தில் இங்கு வந்தார். நானும் என் bank வேலையை உதறிவிட்டு அவரைத் தொடர்ந்தேன். இரண்டு பெண்கள். நாங்கள் இங்கு வந்து 10 வருடத்துக்கு மேல் ஆகிறது. ஏதோ சாதாரண வேலைதான் கிடைத்தது அவருக்கு. நானும் ஒரு பேங்கில் டெல்லராக வேலைப் பார்க்கிறேன். ஒன்றும் சேர்த்து வைக்க முடியவில்லை. குழந்தைகள் எதிர்காலத்தைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. பணப்பிரச்சனை ஒரு பக்கம். வயது ஆக ஆக உடம்பிலும் வேலை செய்ய சக்தி இல்லை. இதற்கு நடுவில் அவருக்கு ஆஸ்துமா வந்து அவ்வப்போது அவஸ்தைப்படுகிறார். எங்களை தவிர்த்து எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார் போன்ற ஒரு நினைப்பு. என்ன செய்வதென்றே புரியவில்லை (உங்களால் எப்படி உதவ முடியும்)

இச்சகோதரியின் கவலைக்கு இங்கே பதில்:

அன்புள்ள சகோதரி

உங்கள் மனவேதனைப்புரிகிறது. இந்தக் கடிதம் படிக்கும் தினத்திலிருந்து ஒரு 30 நாள் நான் சொல்வதை முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் மனச்சோர்வு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ எனக்கு எழுதுங்கள். இல்லையென்றால் வேறு சில வழிகளை முயற்சி செய்து பார்க்கலாம். இப்போது கீழே குறிப்பிட்டுள்ளபடி தொடர்ந்து 30 நாள் கடைப்பிடிக்கவும். இது முக்கியம்.

1. தினம், தனியான இடத்தில் ஒரு 5 நிமிடம் உங்களை நினைத்து அழுங்கள். கோபமோ, தாபமோ, பகைமையோ, இயலாமையோ, பொறாமையோ எது வேண்டுமானாலும் வரட்டும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாதீர்கள். 3 நிமிடத்தில் அழுகையோ, புலம்பலோ நின்றால்கூட மேலும் 2 நிமிடம் தொடருங்கள்.

2. ஒரு நோட்டு புத்தகம் வாங்கி வைத்துக்கொண்டு அந்த நாளை எழுதி அதற்கு முன் தினம் நடந்த ஏதேனும் உங்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சியை நினைவுக்கூறி எழுதுங்கள். இதிலே சிறிது , பெரிது என்று எதுவுமில்லை. உங்கள் மனதுக்கு விரும்பியதை அது 30 நொடி நிகழ்ச்சியாக இருக்கலாம். இல்லை 3 மணி நேரமாகவும் இருக்கலாம். உதாரணமாக நேற்று சாம்பார் மிக நன்றாக அமைந்தது. மோனிகா அம்மாவென்று ஆசையாக கட்டிக்கொண்டாள். வேலை செய்யும் இடத்தில் நண்பர்களுடன் சாப்பிடப் போனேன், கதை படித்தேன் என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். 2, 3 சம்பவங்கள் இருந்தாலும் எழுதவும். (உங்கள் டைரியை யாரிடமும் காட்டவேண்டாம்)

3. தினமும் கண்களை மூடிக்கொண்டு உள்மூச்சை இழுத்து வாங்குங்கள். முதல் நாள் 30 வினாடி, மறுநாள் 2 நிமிடம், அதற்கடுத்த நாள் 2 நிமிடம் என்று 15 நிமிடம் என்று உங்களுக்கு நேரம் கிடைத்தால் போதும். தினம் 2 நிமிடம் என்று தொடர்ந்தால்கூட போதும்.

4. எந்த வேலை செய்தால் உடம்பில் அசதி பெருகிறது என்று பாருங்கள். முடிக்காத வேலையை முதலில் செய்து முடித்துவிடுங்கள். சில நேரம் மனதில் உற்சாகம் இருந்தால் உடம்பு தளர்வு தெரியாது.

5. ஒரு 'piggy' bank வாங்கி அதில் தினம் கையில் கிடைக்கும் காசை (டாலரோ, சென்ட்ஸோ) போட்டு வாருங்கள்.

மீண்டும் எழுத்துமூலமாக சந்திப்போம்.. வாழ்த்துக்கள்...

டாக்டர். சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com