தேங்காய் அல்வா
தேவையான பொருள்கள்

தேங்காய்த் துருவல் - 500 கிராம்
பச்சரிசி - 50 கிராம்
சர்க்கரை - 500 கிராம்
ஏலக்காய்ப் பொடி - 50 கிராம்

செய்முறை

தேங்காய்த்துருவல், ஊற வைத்தப் பச்சரிசி இவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து வெண்ணெய் போல் அரைக்க வேண்டும்.

அரைத்த தேங்காய் - அரிசி மாவை வெள்ளைத் துணியால் வடிகட்டிப் பாலைப் பிழிந்து கொள்ள வேண்டும்.

மறுபடியும் தண்ணீர் தெளித்து அரைத்த பாலை மறுபடியும் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மீதமுள்ள தேங்காய்ச் சக்கையைத் தூக்கி எறிந்து விடலாம்.

பிழிந்து வைத்திருக்கும் தேங்காய்ப் பாலில் சர்க்கரையைப் போட்டுக் கலந்து கொள்ளவும்.

அடி கனமான ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, தேங்காய்ப்பால் சர்க்கரை கலந்த கலவையை ஊற்றி, அடுப்பில் வைத்துக் கொதிக்க வைக்க வேண்டும்.

அடியில் ஒட்டிக் கொள்ளாமல் கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.

நன்றாகச் சுண்டியதும், நெய் போல் தொட்டால் விரலில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கும். அதுதான் சரியான பதம். பிறகு, அகலமான ஒரு தட்டில் நெய் தடவி, இந்த அல்வாவை அதில் கொட்டி இரண்டு அங்குல கனத்தில் பரப்பி, ஏலக்காய்ப் பொடியை மேலே தூவி, சூடு ஆறிய பின் கத்தியால் சிறு சிறு சதுரத் துண்டுகளாக வெட்டி எடுத்துச் சாப்பிடலாம்.

குறிப்பு - வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தைப் போட்டும் இந்த அல்வாவைத் தயாரிக்கலாம்.

சர்க்கரையினால் தயாரிப்பதனால் சிறிது குங்குமப் பூவை பாலில் கரைத்து, சர்க்கரையைக் கலக்கும் பொழுது சேர்க்க வேண்டும்.

மிகவும் சுவையான வித்தியாசமான பக்குவம் இது.

© TamilOnline.com