அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் தமிழர் விழா
மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம். இனநலம்
எல்லாப் புகழும் தரும். (குறள் 457)

ஆடவைத் (ஆனி)திங்கள் 20, 21, 22 2034ல் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையின் 16வது ஆண்டு தமிழர் விழா (ஜுலை 4, 5, 6, 2003).

நடைபெற இருக்கும் இடமோ அமெரிக்க மண்ணின் 'GARDEN STATE" எனப்படும் ''பூங்காக்களின் புத்தொழில் மாநிலம்'' என்ற நியுஜெர்சி மாநிலம். மண்விட்டு வந்த, தாய் மண் விட்டு வந்த தமிழர்கள் பலருமே, ஆண்டுகள் பலவாக கால்பதித்து, வாழ்வு புதுப்பிக்க, தமக்கென்ற பெருமையுடன் வாழ்ந்து வரும் வடகிழக்குப் பகுதி மாநிலம்! ''நியூயார்க்'' உலகறியும் ''நியூஜெர்சி'' பெருமை - அமெரிக்க மண் அறியும். அமெரிக்க வாழ் தமிழர் அறிவர்! பேரவையின் பெருவிழாக்கள் இங்கு இருமுறை அமைந்த போதிலும், மூன்றாம் முறை என்பதால் ''முத்தமிழ் போல்'' பேரவையின் 2003 விழாவும் முத்தாய்ப்பாய் அமைந்துவிடும் என்றே எண்ணலாம்! ''கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?'' ,'மொழியெல்லாம் தமிழ் மொழியாகிடுமா?'' என நிரூபித்த மொழி ஞாயிறு அவர்கட்டு நூற்றாண்டு விழாவை 2002ல் கொண்டாடி முடித்த சிகாகோ நகர் விழாவிடுத்து, 2003ல் நியூஜெர்சி அமைகிறது எனில், அது பேரவையின் பணி மேலும் சிறப்புறத்தான்! இளையோர் பலர் பங்கு ஏற்று பொறுப்புடன் செயல் ஆற்றி வருகின்றனர்.

அமெரிக்கக்கூட்டுத் தமிழ்ச் சங்கம் என 1987ல் நற்று வைத்த நாற்றுகள், நற்பயிராய் நல்கி இன்று மொழியும், பண்பாடும், கலையும், கலாசாரமும் - விளைநிலம் அமெரிக்க மண்ணில் தழைத்தோங்க பயன்தருகின்றன எனில் அதில் மிகையில்லை. ஏழென்று பேரவையில் உடன் சேர்ந்த தமிழ்ச்சங்கங்கள் இன்று 40 தனையும் தாண்டும் அளவிற்கு வந்துள்ளது. பரந்து கிடக்கும் பெருநகர்களில் பலவாகவும் குறுகிய கிராமப் பகுதிகளில் சிலவாகவும் தமக்கென்று தமிழ்ச் சங்கங்கள் தழைத்தோங்கச் செய்துள்ளன.

மாதந்தோறும், இருமாதமொருமுறை, ஆண்டிற்கு நான்கு முறை என தமக்குள்ளாகவே விழாவெடுத்து தமிழ்மொழி, கலை வளர தம் நேரம் ஒதுக்கி தமிழ்ச்சங்கங்கள் பெருமை அடைந்தன எனில், ஆண்டுதோறும் தன்னோடு இணைந்த தமிழ்ச் சங்கங்கள் உடன்சேர்ப்போடு அற்புத விழாக்களை இரண்டு, மூன்று நான்கு நாட்களென கொண்டாடி பெருமை கண்டது அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை! 16 ஆண்டுகளாக தொடரும் இந்த அமைப்பின் வளர்ச்சி அமெரிக்கா அறியும்!.

தமிழ்மொழி உணர்வு, இன உணர்வு மடைதிறந்த வெள்ளம் போல் பெருக்கெடுக்கும் இந்தநாட்களில்! கவியரங் மென்ன, விவாத அரங்கமென்ன, பட்டிமன்றமென்ன, இசையென்ன, நாடகமென்ன, நாட்டிய நாடக மென்ன, தமிழறிஞர் சுவைப் பேச்சென்ன, கொஞ்சுமொழி பேசிடும் குழதைகள் நிகழ்ச்சி களென்ன, தத்தை மொழி பேசிடும் நங்கையென்ன, தத்துவம் பேசிடும் நல்லோரென்ன என்று ரகம் பார்த்திடக் கழியும் நாட்கள் இவை! இந்த ஆண்டும் இந்த நிறைவான நாட்களை அமெரிக்கவாழ் தமிழ் மக்கள் ஆவலுடனே எதிர்நோக்கியுள்ளனர்.

இதுநாள் வரையும் பெற்ற அனுபவப்படிப்பு தந்த அறிவுரைகள் பலபல! கலையும், கண்காட்சியுமே வாழ்வென்று அமைந்துவிடாது, உலகவாழ் தமிழர் வாழ்வு சுகம் பெற அமையவேண்டும், அதிலும் நம் பங்கு நிச்சயம் அமைந்திட வேண்டுமென்ற இனஉணர்வும் வளரத் தான் வளரந்துள்ளது. 'இனக்காப்பு' இணைபிரியா அங்கமாகியது. தமிழ்ப்பண்பாளர்கள் நற்றமிழ் நவில் நாட்டினின்று அழைக்கப்பட்டனர் ஆண்டுதோறும்! தமக்குச் சிறு அளவில் செயல்பட்டத் தமிழ்ச் சங்கங்கள் ''நற்றமிழ் நவில் அறிஞோர்'' அழைத்து அவரோடு அளவளாவும் வாய்ப்பு பெற்றனர். கவிதையும், கருத்துத் தமிழும் அமெரிக்க மண்ணில் உலா வர பேரவை அமைத்த தமிழறிஞர்களால் நிறைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக தமிழுடன் தமிழ் கலைகளும் அமெரிக்க சுற்றுலா செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. நாடகங்களும், நடனங்களும் அமெரிக்க மண் வாழ் தமிழர் யாவருமே அனுபவிக்கும் நற்சுவைகளாயின. நம்மிடையே சில மாதங்கள் உறவாடிச் சென்றவர் ''தமிழறிஞர்கள்''. ''தமிழ்க் கலைஞர்கள்'' என்றால், ஆண்டு ஒவ்வொன்றும் நம்மால் மதிக்கப்பட்ட தமிழறிஞர்க்கு ''மாட்சிமைப் பரிசு'' அளித்து நாம் பெருமை பெற்றோம். இவ்வாண்டும், இனி வரும் ஆண்டும் இவை தொடரும். இவையாவும் இனிது நடைபெற, தமிழர் தம் முற்றிலுமான ஆதரவும், பங்கும் அமைய வேண்டும். ஜுலை 4ஐ தொடர்ந்து அமையும் நாட்கள் 'தமிழர் விழா'' நாட்கள்! தமிழ் உறவுகள் யாவும் ஒன்று சேர்ந்து, உள்ளம் மகிழ்ந்து, இனிது பேசி, இன்ப நிகழ்ச்சிகள் கண்டு மகிழ ஏற்பட்ட நாட்கள்! இவையாவும் செயலாக மலர உழைப்போர் பலர் என்றாலும் திரளான தமிழர் வருகை என்பது மட்டுமே அவர்கள் எதிர்பார்த்து நிற்பது! இவ்வாண்டு 2003 விழாவில் பங்கு பெற உள்ளோர் இவ்வாண்டு 2003 விழாவில் பங்கு பெற உள்ளோர் பெரியவர் வா.செ. குழந்தைசாமி - தமிழ் இணையக் கல்லூரி ஏற்படுத்த முதலில் நின்ற பெரியவர்! கருத்தாழமும் சொல்லாழமும் பண்பாழமும் ஒன்று சேர்ந்த இவரின் வருகை அடிக்கடி கிடைக்கக் கூடிய வாய்ப்பில்லை.அடுத்து அமையும் பெரியவர் முன்பே அறிமுகம் ஆனவர் என்றாலும் இன்றும் தமிழோடு வாழ்வு நடத்தி வரும் இவர் பேச்சுக்கலையில் வல்லவர். இவர் நடத்தாத பட்டிமன்றங்கள் இல்லை.

பட்டிமன்றத்திற்கு முன்னவர் இவர். கதிரவன் தொலைக்காட்சியில் தினமும் தம் சொல்லாற்றல் காட்டி வருபவர் சாலமன் பாப்பையா என்றால் அதில் மிகை ஏதும் கிடையாது. இவரைத் தொடர்ந்து இளைய வராய் மதுரைப் பேராசிரியர் ஞானசம்பந்தன்- நகைச்சுவை இவர் பேச்சில்! நமக்கெல்லாம் திகைப்பாகும்! - மொழியின்பம் மட்டுமே என்று விட்டுவிடாது மொழி இன்பத்தோடு - உலக அரங்கில் உயர் தொழிற்புரட்சியும் செய்து வரும் தமிழ்க் காவலர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களும் நம்மோடு உடன் இருப்பார். தமிழோடு தமிழ்க் கலைகள். ''தமிழ்க்கூத்து, கரகம், பொய்க்கால் குதிரையாட்டம், வில்லுப்பாட்டு, நாட்டுப்பாடல் என விருந்தளிக்க தமிழ்நாட்டு தமிழ்வித்தகர் இங்கு இருப்பர். காலத்தோடு இணைந்த கலையாக திரைப்பட நகைச்சுவை மன்னரான ''மணி வண்ணன்''அவருடன் இணையென ''கோவைசரளா'' மற்றும் ''மயில்சாமி'' - தமிழர் விழாவென்றால் இசைக்கு இடமில்லாது போகாது. இசை தர வருபவர்கள் சங்கர் மகாதேவனும், மகாலட்சுமியும் தம் குழுவுடன்-என்றால் அமெரிக்கத் தமிழர் மனம் இப்போதே இசை பாட ஆரம்பித்துவிடும். ஆட்டமும் பாட்டமும் உண்டு, நமதருமை செல்வங்கள் இறையோர் குழு அமைத்து தரவிருக்கும் நிகழ்ச்சி பலவும் அமையும். மூன்று நாட்கள். ஜூலை 4, 5, 6 நாட்களை உங்களுக்கு அமைந்த ஓய்வு, உல்லாச நாட்களாகட்டும். தமிழ் உள்ளங்களோடு மனம் திளைத்து மகிழ அவசியம் வாருங்கள். நியுஜெர்சிக்கு ஜூலை 4,5,6 நாட்களில்!

''எங்கள் உறவினர் திருமணம்'' கண்ட மகிழ்ச்சிதான் என் உள்ளத்தில்'' என்று மகிழ்வுடன் கூறிய பெண்மணி - ''சிகாகோ 2002 விழாவிற்குப் பின்னர் எனக்கு எற்பட்ட உணர்வைத்தான் கூறுகிறேன்'' என்றார். அவர்கூறிப்பிட்டது சரிதானே!

© TamilOnline.com