கின்னஸ் எலிக் கூண்டு
தொடர்ந்து 50 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடி, பலரின் அமோகமான பாராட்டுகளோடு 51ஆவது ஆண்டிற்குள் ஒரு நாடகம் நுழைந்திருக்கிற தென்றால் அது நிச்சயம் கின்னஸ் சாதனைதானே!. இப்படிப் பட்ட சாதனையை நிகழ்த்தியிருப்பது, அகாதா கிறிஸ்டி எழுதிய 'எலிக் கூண்டு'' (the mouse trap) நாடகம்.

மறைந்த ராணி மேரியின் பிறந்த நாள் பரிசாக, இந்த நாடகம் உருவாக்கப்பட்டது. பிபிசி க்காக ''முன்று குருட்டு எலிகள்'' என்ற பெயரில் எழுதப்பட்ட இந்நாடகம் மேடை ஏறும் போது எலிக்கூண்டு என்று பெயரிடப்பட்டது. முதன் முறையாக 1952 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி, லண்டனிலுள்ள செயின்ட் மார்டின் அரங்கத்தில் இந்த நாடகம் அரங்கேறியது.

இந்த நாடகத்தின் முதல் தயாரிப்பாளரான ஸர் பிடர் ஸாண்டர்ஸோ, அகதா கிறிஸ்டியோ நாடகத்தை முதன் முறையாகத் தயாரித்தபோது, இந்த அளவுக்கு அபார வெற்றியைப் பெறும் என்று இவர் சத்தியமாக எதிர்பார்த்திருக்க மாட்டார். இந்த நாடகத்தில் மேயர் மெட்கா·ப்பாக நடித்த நடிகர் டேவிட் ரேவன் 4575 முறை நடித்து கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

தான் எழுதிய நாடகம் 50 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையிலும் இன்றும் மக்களின் ஏற்பைப் பெற்றுத் தொடர்ந்து அரங்கத்தில் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்து சந்தோஷப்பட அகாதா கிறிஸ்டி இப்போது உயிரோடு இல்லை என்றாலும், இவரது புகழை தலைமுறை தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் வகையில் இந்த கின்னஸ் (எலிக்) கூண்டு அமைந்திருக்கிறது.


T.K. ஸ்ரீநிவாசன்

© TamilOnline.com