தேங்காய் பால் பாயாசம்
(சித்ரா பெளர்ணமியன்று தயாரிக்கப்படும் பாயாசம் இது.)

தேவையான பொருட்கள்:

தேங்காய்ப் பால் - 2 கிண்ணம் (கட்டியானது)(வீட்டிலேயே தேங்காய் துருவி அரைத்துப் பால் எடுக்கலாம். அல்லது கடையில் ரெடிமேடாகக் கிடைப்பதை வாங்கிப் பயன்படுத்தலாம்.)
பால் - 1/2 கிண்ணம்
பச்சரிசி - 2 தேக்கரண்டி (1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கப்பட்டது)
வெல்லம் - 1 1/2 கிண்ணம்
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துண்டுகள் - 1/4 கிண்ணம் வறுத்தது

செய்முறை:

தேங்காயைத் துருவிக்கொண்டு அத்துடன் ஊறவைத்த அரிசியையும் சேர்த்து அதை மிக்ஸியில் போட்டு அரையுங்கள். இதைப் பிழிந்து தேங்காய்ப் பால் எடுத்து மீண்டும் ஒரு முறை இதே போல் அரைத்துப் பிழியுங்கள். கெட்டியான தேங்காய்ப்பால் கிடைக்கும் வரை இப்படி அரைத்துப் பிழியலாம். இப்படிச் செய்யும்போது நிறைய நீர் சேர்க்க வேண்டாம். சேர்த்தால் தேங்காய்ப்பால் நீர்த்துப்போய்விடும்.

வெல்லத்தை 1/4 கிண்ணம் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அடுப்பிலேற்றி கம்பிப்பதம் வரும்வரை கொதிக்க விடுங்கள். இத்துடன் தேங்காய்ப்பாலையும், பாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அது கொதிக்கத் தொடங்கும்போது, அதாவது நுரைத்துப் பொங்கி வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள். ஏலக்காய் பொடியையும் வறுத்த தேங்காய் துண்டுகளையும் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com